திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

யோபு தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு


யோபு

முன்னுரை :

விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் , யோபு , என்னும் இந்நுhல் தலை சிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர்கடவுளைத்; துhற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு , நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?, என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இந்நுhல்.

இந்நுhலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.

நுhலின் பிரிவுகள்

1) முகவுரை 1:1 - 2:13

2) யோபும் அவர்தம் நண்பர்களும் 3:1 - 31:40

அ) யோபின் முறையீடு 3:1 - 26

ஆ) முதல் உரையாடல் 4:1 - 14:22

இ) இரண்டாம் உரையாடல் 15:1 - 21:34

ஈ) மூன்றாம் உரையாடல் 22:1 - 27:23

--------------------------------------------

 

அதிகாரம் 1


1 ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.

2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.

3 அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியராக இருந்தார்.

4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.

5 விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். "என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்" என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.

6 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான்.

7 ஆண்டவர் சாத்தானிடம், "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.

8 ஆண்டவர் சாத்தானிடம், "என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார்.

9 மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் "ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?

10 அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து "நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?

11 ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" என்றான்.

12 ஆண்டவர் சாத்தானிடம், "இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

13 ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்;த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.

14 அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, "எருதுகள் உழுதுகொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.

15 அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

16 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

17 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

18 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.

19 அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

20 யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி,

21 "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார்.

22 இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

அதிகாரம் 2


1 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.

2 ஆண்டவர் சாத்தானிடம் "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.

3 அப்போது ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.

4 சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், "தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.

5 உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி" என்றான்.

6 ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ! அவன் உன் கையிலே! அவன் "உயிரை மட்டும் விட்டுவை" என்றார்.

7 சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.

8 ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.

9 அப்போது அவரின் மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள்.

10 ஆனால் அவர் அவளிடம், "நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

11 அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர் தம்மிடமிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.

12 தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.

13 அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வாhத்தைகூட அவருடன் பேசவில்லை.

அதிகாரம் 3


1 இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.

2 யோபு கூறியது;

3 "ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே!

4 அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.

5 காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக்கொள்ளட்டும்; கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்; பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும்.

6 அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக! ஆண்டின்; நாள்கணக்கினின்று அது அகற்றப்படுவதாக! திங்கள் எண்ணிக்கையிலும் அது சேரா தொழிக!

7 அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்; மகிழ்ச்சியொலி ஒன்றும் அதில் எழாதிருக்கட்டும்;

8 பகலைப் பழிப்போரும் லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும் அதனைப் பழிக்கட்டும்.

9 அதன் விடியற்காலை விண்மீன்கள் இருண்டு போகட்டும்; அது விடியலொளிக்குக் காத்திருக்க அதுவும் இல்லாமற்போகட்டும்; அது வைகறையின் கண்விழிப்பைக் காணாதிருக்கட்டும்.

10 ஏனெனில் என் தாயின் கருப்பையை அவ்விரவு அடைக்காமற்போயிற்றே! என் கண்களினின்று வேதனையை அது மறைக்காமற் போயிற்றே!

11 கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?

12 என்னை ஏந்த முழங்கால்கள் முன் வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?

13 இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன்.

14 பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும்

15 அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன்.

16 அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.

17 அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

18 சிறைப்பட்டோர் அங்கு நிம்மதியாகக் கூடியிருப்பர்; ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.

19 சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்; அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.

20 உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்?

21 சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்த பாடில்லை.

22 கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்?

23 எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?

24 பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.

25 ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ? அதுவே எனக்கு நேர்ந்தது; திகிலுற்றது எதுவோ அதுவே என்மேல் விழுந்தது.

26 எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது. "

அதிகாரம் 4


1 அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்;

2 "ஒன்று சொன்னால் உமக்குப் பொறுக்குமோ? சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?

3 பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!

4 உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.

5 ஆனால் இப்பொழுதோ, ஒன்று உமக்கு வந்துற்றதும் வருந்துகின்றீர்; அது உம்மைத் தாக்கியதும் கலங்குகின்றீர்.

6 இறையச்சம் அல்லவா உமது உறுதி? நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?

7 நினைத்துப்பாரும்! குற்றமற்றவர் எவராவது அழிந்ததுண்டா? நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?

8 நான் பார்த்த அளவில், தீவினையை உழுது, தீங்கினை விதைத்தவர் அறுப்பது அதையே!

9 கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்; அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.

10 அரியின் முழக்கமும் கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்; குருளையின் பற்களும் உடைபடும்.

11 இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்; குலைந்துபோம் பெண்சிங்கத்தின் குட்டிகள்.

12 எனக்கொரு வார்த்தை மறைவாய் வந்தது; அதன் மெல்லிய ஓசை என் செவிக்கு எட்டியது.

13 ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில், இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,

14 அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள, என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.

15 ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது; என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.

16 ஆவி நின்றது; ஆனால், அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை; உருவொன்று என் கண்முன் நின்றது; அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.

17 கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா? படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?

18 அவர் தம் தொண்டர்களிலே நம்பிக்கை வைக்கவில்லையெனில், அவருடைய வான தூதரிடமே அவர் குறைகாண்கின்றாரெனில்,

19 புழுதியைக் கால்கோளாகக்கொண்டு, மண் குடிசையில் வாழ்ந்து, அந்துப்ப+ச்சிபோல் விரைவில் அழியும் மனிதர் எம்மாத்திரம்?

20 காலைமுதல் மாலைவரையில் அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி என்றென்றும் அழிக்கப்படுவர்.

21 அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட, அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?

அதிகாரம் 5


1 இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?

2 உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்; பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

3 அறிவிலி வேரூயஅp;ன்றுவதை நானே கண்டேன்; ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,

4 அவனுடைய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்; மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்; முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர் அவன்; சொத்துக்காகத் துடிப்பர்.

6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது; மண்ணினின்று இன்னல் விளையாது.

7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்; அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

9 ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்; அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்; அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்; வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;

14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்; நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.

15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்; எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.

16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு; அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்; ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.

18 காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.

19 ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்; ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

20 பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.

21 நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்; நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்; மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

23 வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்; காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.

24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்; உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

25 உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப்புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

26 பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுனர்வீர்.

அதிகாரம் 6


1 யோபு கூறிய பதிலுரையாவது;

2 ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!

3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை; பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே;

4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு என்; உயிரைக் குடிக்கின்றது; கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.

5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?

6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?

7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது; அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!

8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?

9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?

10 அதுவே எனக்கு ஆறுதலாகும்; அழிக்கும் அல்லலிலும்; அகமகிழ்வேன்; தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்; ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.

11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?

12 என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ?

13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை; என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.

14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.

15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.

16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்; அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.

17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.

18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது; பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.

19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்; நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.

20 அவர்கள் நமிபியிருந்தனர்; ஆனால், ஏமாற்றமடைகின்றனர்; அங்கு வந்தடைந்தனர்; ஆனால் திகைத்துப் போகின்றனர்.

21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்; என் அவலம் கண்டீர்கள்; அஞ்சி நடுங்குகின்றீர்கள்.

22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?

23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?

24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்; என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!

25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?

26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?

27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்; நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.

28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்; உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,

29 போதும் நிறுத்துங்கள்; அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;

30 என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?

அதிகாரம் 7


1 மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?

2 நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,

3 வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.

4 படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்,

5 புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை; வெடித்தது என் தோல்; வடிந்தது சீழ்.

6 என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.

7 என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

8 என்னைக் காணும் கண் இனி என்னைப் பார்க்காது. என் மேல் உம் கண்கள் இருக்கும்; நானோ இரேன்.

9 கார்முகில் கலைந்து மறைவதுபோல் பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.

10 இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்; அவர்களது இருப்பிடம் அவர்களை அறியாது.

11 ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்; என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்; உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.

12 கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா? காவல் என்மீது வைக்கலானீர்!

13 "என் படுக்கை ஆறுதல் அளிக்கும்; என் மெத்தை முறையீட்டைத் தணிக்கும்;;" என்பேனாகில்,

14 கனவுகளால் என்னைக் கலங்க வைக்கின்றீர்; காட்சிகளால் என்னைத் திகிலடையச் செய்கின்றீர்.

15 ஆதலால் நான் குரல்வளை நெரிக்கப்படுவதையும் வேதனையைவிடச் சாவதையும் விரும்புகின்றேன்.

16 வெறுத்துப்போயிற்று; என்றென்றும் நான் வாழப்போவதில்லை; என்னைவிட்டுவிடும். ஏனெனில் என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.

17 மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க?

18 காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?

19 எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா?

20 மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?

21 ஏன் மீறலை மன்னியாதது ஏன்? என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்? இப்பொழுதோ நான் மண்ணுக்குள் உறங்கப் போகின்றேன்; நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.

அதிகாரம் 8


1 அதற்குச் சூகாயனான பில்தாது கூறிய பதில்;

2 எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்? உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன.

3 இறைவனே நீதியைப் புரட்டுவாரா? எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?

4 உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.

5 ஆனால், நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால், எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,

6 நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தால் இப்பொழுது கூட அவர் உம்பொருட்டு எழுந்திடுவார், உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.

7 உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும், உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.

8 முன்னோரின் தலைமுறையைக் கேட்டுப்பாரும்; அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.

9 நேற்றுத் தோன்றிய நாம் என்றும் அறியோம்; நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,

10 அவர்களன்றோ உமக்கு அறிவித்து உணர்த்துவர்! புரிந்த வார்த்தைகளை உமக்குப் புகட்டுவர்!

11 சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?

12 இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.

13 இறைவனை மறப்போரின் கதி இதுவே; இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;

14 அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்; அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.

15 யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால், அது நில்லாதுபோம்; யாராவது அதை பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.

16 பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்; படரும் தோட்டமொங்கும் அவர்களின் கிளைகள்.

17 கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள் கற்களிடையே இடம் தேடும்.

18 அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால், 'உங்களை நான் கண்டதேயில்லை' என உதறிவிடும் அவ்விடம்.

19 பார்! அவர்கள் தம் வாழ்வில் கண்ட இன்பம் இதுவே; மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.

20 இதோ! கறையிலாதவரை இறைவன் கைவிடுவதில்லை; காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.

21 இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும், இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.

22 உம்மைப் பகைப்பர் வெட்கத்தால் உடுத்தப்படுவர்; தீயோர் கூடாரம் இல்லாது போகும்.

அதிகாரம் 9


1 யோபு அதற்கு உரைத்த பதில்;

2 உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?

3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்?

5 அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்.

6 அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள்.

7 அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

8 தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே.

10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை; நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை.

12 இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்?

13 கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்; அவரடி பணிந்தனர் இராகாபின் துணைவர்கள்.

14 இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்?

15 நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்; என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்.

16 நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

17 புயலினால் என்னை நொறுக்குவார்; காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார்.

18 அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

19 வலிமையில் அவருக்கு நிகர் அவரே! அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?

20 நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.

21 குற்றமற்றவன் நான்; என்னைப்பற்றிக் கவலையில்லை; என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.

22 எல்லாம் ஒன்றுதான்; எனவேதான் சொல்கின்றேன்; "அவர் நல்லாரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்'.

23 பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார்.

24 வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளை கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

25 ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்; அவை பறந்து செல்கின்றன; நன்மையொன்றும் அவை காண்பதில்லை.

26 நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்; இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.

27 'நான் துயர் மறப்பேன்; முகமலர்ச்சி கொள்வேன்; புன்முறவல் ப+ப்பேன், எனப் புகல்வேனாயினும்,

28 என் இடுக்கண் கண்டு நடுக்க முறுகின்றேன், ஏனெனில், அவர் என்னைக் குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.

29 நான்தான் குற்றவாளி எனில், வீணே ஏன் நான் போராடவேண்டும்?

30 பனிநீரில் நான் என்னைக் கழுவினும், சவர்க்காரத்தினால் என் கைகளைத் தூய்மையாக்கினும்,

31 குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்; என் உடையே என்னை வெறுத்திடுமே!

32 ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும், வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும் என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.

33 இருவர்மீதும் தம் கையை வைக்க, ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.

34 அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து! அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்!

35 அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது; அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது.

அதிகாரம் 10


1 என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்; உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன்.

2 நான் கடவுளிடம் சொல்வேன்; என்னைக் கண்டனம் செய்யாதீர்; என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர்.

3 என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும் உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ?

4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன? உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை?

5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்? மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்?

6 பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்? ஏன் என் பாவங்களைக் கிளருகின்றீர்?

7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும், உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை.

8 என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர்.

9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?

10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைவிக்கவில்லையா?

11 எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்; தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.

12 வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது.

13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன்.

14 நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்; என் குற்றத்தை எனக்குச் சுட்டிக்காட்டாது விடமாட்டீர்; நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர்.

15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்! நான் நேர்மையாக இருந்தாலும் தலைதூக்க முடியவில்லை; ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன்.

16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல் என்னை வேட்டையாடுவீர்; உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்;

17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்; என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்; எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர்.

18 கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்? கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா?

19 உருவாகாதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா? கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே;

20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே; என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;

21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்;த திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.

22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை; ஒளியும் இருள்போல் இருக்கும்.

அதிகாரம் 11


1 அதற்கு நாமாவியனான சோப்பார் சொன்ன மறுமொழி;

2 திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா? மிகுதியாகப் பேசுவதால், ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?

3 உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?

4 "உன் அறிவுரை தூயது; நானும் என் கண்களுக்கு மாசற்றவன்" என்கின்றீர்.

5 ஆனால், "கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை உமக்கெதிராயத் திறக்கட்டும்" என யாரேனும் அவரை வேண்டாரோ!

6 அவரே ஞானத்தின் மறைபொருளை உமக்கு அறிவிக்கட்டும்; அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்; கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை மறந்தார் என்பதை அறிக!

7 கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?

8 அவை வானங்களை விட உயர்ந்தவை; நீர் என்ன செய்வீர்? அவை பாதாளத்தைவிட ஆழமானவை; நீர் என்ன அறிவீர்?

9 அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது; ஆழ்கடலைவிட அகலமானது.

10 அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும், அவைமுன் நிறுத்தினாலும் அவரைத் தடுப்பார் யார்?

11 ஏனெனில், அவர் மனிதரின் ஒன்றுமில்லாமையை அறிவார்; தீமையைக் காண்கின்றார்; ஆனால், அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

12 காட்டுக்கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால், அறிவிலியும் அறிவு பெறுவான்.

13 உம்முடைய உள்ளத்தை நீர் ஒழுங்குபடுத்தினால், உம்முடைய கைகளை அவரை நோக்கி நீட்டுவீராக!

14 உம் கையில் கறையிருக்குமாயின் அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில் தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.

15 அப்போது உண்மையாகவே நாணமின்றி உம் முகத்தை ஏறெடுப்பீர்; நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.

16 உம் துயரை நீர் மறந்துபோவீர்; கடந்துபோன வெள்ளம்போல் அதை நினைகூர்வீர்.

17 உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்; காரிருளால் மூடப்பட்டிருந்தாலும் காலைபோல் ஆவீர்;

18 நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்; சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;

19 ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்; உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;

20 தீயோரின் கண்கள் மங்கிப்போம்; அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்; உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!

அதிகாரம் 12


1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி;

2 உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!

3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு; உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்; இத்தகையவற்றை யார்தான் அறியார்?

4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.

5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்; அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.

6 கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச்; சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!

7 இருப்பினும், விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.

8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.

9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?

10 அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன.

11 செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?

12 முதியோரிடம் ஞானமுண்டு; ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.

13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!

14 இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது; அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.

15 இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்; வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.

16 வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன; ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!

17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.

18 அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்; அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்;

19 குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்; நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்;

20 வாய்மையாளரின் வாயை அடைக்கினார்; முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்;

21 உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்; வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்;

22 புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார். காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.

23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்; மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார்.

24 மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.

25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்; குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.

அதிகாரம் 13


1 இதோ! இவை என் கண்களே கண்டவை; என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.

2 நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்; நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை.

3 ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,

4 நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்; நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.

5 ஐயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்; அதுவே உங்களுக்கு ஞானமாகும்.

6 இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்; என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.

7 இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா? அவர்பொருட்டு வஞ்சகமாயப் பேசுவீர்களா?

8 கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா?

9 அவர் உங்களை ஆராய்ந்தால் உங்களில் நல்லதைக் காண்பாரா? அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா?

10 நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால் உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.

11 அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா? அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா?

12 உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்; உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்மையொத்த வாதங்கள்.

13 பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்.

14 என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?

15 அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன்.

16 இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்; ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.

17 என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்; என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.

18 இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்; குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.

19 இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது? அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன்.

20 எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்; அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன்.

21 உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்; உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.

22 பின்னர் என்னைக் கூப்பிடும்; நான் விடையளிப்பேன்; அல்லது என்னைப் பேசவிடும்; பின் நீர் மறுமொழி அருளும்.

23 என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை? என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும்.

24 உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?

25 காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ? காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?

26 கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்; என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்.

27 என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்; கண் வைத்தீர் என் பாதை எல்லாம்; காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர்.

28 மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்; அந்துப்ப+ச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.

அதிகாரம் 14


1 பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு. வருத்தமோ மிகுதி.

2 மலர்போல் ப+த்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.

3 இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்? தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?

4 அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா? யாராலும் முடியவே முடியாது.

5 அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது; அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.

6 எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்; அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல், அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.

7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு; அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.

8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,

9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்; இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.

10 ஆனால், மனிதர் மடிகின்றனர்; மண்ணில் மறைகின்றனர்; உயிர் போனபின் எங்கே அவர்கள்?

11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்; ஆறும் வறண்டு காய்ந்துபோம்.

12 மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்; வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை; அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.

13 ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?

14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.

15 நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்; உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்.

16 அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்; என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.

17 என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்; என் குற்றத்தை மூடி மறைத்தீர்.

18 ஆனால் மலை விழுந்து நொறுங்கும்; பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.

19 கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்; நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்; இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.

20 ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்; ஒழிந்துபோவான் அவனும்; அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.

21 புதல்வர்கள் புகழ்பெறினும் அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும் அதை அவன் கண்டான் இல்லை.

22 அவன் உணர்வது தன் ஊனின் வலியையே; அவன் புலம்புவது தன் பொருட்டே.

அதிகாரம் 15


1 அதற்குத் தேமானியனான எலிப்பாசு சொன்னான்;

2 வெற்று அறிவினால் ஞானி விடையளிக்கக்கூடுமோ? வறண்ட கீழ்க்காற்றினால் வயிற்றை அவன் நிரப்பவோ?

3 பயனிலாச் சொற்களாலோ, பொருளிலாப் பொழிவினாலோ அவன் வழக்காடத் தகுமோ?

4 ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்; இறைச்சிந்தனை இல்லாது போனீர்.

5 உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது; வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.

6 கண்டனம் செய்தது உம் வாயே; நானல்ல; உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.

7 மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ? மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?

8 கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ? ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?

9 எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்? எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?

10 நரைமுடியும் நிறைவயதும்கொண்டு, நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர் எங்களிடை உள்ளனர்.

11 கடவுளின் ஆறுதலும், கணிவான சொல்லும் உமக்கு அற்பமாயினவோ?

12 மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்? உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?

13 அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்; வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.

14 மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்? நேர்மையாளராய் இருக்கப் பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?

15 வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்; வானங்களும் அவர்தம் கண்முன் தூயவையல்ல;

16 தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்?

17 கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்; நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;

18 ஞானிகள் உரைத்தவை அவை! அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!

19 அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது; அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.

20 துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.

21 திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்; நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.

22 அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்; வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.

23 எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்; இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர்.

24 இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்; போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.

25 ஏனெனில், இறைவனுக்கு எதிராக அவர்கள் கையை ஓங்கினர்; எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.

26 வணங்காக் கழுத்தோடும் வலுவான பெரிய கேடயத்தேடும், அவரை எதிர்த்து வந்தனர்.

27 ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது; அவர்களின் தொந்தி பருத்துள்ளது.

28 பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.

29 அவர்கள் செல்வர் ஆகார்; அவர்களின் சொத்தும் நில்லாது; அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.

30 இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை; அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.

31 வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்; ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.

32 அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்; அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;

33 பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும் ப+க்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர்.

34 ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும்.

35 இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்; வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.

அதிகாரம் 16


1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி;

2 இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; "புண்படுத்தும் தேற்றுவோர்" நீவிர் எல்லாம்.

3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?

4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்; என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.

5 ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே!

6 நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.

7 உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.

8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.

9 அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.

10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.

11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;

12 நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார்.

13 அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்; என் ஈரலை அவர் பிளந்து விட்டார்; ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார்.

4 முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.

15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்; புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.

16 அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின,

17 இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை; மாசு என் மன்றாட்டில் இல்லை.

18 மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே.

19 இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.

20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.

21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்.

22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.

அதிகாரம் 17


1 என் உயிர் ஊசலாடுகின்றது; என் நாள்கள் முடிந்துவிட்டன; கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.

2 உண்மையாகவே, எள்ளி நகைப்போர் என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது.

3 நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்?

4 அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்; அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர்.

5 கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.

6 என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்; என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.

7 கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன; என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.

8 இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்; குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர்.

9 நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்; கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.

10 ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள். வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன்.

11 கடந்தன என் நாள்கள்; தகர்ந்தன என் திட்டங்கள்; அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.

12 அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்; ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.

13 இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,

14 படுகுழியை நோக்கி "என் தந்தையே" என்றும், புழுவை நோக்கி "என் தாயே, என் தமக்கையே" என்றும் புகல்வேனாகில்,

15 பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?

16 நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?

அதிகாரம் 18


1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்;

2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.

3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?

5 தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.

6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.

7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.

8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்; சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.

11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்; அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.

15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.

16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.

21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே; இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.

அதிகாரம் 19


1 பின் யோபு உரைத்த மறுமொழி;

2 என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்? என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?

3 பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்; வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.

4 உண்மையாகவே நான் பிழை செய்திருந்தாலும் என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?

5 எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில், என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,

6 கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும், வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!

7 இதோ! 'கொடுமை' எனக் கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை; நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.

8 நான் கடந்துபோகாவண்ணம், கடவுள் என் வழியை அடைத்தார்; என் பாதையை இருளாக்கினார்.

9 என் மாண்பினை அவர் களைந்தார்; மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.

10 எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்; நான் தொலைந்தேன்; மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.

11 அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த் தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய் என்னையும் எண்ணுகின்றார்.

12 அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன; அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்; என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.

13 என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்; எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்;

14 என் உற்றார் என்னை ஒதுக்கினர்; என் நண்பர்கள் என்னை மறந்தனர்.

15 என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்; அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.

16 என் அடிமையை அழைப்பேன்; மறுமொழி கொடான்; என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

17 என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.

18 குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்; நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.

19 என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.

20 நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்; நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.

21 என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.

22 இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

23 ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?

24 இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

25 ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.

26 என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.

27 நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

28 ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்; 'அவனை எப்படி நாம் வதைப்பது? அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?'

29 மாறாக-வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்; ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்; அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.

அதிகாரம் 20


1 அதற்கு நாமாயனான சோப்பார் கூறின பதில்;

2 என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு, என் எண்ணங்கள் பதில் சொல்ல வைக்கின்றன.

3 என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்; நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது.

4 மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து, தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா?

5 கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே!

6 அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும்,

7 அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்; அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.

8 கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்; இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.

9 பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது; வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

10 ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்; அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.

11 எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.

12 தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,

13 இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,

14 வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;

15 செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்; இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.

16 விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்; கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.

17 ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும், தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார்.

18 தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்; அதை அவர்கள் உண்ணமாட்டார்; வணிகத்தின் வருவாயில் இன்புறார்.

19 ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்; தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.

20 அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை; ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார்.

21 அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை; எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது.

22 நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்; அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும்.

23 அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

24 அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!

25 அவர்கள் அதைப் பின்புறமாக இழப்பர்; மின்னும் முனை பிச்சியிலிருந்து வெளிவரும்; அச்சம் அவர்கள் மேல் விழும்.

26 காரிருள் அவர்களது கருவ+லத்திற்குக் காத்திருக்கும்; மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.

27 விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்.

28 அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்; இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.

29 இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.

அதிகாரம் 21


1 அதற்கு யோபு கூறிய மறுமொழி;

2 நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்; இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.

3 பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்; நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.

4 என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா? இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?

5 என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்; கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.

6 இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகின்றேன்; நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.

7 தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? வலியோராய் வளர்வதேன்?

8 அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்; அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.

9 அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.

10 அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை; அவர்களின் பசுக்கள் கருவுறும்; ஆனால் கரு கலைவதில்லை.

11 மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்; அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.

12 அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.

13 அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்; அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.

14 அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்; 'எம்மை விட்டு அகலும்; ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை;'

15 எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய? அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?

16 இதோ! அவர்களின் வளமை அவர்களின் கையில் இல்லை. எனவே தீயோரின் ஆலோசனை எனக்குத் தொலையிலிருப்பதாக!

17 எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.

18 அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்; சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.

19 அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்; அவர்களும் அதை உணர்வர்.

20 அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்; எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.

21 அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின், அவர்களது இல்லத்தில் அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?

22 இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்? ஏனெனில், அவரே உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.

23 சிலர் வளமையோடும் வலிமையோடும் நிறைவோடும் முழு அமைதியோடும் சாகின்றனர்.

24 அவர்களின் தொடைகள் கொழுப்பேறி உள்ளன; அவர்களின் எலும்புகளின் சோறு உலரவில்லை.

25 வேறு சிலர், கசந்த உள்ளத்துடன் இனிமையையச் சுவைக்காதவராயச் சாகின்றனர்;

26 புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்; புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

27 இதோ! உம் எண்ணங்களையும் எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும் நான் அறிவேன்.

28 ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்; 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'

29 வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா? அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?

30 தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?

31 யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்? யார் அவர்களின் செயலுக்கேற்பக் கொடுப்பார்?

32 இருப்பினும், கல்லறைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவர்; அவர்களின் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.

33 பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்; மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்; அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.

34 அப்படியிருக்க, வெற்றுமொழியால் நீர் என்னைத் தேற்றுவதெப்படி? ஊமது மறுமொழி முற்றிலும் பொய்யே!

அதிகாரம் 22


1 பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்;

2 மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா? மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா?

3 நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா?

4 நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்?

5 உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா?

6 ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!

7 தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை.

8 வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று; உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று.

9 விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

10 ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன; கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.

11 நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது; நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.

12 உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!

13 ஆனால், நீர் சொல்கின்றீர்; 'இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?

14 அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது; அவர் வான்தளத்தில் உலவுகின்றனார்'.

15 பாதகர் சென்ற பழைய நெறியில் நீரும் செல்ல விழைகின்றீரோ!

16 நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்; அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.

17 அவர்கள் இறைவனிடம், 'எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்பர்.

18 இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்; எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக!

19 நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;

20 'இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்; அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது' என்கின்றனர்.

21 இணங்குக இறைவனுக்கு; எய்துக அமைதி; அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.

22 அவர் வாயினின்று அறிவுரை பெறுக; அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக;

23 நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!

24 பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!

25 எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

26 அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.

27 நீர் அவரிடம் மன்றாடுவீர்; அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.

28 நீர் நினைப்பது கைகூடும்; உம் வழிகள் ஒளிமயமாகும்.

29 ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.

30 குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்; அவர்கள் உம் கைகளின் தூய்மையால் மீட்கப்படுவர்.

அதிகாரம் 23


1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி;

2 இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது; நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது கை பளுவாயுள்ளது.

3 அவரை எங்கே கண்டுபிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன்.

4 என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்; என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.

5 அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு என்ன சொல்வார் என்பதையும் நான் புரிந்து கொள்வேன்.

6 மாபெரும் வல்லமையுடன் அவர் என்னோடு வழக்காடுவாரா? இல்லை; அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார்.

7 அங்கே நேர்மையானவன் அவரோடு வழக்காடலாம்; நானும் என் நடுவரால் முழுமையாக விடுவிக்கப்படுவேன்.

8 கிழக்கே நான் சென்றாலும் அவர் அங்கில்லை; மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.

9 இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்; வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை.

10 ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.

11 அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின; அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.

12 அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை; அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.

13 ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால், யாரால் மாற்ற முடியும்? ஏனெனில், எதை அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.

14 ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்; இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.

15 ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்; அவரைப்பற்றி நினைக்கையில் திகிலடைகின்றேன்.

16 இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்; எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச் செய்தார்.

17 ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது; காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.

அதிகாரம் 24


1 குறித்த காலத்தை எல்லாம் வல்லவர் ஏன் வெளிப்படுத்தவில்லை? அவரை அறிந்தோரும் ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?

2 தீயோர் எல்லைக்கல்லை எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக் கொள்ளையிட்டு மேய்கின்றனர்.

3 அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர். விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.

4 ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர். நாட்டின் வறியோர் ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.

5 ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க் காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்; பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.

6 கயவரின் கழனியில் அவர்கள் சேகரிக்கின்றனர்; பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் பொறுக்குகின்றனர்.

7 ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்; வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்;

8 மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்; உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;

9 தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்; ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.

10 ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்; ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.

11 ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்; திராட்சைத் பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.

12 நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது; காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.

13 இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்; இவர்கள் அதன் வழியை அறியார்; இவர்கள் அதன் நெறியில் நில்லார்.

14 எழுவான் கொலைஞன் புலரும் முன்பே; ஏழை எளியோரைக் கொன்று குவிக்க; இரவில் திரிவான் திருடன் போல.

15 காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்; கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி; முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!

16 இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்; பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்; ஒளியினை இவர்கள் அறியாதவரே!

17 ஏனென்றால் இவர்களுக்கு நிழல் காலைபோன்றது; சாவின் திகில் இவர்களுக்குப் பழக்கமானதே!

18 வெள்ளத்தில் விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்; பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது; அவர்தம் திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்.

19 வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்; தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.

20 தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்; புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.

21 ஏனெனில், மகவிலா மலடியை இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு நன்மையைக் கருதினாரில்லை.

22 இருப்பினும், கடவுள் தம் வலிமையால் வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்; அவர்கள் தம் வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தாலும் நிலைக்கமாட்டார்கள்.

23 அவர் அவர்களைப் பாதுகாப்புடன் வாழவிடுகிறார்; அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்; இருப்பினும் அவரது கண் அவர்கள் நடத்தைமேல் உள்ளது.

24 அவர்கள் உயர்த்தப்பட்டனர்; அது ஒரு நொடிப்பொழுதே; அதன்பின் இல்லாமற் போயினர்; எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்; கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.

25 இப்படி இல்லையெனில், என்னைப் பொய்யன் என்றோ, என் மொழி தவறு என்றோ, எண்பிப்பவன் எவன்?

அதிகாரம் 25


1 பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்;

2 ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்.

3 அளவிட முடியுமா அவர்தம் படைகளை? எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?

4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?

5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!

6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! ப+ச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

அதிகாரம் 26


1 அதற்கு யோபு கூறிய பதில்;

2 என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைப் துணைபுரிந்தீர்! ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்!

3 என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்! நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!

4 எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை? எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

5 கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன; நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.

6 பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது; படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.

7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.

8 நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்; அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.

9 தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்; முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.

10 நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.

11 விண்ணின் தூண்கள் அதிர்கின்றன; அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.

12 ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்; இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.

13 தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்; தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.

14 ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?

அதிகாரம் 27


1 யோபு தமது உரையைத் தொடர்ந்து கூறியது;

2 என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்; எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார்.

3 என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,

4 என் உதடுகள் வஞ்சகம் உரையா; என் நாவும் பொய்யைப் புகலாது.

5 நீங்கள் சொல்வது சரியென ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாகும்வரையில் என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.

6 என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்; விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.

7 என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்; என் எதிரிகள் நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.

8 கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து, அவர்களின் உயிரைப் பறிக்கும்போது, அவர்களுக்கு என்ன நம்பிக்கை?

9 அவர்கள்மேல் கேடுவிழும்போது இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?

10 எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை அவர்கள் நாடுவார்களா? கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?

11 இறைவனின் கைத்திறனை நான் உங்களுக்குக் கற்பிப்பேன்; எல்லாம் வல்லவரின் திட்டங்களை மறைக்கமாட்டேன்.

12 இதோ! நீங்கள் யாவருமே இதைக் கண்டிருக்கின்றீர்கள்; பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?

13 இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு; பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.

14 அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார்.

15 அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்; அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.

16 மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்; அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.

17 ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்; மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.

18 சிலந்தி கூடு கட்டுவதுபோலும், காவற்காரன் குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர்.

19 படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்; ஆனால் இனி அவ்வாறு இராது; கண் திறந்து பார்க்கின்றனர்; செல்வம் காணாமற் போயிற்று.

20 திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்; சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும்.

21 கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்; அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;

22 ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.

23 அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்; அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.

அதிகாரம் 28


1 வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.

2 மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

3 மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.

4 மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.

5 மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.

6 நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்; பொன்துகளும் அதில் கிடைக்கும்.

7 அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது; கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.

8 வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை; சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.

9 கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.

10 பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.

11 ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்; மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.

12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

13 மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

14 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்; 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.

15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.

16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.

22 படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;

23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,

26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

27 அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

28 அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.

அதிகாரம் 29


1 யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை;

2 காண்பேனா முன்னைய திங்கள்களை; கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!

3 அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று; அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.

4 அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது.

5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்; என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.

6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன; பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாயப் பாய்ந்தது.

7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும்,

8 என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்; முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.

9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.

10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்; அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.

11 என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது.

12 ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன்.

13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன்.

14 அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.

15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.

16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன்.

17 கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்.

18 நான் எண்ணினேன்; 'மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன்.

19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்; இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.

20 என் புகழ் என்றும் ஓங்கும்; என் வில் வளைதிறன் கொண்டது. '

21 எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்; என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.

22 என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின.

23 மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்; மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.

24 நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது.

25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.

அதிகாரம் 30


1 ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்; அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.

2 எனக்கு அவர்களின் கைவன்மையால் என்ன பயன்? அவர்கள்தாம் ஆற்றல் இழந்து போயினரே?

3 அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்; வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்.

4 அவர்கள் உப்புக்கீரையைப் புதரிடையே பறித்தார்கள்; காட்டுப் ப+ண்டின் வேரே அவர்களின் உணவு.

5 மக்கள் அவர்களைத் தம்மிடமிருந்து விரட்டினர்; கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல் அவர்களுக்குச் செய்தனர்.

6 ஓடைகளின் உடைப்புகளிலும் நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.

7 புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்; முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.

8 மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்; அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.

9 இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்; அவர்களுக்கு நான் பழமொழியானேன்.

10 என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னைவிட்டு விலகிப் போகின்றனர்; என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.

11 என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி, என்னைத் தாழ்த்தியதால், என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.

12 என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது; என்னை நெட்டித் தள்ளுகின்றது; அழிவுக்கான வழிகளை எனக்கெதிராய் வகுத்தது.

13 எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்; என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்; அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.

14 அகன்ற உடைப்பில் நுழைவது போலப் பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில் அலைபோல் வருகின்றனர்.

15 பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது; என் பெருமை காற்றோடு போயிற்று; முகிலென மறைந்தது என் சொத்து.

16 இப்பொழுதோ? என் உயிர் போய்க்கொண்டே இருக்கின்றது; இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.

17 இரவு என் எலும்புகளை உருக்குகின்றது; என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.

18 நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது; கழுத்துப்பட்டை போல் என்னை ஒட்டிக்கொண்டது.

19 கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.

20 நான் உம்மை நோக்கி மன்றாடினேன். ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை, நான் உம்முன் நின்றேன்; நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.

21 கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்; உம் கை வல்லமையால் என்னைத் துன்புறுத்துகின்றீர்;

22 என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்; புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.

23 ஏனெனில், சாவுக்கும், வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும் என்னைக் கொணர்வீர் என அறிவேன்.

24 இருப்பினும், அழிவின் நடுவில் ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது, அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது, எவர் அவருக்கு எதிராகக் கையை உயர்த்துவார்?

25 அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா? ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?

26 நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது. ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.

27 என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை; இன்னலின் நாள்கள் எனை எதிர்கொண்டு வருகின்றன.

28 கதிரோன் இன்றியும் நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்; மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.

29 குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்; நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.

30 என் தோல் கருகி உரிகின்றது; என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.

31 என் யாழின் ஓசை புலம்பலாயிற்று; என் குழலின் ஒலி அழுகையாயிற்று.

அதிகாரம் 31


1 கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்; பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?

2 வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன? விசும்பினின்று எல்லாம் வல்லவர் விதிக்கும் உரிமையென்ன?

3 தீயோர்க்கு வருவது கேடு அல்லவா? கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?

4 என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா? என் காலடிகளை அவர் கணக்கிடுவதில்லையா?

5 பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால், வஞ்சகத்தை நோக்கி என் காலடி விரைந்திருந்தால்,

6 சீர்தூக்கும் கோலில் எனை அவர் நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள் என் நேர்மையை அறியட்டும்.

7 நெறிதவறி என் காலடி போயிருந்தால், கண்ணில் பட்டதையெல்லாம் என் உள்ளம் நாடியிருந்தால், என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,

8 நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்; எனக்கென வளர்பவை வேரொடு பிடுங்கப்படட்டும்.

9 பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால்; பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,

10 என் மனைவி மற்றொருவனுக்கு மாவரைகட்டும். மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.

11 ஏனெனில், அது தீச்செயல்; நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.

12 ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும் நெருப்பு அது; வருவாய் அனைத்தையும் அடியோடு அழிக்கும் தீ அது.

13 என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,

14 இறைவன் எனக்கெதிராய் எழும்போது நான் என்ன செய்வேன்? அவர் என்னிடம் கணக்குக் கேட்டால் நான் என்ன பதிலளிப்பேன்?

15 கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே அவனையும் உருவாக்கினார். கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர் அவர் ஒருவரே அல்லவோ?

16 ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது  இருந்தேனா? கைப்பெண்டிரின் கண்கள் ப+த்துப்போகச் செய்தேனா?

17 என் உணவை நானே தனித்து உண்டேனா? தாய் தந்தையற்றோர் அதில் உண்ணாமல் போயினரா?

18 ஏனெனில், குழந்தைப் பருவமுதல் அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.

19 ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ பார்த்துக்கொண்டு இருந்தேனா?

20 என் ஆட்டுமுடிக் கம்பளியினால் குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல் என்னைப் பாராட்டவில்லையா?

21 எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு எதிராகக் கைஓங்கினேனா?

22 அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு தோளிலிருந்து நெகிழ்வதாக! முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!

23 ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர் எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன் என்னால் எதுவும் இயலாது.

24 தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், 'பசும்பொன் என்உறுதுணை ' என்று பகர்ந்திருப்பேனாகில்,

25 செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால் நான் மகிழ்திருப்பேனாகில்,

26 சுடர்விடும் கதிரவனையும் ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,

27 என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால், அல்லது, என் வாயில் கை வைத்து முத்திமிட்டிருந்தால்,

28 அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய பழியாய் இருக்கும்; ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.

29 என்னை வெறுப்போரின் அழிவில் நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?

30 சாகும்படி அவர்களைச் சபித்து, என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.

31 'இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர் யாரேனும் உண்டோ?' என்று என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?

32 வீதியில் வேற்றார் உறங்கியதில்லை; ஏனெனில், வழிப்போக்கருக்கு என் வாயிலைத் திறந்து விட்டேன்.

33 என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து, என் குற்றங்களை மானிடர்போல் மறைத்ததுண்டா?

34 பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி, உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி, நான் வாளாவிருந்ததுண்டா? கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?

35 என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால் எத்துணை நன்று! இதோ! என் கையொப்பம்; எல்லாம் வல்லவர் எனக்குப் பதில் அளிக்கட்டும்! என் எதிராளி வழக்கை எழுதட்டும்.

36 உண்மையாகவே அதை என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்! எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.

37 என் நடத்தை முழுவதையுமே அவருக்கு எடுத்துரைப்பேன்; இளவரசனைப்போல் அவரை அணுகிச் செல்வேன்.

38 எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால், அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,

39 விலைகொடாமல் அதன் விளைச்சலை உண்டிருந்தால், அதன் உரிமையாளரின் உயிரைப் போக்கியிருந்தால்,

40 கோதுமைக்குப் பதில் முட்களும், வாற்கோதுமைக்கு பதில் களையும் வளரட்டும். யோபின் மொழிகள் முடிவுற்றன.

அதிகாரம் 32


1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

2 அப்பொழுது ப+சியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.

3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.

4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.

5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.

6 ஆகவே ப+சியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்; நான் வயதில் சிறியவன்; நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்; அஞ்சினேன்.

7 நான் நினைத்தேன்; 'முதுமை பேசட்டும்; வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.'

8 ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.

9 வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை; முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.

10 ஆகையால் நான் சொல்கின்றேன்; எனக்குச் செவி கொடுத்தருள்க! நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

11 இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன், நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை, அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.

12 உங்களைக் கவனித்துக் கேட்டேன்; உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை. அவர் சொற்களுக்கு தக்க பதில் அளிக்கவுமில்லை.

13 எச்சரிக்கை! 'நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்; இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்; மனிதரால் முடியாது' என்று சொல்லாதீர்கள்!

14 என்னை நோக்கி யோபு தம்மொழிகளைக் கூறவில்லை; உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

15 அவர்கள் மலைத்துப் போயினர்; மீண்டும் மறுமொழி உரையார்; அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்வதற்கில்லை.

16 அவர்கள் பேசவில்லை; நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை; நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?

17 நானும் எனது பதிலைக் கூறுவேன்; நானும் எனது கருத்தை நவில்வேன்.

18 ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன; என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.

19 இதோ! என் நெஞ்சம் அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது; வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.

20 நான் பேசுவேன்; என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.

21 நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்; நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.

22 ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது; இல்லையேல், படைத்தவரே விரைவில் என்னை அழித்திடுவார்.

அதிகாரம் 33


1 ஆனால் இப்பொழுது, யோபே! எனக்குச் செவிகொடும்; என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.

2 இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்; என் நாவினால் பேசுகிறேன்.

3 என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் விளம்பும்; அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.

4 இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.

5 உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்; என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.

6 இதோ! இறைவன் முன்னிலையில் நானும் நீவிரும் ஒன்றே; உம்மைப்போல் நானும் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!

7 இதோ! நீர் எனக்கு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை; நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.

8 உண்மையாகவே என் காதுகளில் விழ நீர் கூறினீர்; நானும் அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;

9 'குற்றமில்லாத் தூயவன் நான்; மாசற்ற வெண் மனத்தான் யான்.

10 இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்; அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.

11 மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்; என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்'.

12 இதோ! இது சரியென்று; பதில் உமக்குக் கூறுகிறேன்; கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.

13 'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை' என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?

14 ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்; இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்; அதை யாரும் உணர்வதில்லை.

15 கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்; படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,

16 அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்; எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.

17 இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்; மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.

18 அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்.

19 படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் வரும் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.

20 அப்போது அவர்களின் உயிர் உணவையும், அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.

21 அவர்களின் சதை கரைந்து மறையும்; காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.

22 அவர்களின் ஆன்மா குழியினையும் அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.

23 மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்

24 அவர்களின் மீது இரங்கி, "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்; ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;

25 இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும் "

26 என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்; அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்; அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.

27 அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்; 'நாங்கள் பாவம் செய்தோம்; நேரியதைக் கோணலாக்கினோம்; இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை;

28 எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்; எங்கள் உயிர் ஒளியைக் காணும்.'

29 இதோ இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.

30 இவ்வாறு குழியிலிருந்து அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்; வாழ்வோரின் ஒளியை அவர்கள் காணச் செய்கின்றார்.

31 யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்; பேசாதிரும்; நான் பேசுவேன்.

32 சொல்வதற்கு இருந்தால், எனக்குப் பதில் சொல்லும்; பேசுக! உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே நான் விழைகின்றேன்.

33 இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்; பேசாதிரும்; நான் உமக்கு ஞானத்தைக் கற்பிப்பேன்.

அதிகாரம் 34


1 எலிகூ தொடர்ந்து கூறினான்;

2 ஞானிகளே! என் சொற்களைக் கேளுங்கள்; அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.

3 நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல, காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.

4 நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்; நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.

5 ஆனால் யோபு சொல்லியுள்ளார்; "நான் நேர்மையானவன்; ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார்,

6 நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்; நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.'

7 யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்? நீர்குடிப்பதுபோல் அவர் இறைவனை இகழ்கின்றார்;

8 தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்; கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.

9 ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்; 'கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால் எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.'

10 ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்! தீங்கிழைப்பது இறைவனுக்கும், தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக!

11 ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்; அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.

12 உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்; நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.

13 ப+வுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்? உலகனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தவர் யார்?

14 அவர்தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால், தம் உயிர் மூச்சை மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,

15 ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்; மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;

16 உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்; என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.

17 உண்மையில், நீதியை வெறுப்பவரால் ஆட்சி செய்ய இயலுமா? வாய்மையும் வல்லமையும் உடையவரை நீர் பழிப்பீரோ?

18 அவர் வேந்தனை நோக்கி "வீணன்" என்றும் கோமகனைப் பார்த்து 'கொடியோன்' என்றும் கூறுவார்.

19 அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்; ஏழைகளை விடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்; ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?

20 நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்; நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்; ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.

21 ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன; அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.

22 கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.

23 இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க, எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.

24 வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.

25 அவர்களின் செயலை அவர் அறிவார்; ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்; அவர்களும் நொறுக்கப்படுவர்.

26 அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர் மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.

27 ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்; அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை;

28 ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்; அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.

29 அவர் பேசாதிருந்தால், யார் அவரைக் குறைகூற முடியும்? அவர்தம்முகத்தை மறைத்துக் கொண்டால், யார்தான் அவரைக் காணமுடியும்? நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.

30 எனவே, இறைப்பற்றில்லாதவரோ மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ ஆளக்கூடாது.

31 எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா; 'நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்; இனி நான் தவறு செய்யமாட்டேன்.

32 தெரியாமல் செய்ததை எனக்குத் தெளிவாக்கும்; தீங்கு செய்திருந்தாலும், இனி அதை நான் செய்யேன்.'

33 நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்; நான் அல்ல; ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.

34 புரிந்துகொள்ளும் திறன் உடையவரும் எனக்குச் செவி சாய்ப்பவர்களில் ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;

35 யோபு புரியாமல் பேசுகின்றார்; அவர் சொற்களும் பொருளற்றவை.

36 யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா? ஏனெனில், அவரின் மொழிகள் தீயோருடையவைபோல் உள்ளன.

37 யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்; ஏளனமாய் நம்மிடையே அவர் கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.

அதிகாரம் 35


1 எலிகூ தொடர்ந்து கூறினான்;

2 'நான் இறைவன்முன் நேர்மையானவன்' என நீர் சொல்வது சரியென நினைக்கின்றீரா?

3 'நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்? எனக்கு என்ன நன்மை?" என நீர் கேட்கின்றீர்.

4 உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து நான் பதில் அளிக்கின்றேன்;

5 வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!

6 நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?

7 நீர் நேர்மையாய் இருப்பதால் இவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?

8 உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது; உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது.

9 கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்; வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.

10 ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை; 'எங்கே என்னைப் படைத்த கடவுள்? இரவில் பாடச் செய்பவர் எங்கே?

11 நானிலத்தின் விலங்குகளைவிட நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்ற வரும் வானத்துப் புள்ளினங்களை விட நம்மை ஞானி ஆக்குகின்ற வரும் அவரன்றோ?"

12 அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்; பொல்லார் செருக்கின் பொருட்டு அவர் பதில் ஒன்றும் சொல்லார்.

13 வீண் வேண்டலை இறைவன் கண்டிப்பாய்க் கேளார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கவும் மாட்டார்.

14 இப்படியிருக்க, 'நான் அவரைப் பார்க்கவில்லை; தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது. நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;' என்று நீர் கூறும்போது, எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?

15 இப்பொழுதோ, 'கடவுளின் சினம் தண்டிப்பதில்லை; மனிதனின் மடமையை அவ்வளவாய் அவர் நோக்குவதில்லை' என எண்ணி,

16 யோபு வெற்றுரை விளம்புகின்றார்; அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.

அதிகாரம் 36


1 எலிகூ தொடர்ந்து பேசலானான்;

2 சற்றுப் பொறும்; காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.

3 தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்; எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.

4 ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்; அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.

5 இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.

6 கொடியவரை அவர் வாழவிடார்; ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;

7 நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்; அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்; என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.

8 ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,

9 அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.

10 அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்; தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.

11 அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.

12 செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்றி; அவர்கள் அழிந்துபோவர்.

13 தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்; அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.

14 அவர்கள் இளமையில் மடிவர்; காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.

15 துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்; வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.

16 இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்; ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.

17 பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது; தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.

18 வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்; நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.

19 உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?

20 இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.

21 துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.

22 இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்; அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?

23 அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு 'நீர் வழிதவறினிர்" எனச் சொல்ல வல்லவர் யார்?

24 அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.

25 மனித இனம் முழுவதும் அதைக் கண்டது; மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.

26 இதோ! இறைவன் பெருமை மிக்கவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்; அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை; கணக்கிட முடியாதவை.

27 நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.

28 முகில்கள் அவற்றைப் பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.

29 பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?

30 இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.

31 இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்; அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.

32 மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்; இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.

33 இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்; புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.

அதிகாரம் 37


1 இதைக்கண்டு நடுங்குகிறது என் இதயம்; தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.

2 அவரது குரலின் இடியோசையையும் அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும் கவனமுடன் கேளுங்கள்.

3 விசும்பின்கீழ் மின்னலை மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின் எல்லைவரை செல்ல வைக்கின்றார்.

4 அதனை அடுத்து அதிரும் அவர் குரல்; பேரொலியில் அவர் முழங்கிடுவாரே; மின்னலை நிறுத்தார் அவர்தம் குரல் ஒலிக்கையிலே.

5 கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்; நம் அறிவுக்கு எட்டாத பெரியனவற்றைச் செய்கின்றார்.

6 ஏனெனில், உறைபனியை 'மண்மிசை விழு" என்பார்; மாரியையும் பெருமழையையும் 'உரத்துப் பெய்க" என்பார்.

7 எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய, எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.

8 பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்; தம் குகைக்குள் அது தங்கும்.

9 அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும் வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.

10 கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்; பரந்த நீர்நிலை உறைந்து போகும்.

11 அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்; கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.

12 மேகம் அவரது ஆணைப்படியே சுழன்று ஆடும்; அவர் ஆணையிடுவதை எல்லாம் மண்மிசை செய்யும்.

13 கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.

14 யோபே! செவிகொடும்; இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.

15 கடவுள் எவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ, அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத் தெறிக்கின்றன என்றோ அறிவீரா?

16 முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா? அவை நிறை அறிவுள்ளவரின் வியத்தகு செயல்கள் அல்லவா!

17 தென்திசைக் காற்றினால் நிலம் இறுக்கப்படுகையில் உம் உடையின் வெப்பத்தால் நீவிர் புழுங்குகின்றீர்.

18 வார்ப்படக் கண்ணாடியை ஒத்த திண்ணிய விசும்பை அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?

19 நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும் என்று கற்பியும்; இருளின் முகத்தே வகைதெரியாது உழல்கின்றோம்.

20 'நான் பேசுவேன்" என்று எவர் அவரிடம் சொல்வார்? அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?

21 காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின் வானில் கதிரவன் ஒளிரும்போது, மனிதர் அதனைப் பாhக்க ஒண்ணாதே!

22 பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்; அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.

23 எல்லாம் வல்லவரை நாம் கண்டுபிடிக்க முடியாது; ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே! நிறைவான நீதியை மீறபவர் அல்ல.

24 ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்; எல்லாம் தெரியும் என்போரை அவர் திரும்பியும் பாரார்.

அதிகாரம் 38


1 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்;

2 அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?

3 வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு; வினவுவேன் உன்னிடம், விடை எனக்களிப்பாய்.

4 மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்? உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?

5 அதற்கு அளவு குறித்தவர் யார்? உனக்குத்தான் தெரியுமே! அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?

6 எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்?

7 அப்போது வைகறை விண்மீன்கள் ஒன்றிணைந்து பாடின! கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!

8 கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?

9 மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி,

10 எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி

11 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!" என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?

12 உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?

13 இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுளிருந்து உதறித்தள்ளுமே!

14 முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

15 அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.

16 கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?

17 சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ?

18 அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!

19 ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?

20 அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!

21 ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

22 உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?

23 இடுக்கண் வேளைக்கு எனவும் கடும் போர், சண்டை நாளுக்கு எனவும் அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.

24 ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது? கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?

25 வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்? இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?

26 மனிதர் வாழா மண்ணிலும் மாந்தர் குடியிராப் பாலையிலும் மழை பெய்வித்துப்

27 பாழ்வெளிக்கும் வறண்ட நிலத்திற்கும் நீh பாய்ச்சிப் பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?

28 மழைக்குத் தந்தை உண்டோ? பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?

29 பனிக்கட்டி யாருடைய உதரத்தில் தோன்றுகின்றது? வானின் மூடுபனியை ஈன்றெடுப்பவர் யார்?

30 கல்லைப்போல் புனல் கட்டியாகிறது; ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.

31 கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ? மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?

32 குறித்த காலத்தில் விடிவெள்ளியைக் கொணர்வாயோ? வடதிசை விண்மீன் குழுவுக்கு வழி காட்டுவாயோ?

33 வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ? அதன் ஒழுங்கை நானிலத்தில் நிலைநாட்டிடுவாயோ?

34 முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ? தண்ணீர்ப்; பெருக்கு உன்னை மூடச் செய்வாயோ?

35 'புறப்படுக' என மின்னலுக்கு ஆணையிடுவாயோ? 'இதோ! உள்ளோம்' என அவை உனக்கு இயம்புமோ?

36 நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்? சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?

37 ஞானத்தால் முகில்களை எண்ணக் கூடியவர் யார்? வானத்தின் நீர்க்குடங்களைக் கவிழ்ப்பவர் யார்?

38 துகள்களைச் சேர்த்துக் கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?

39 பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ? அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?

40 குகைகளில் அவை குறுகி இருக்கையிலே, குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.

41 காக்கைக் குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கரையும் போது, அவை உணவின்றி ஏங்கும்போது, காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?

அதிகாரம் 39


1 வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ? மான்குட்டியை ஈனுதலைப் பார்த்தது உண்டா?

2 எண்ணமுடியுமா அவை சினையாயிருக்கும் மாதத்தை? கணிக்க முடியுமா அவை ஈனுகின்ற காலத்தை?,

3 குனிந்து குட்டிகளை அவை தள்ளும்; வேதனையில் அவற்றை வெளியேற்றும்.

4 வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து வலிமைபெறும்; விட்டுப் பிரியும்; அவைகளிடம் மீண்டும் வராது.

5 காட்டுக் கழுதையைக் கட்டற்று திரியச் செய்தவர் யார்? கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

6 பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்; உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.

7 நகர அமளியை அது நகைக்கும்; ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.

8 குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை; பசுமை அனைத்தையும் நாடி அலையும்.

9 காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா? உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?

10 காட்டெருமையைக் கலப்பையில் ப+ட்டி உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க அது உன் பின்னே வருமோ?

11 அது மிகுந்த வலிமை கொண்டதால் அதனை நம்பியிருப்பாயோ? எனவே, உன் வேலையை அதனிடம் விடுவாயோ?

12 அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ? உன் களத்திலிருந்து தானியத்தைக் கொணருமோ?

13 தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்; ஆனால், அதன் இறக்கையிலும் சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?

14 ஏனெனில், மண்மேலே அது தன் முட்டையை இடும்; புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.

15 காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ அது நினைக்கவில்லை.

16 தன்னுடையவை அல்லாதன போன்று தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்; தன் வேதனை வீணாயிற்று என்று கூடப் பதறாமல்போம்.

17 கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்; அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.

18 விரித்துச் சிறகடித்து எழும்பொழுது, பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!

19 குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ? அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ?

20 அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ? அதன் செருக்குமிகு கனைப்பு நடுங்க வைத்திடுமே?

21 அது மண்ணைப் பறிக்கும்; தன் வலிமையில் மகிழும் போர்க்களத்தைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்லும்.

22 அது அச்சத்தை எள்ளி நகையாடும்; அசையாது; வாள் முனைக்கண்டு பின்வாங்காது.

23 அதன்மேல் அம்பறாத் தூணி கலகலக்கும்; ஈட்டியும் வேலும் பளபளக்கும்;

24 அது துள்ளும்; பொங்கி எழும்; மண்ணை விழுங்கும்; ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;

25 எக்காளம் முழங்கும்போதெல்லாம் "ஐஇ" என்னும்; தளபதிகளின் இடி முழக்கத்தையும் இரைச்சலையும் அப்பால் போரினையும் இப்பாலே மோப்பம் பிடிக்கும்.

26 உன் அறிவினாலா வல்லூறு பாய்ந்து இறங்குகின்றது? தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது?

27 உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது? உயர்ந்த இடத்தில் தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?

28 பாறை உச்சியில் கூடுகட்டித் தங்குகின்றது; செங்குத்துப் பாறையை அரணாகக் கொண்டுள்ளது.

29 அங்கிருந்தே அது கூர்ந்து இரையைப் பார்க்கும்; தொலையிலிருந்தே அதன் கண்கள் அதைக் காணும்.

30 குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்; எங்கே பிணமுண்டோ அங்கே அது இருக்கும்.

அதிகாரம் 40


1 பின்பு யோபைப் பார்த்து ஆண்டவர் கூறினார்;

2 குற்றம் காண்பவன், எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா? கடவுளோடுவாதாடுபவன் விடையளிக்கட்டும்.

3 யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி;

4 இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்.

5 ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்.

6 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்;

7 வீரனைப்போல் இடையை இறுக்கிக் கட்டிக்கொள்; வினவுவேன் உன்னிடம்; விடையெனக்கு அளிப்பாய்.

8 என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா? உன்னைச் சரியெனக் காட்ட என்மீது குற்றம் சாட்டுவாயா?

9 இறைவனுக்கு உள்ளதுபோல் உனக்குக் கையுண்டோ? அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?

10 சீர் சிறப்பினால் உன்னை அணி செய்துகொள்; மேன்மையையும், மாண்பினையும் உடுத்திக்கொள்.

11 கொட்டு உன் கோபப் பெருக்கை! செருக்குற்ற ஒவ்வொருவரையும் நோக்கிடு; தாழ்த்திடு!

12 செருக்குற்ற எல்லாரையும் நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!

13 புழுதியில் அவர்களை ஒன்றாய்ப் புதைத்திடு! காரிருளில் அவர் முகங்களை மூடிடு.

14 அப்பொழுது, உனது வலக்கை உன்னைக் காக்குமென்று நானே ஒத்துக்கொள்வேன்.

15 இதோ பார், உன்னைப் படைத்ததுபோல் நான் உண்டாக்கிய பெகிமோத்து காளைபோல் புல்லைத் தின்கின்றது.

16 இதோ காண், அதன் ஆற்றல் அதன் இடுப்பில்; அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.

17 அது தன் வாலைக் கேதுருமரம்போல் விரைக்கும்; அதன் தொடை நரம்புகள் கயிறுபோல் இறுகியிருக்கும்;

18 அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்; அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.

19 இறைவனின் படைப்புகளில் தலையாயது அதுவே! படைத்தவரே அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.

20 மலைகள் அதற்குப் புற்ப+ண்டுகளை விளைவிக்கின்றன; விலங்குகள் எல்லாம் விளையாடுவதும் அங்கேதான்.

21 அது நிழற்செடிக்கு அடியிலும் நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும் படுத்துக் கிடக்கும்.

22 அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்; ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.

23 ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது; அதன் முகத்தே யோர்தான் மோதினும் அசைவுறாது.

24 அதன் கண்காண அதனைக் கட்டமுடியுமோ? கொக்கியால் அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?

அதிகாரம் 41


1 தூண்டிலால் லிவியத்தனைத் தூக்கிடுவாயோ? கயிற்றினால் அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?

2 அதன் மூக்கிற்குச் கயிறு இட உன்னால் முடியுமோ? அதன் தாடையில் கொக்கியினால் குத்த முடியுமோ?

3 வேண்டுகோள் பல அது உன்னிடம் விடுக்குமோ? கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?

4 என்றும் உனக்கு ஏவல்புரிய உன்னுடன் அது உடன்படிக்கை செய்யுமோ?

5 பறவைபோல் துள்ளி அதனுடன் ஆடுவாயா? உம் மகளிர்க்கென அதனைக் கட்டிவைப்பாயா?

6 மீனவர் குழுவினர் அதன்மேல் பேரம் பேசுவார்களோ?அவர்கள் வணிகரிடையே அதைக் கூறுபோடுவார்களோ?

7 கூரிய முட்களால் அதன் தோலையும் மீன் எறி வேல்களால் அதன் தலையையும் குத்தி நிரப்புவாயோ?

8 உன் கையை அதன்மேல் வைத்துப்பார்; எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய். மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.

9 இதோ! தொடுவோர் நம்பிக்கை தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே ஒருவர் கதிகலங்குவார்.

10 அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை; பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?

11 அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோ? விண்ணகத்தின்கீழ் அப்படிப்பட்டவர் யாருமில்லை!

12 அதன் உறுப்புகள், அதன் ஆற்றல் அதன் அமைப்பின் அழகு அனைத்தையும் பற்றி அறிவிக்காது விடேன்.

13 அதன் மேல்தோலை உரிப்பவர் யார்? அதன் தாடை இரண்டுக்குமிடையே நுழைபவர் யார்?

14 அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்? அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.

15 அதன் முதுகு கேடய வரிசையாம்; நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.

16 ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது. காற்றும் அதனிடையே கடந்திடாது;

17 ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன; பிரிக்கமுடியாதவாறு ஒன்றாய்ப் பிடித்துள்ளன.

18 துலங்கும் மின்னல் அதன் தும்மல்; வைகறை இமைகள் அதன் கண்கள்.

19 அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு; அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.

20 நாணல் நெருப்புக் கொதிகலனின்று வருவதுபோல் அதன் நாசியினின்று புகை கிளம்பும்.

21 அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்; அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.

22 அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது; நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.

23 அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்; கெட்டியாயிருக்கும் அவற்றை அசைக்க ஒண்ணாது.

24 அதன் நெஞ்சம் கல்லைப்போல் கடினமானது; திரிகையின் அடிக்கல்போல் திண்மையானது.

25 அது எழும்பொழுதே தெய்வங்கள் அஞ்சுகின்றன; அது அறையவரும்போதே நிலைகுலைகின்றன.

26 வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது; ஈட்டியோ அம்போ, எறிவேலோ உட்செல்லாது.

27 இரும்பை அது துரும்பெனக் கருதும்; வெண்கலத்தை உளுத்த கட்டையெனக் கொள்ளும்.

28 வில்வீரன் அதை விரட்ட முடியாது; கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.

29 பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்; எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.

30 அதன் வயிற்றுப்புறம் ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு; அது சேற்றில் படுத்துக்கிடக்கையில் பரம்புக் கட்டை.

31 கொதிகலமென அது கடலைப் பொங்கச் செய்யும்; தைலச் சட்டியென அது ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.

32 அது போனபிறகு பாதை பளபளக்கும்; கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.

33 அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை; அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.

34 செருக்குற்ற படைப்பு அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்; வீறுகொண்ட விலங்குகட்கு வேந்தனும் அதுவே.

அதிகாரம் 42


1 அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்;

2 நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.

3 'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?" என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை.

4 அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்; வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு.

5 உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன.

6 ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.

7 ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு, தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது; "உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை.

8 ஆகவே இப்பொழுது, "ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன் ".

9 அவ்வாறே தேமானியனான எலிப்பாசும், சூகாவியனான பில்தாதும், நாமானியனான சோப்பாரும் சென்று ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள். ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.

10 யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.

11 பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்; அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்; ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்.

12 யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன.

13 அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.

14 மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்ப+க்கு என்றும் பெயரிட்டார்.

15 யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

16 அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார்.

17 இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.

 


யோபு தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு
யோபு தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு




Labels:
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *