திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

எசேக்கியேல் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு


எசேக்கியேல்

எசேக்கியேல் முன்னுரை:

எசேக்கியேல் என்னும் பெயருக்கு, ஆண்டவர் ஆற்றல் அளிப்பார், என்பது பொருள். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாழ்ந்தார். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கு மட்டுமின்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார்.

எசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார். எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றை அடையாளச் செயல்கள் வழியாக விளங்குகிறார். ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ணமும் உள்ளார்ந்த புதுப்பொலிவு பெற வேண்டும் என்றும் எசேக்கியேல் வலியுறுத்தினார்; நாடும் புதுப்பொலிவு பெற்று வாழ்ந்திட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்தமையால், கோவிலைக் குறித்தும் உள்ளத் தூய்மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.

எசேக்கியேல் நூலின் பகுதிகள்

1) எசேக்கியேலின் அழைப்பு 1:1 - 3:27

2) எருசலேம் பற்றிய அழிவுச் செய்திகள் 4:1 - 24:27

3) மக்களினங்களுக்கு எதிரான கடவுளின் கடவுளின் நீதித் தீர்ப்புகள் 25:1 - 32:32

4) கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி 33:1 - 37:28

5) கோகுக்கு எதிரான இறைவாக்கு 38:1 - 39:29

6) வருங்காலக் கோவில் மற்றும் நாடு பற்றிய காட்சிகள் 40:1 - 48:35


 

எசேக்கியேல் அதிகாரம் 1


1 முப்பதாம் ஆண்டு, நான்காம் மாதம் ஐந்தாம் நாளன்று, நான் நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோராம் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.

2 அந்த மாதத்தின் ஐந்தாம் நாளன்று-யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு

3 கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.

4 நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன்.

5 அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.

6 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.

7 அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின.

8 அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன.

9 அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன.

10 முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன.

11 அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன.

12 அவை ஒவ்வொன்றும் நேர்முகமாய்ச் சென்றன. எங்கெல்லாம் ஆவி அங்கெல்லாம் அவையும் சென்றன. அவை செல்கையில் எப்பக்கமும் திரும்பவில்லை.

13 அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று; அதனின்று மின்னல் கிளம்பிற்று.

14 மின்னல் பாய்வதுபோல அந்த உயிரினங்கள் முன்னும் பின்னும் விரைந்தன.

15 நான் அந்த உயிரினங்களை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன.

16 அந்தச் சக்கரங்களின் தோற்றமும் அமைப்பும்; அவை மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. அவை நான்கும் ஒரே வடிவம் கொண்டிருந்தன; அவற்றின் தோற்றமும் அமைப்பும் சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம் பொருத்தப்பட்டதாக இருந்தன.

17 அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை.

18 அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன.

19 உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும்.

20 எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்ளில் இருந்தால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன.

21 அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.

22 உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு, அச்சம் தருவதாய், அவற்றின் தலைகளுக்கு மேல் விரிந்திருந்தது.

23 அக்கவிகையின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன. மேலும் உயிரினம் ஒவ்வொன்றும் தன் உடலை இரண்டு இறக்கைகளால் மூடிக் கொண்டிருந்தது.

24 அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன.

25 அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.

26 அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது.

27 அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன்.

28 சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.

எசேக்கியேல் அதிகாரம் 2


1 அவர் என்னை நோக்கி, "மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன்" என்றார்.

2 அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.

3 அவர் என்னிடம், "மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்" என்றார்.

4 "வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல்.

5 கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

6 மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே.

7 அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.

8 நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்துவிடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு" என்றார்.

9 அப்;போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது.

10 அவர் அச்சுருளேட்டை என்முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும், கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.

எசேக்கியேல் அதிகாரம் 3


1 அவர் என்னை நோக்கி, "மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு" என்றார்.

2 நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்.

3 மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.

4 மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.

5 ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய்.

6 புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள்.

7 ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.

8 எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.

9 உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்" என்றார்.

10 மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள்.

11 நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ; அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று அவர்களுக்குச் சொல்" என்றார்.

12 அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.

13 உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியின் ஓசைபோல் ஒலித்தது.

14 அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்;து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.

15 பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.

16 ஏழு நாள்களுக்குப்பின் ஆண்;டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

17 மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.

18 தீயோரிடம் "நீங்கள் சாவது உறுதி" என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

19 மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

20 நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்; அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

21 மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.

22 அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, "எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்" என்றார்.

23 நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன்.

24 பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது; "நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்!

25 மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.

26 நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

27 ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே" என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்; மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

எசேக்கியேல் அதிகாரம் 4


1 மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன் முன்னே வைத்து அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு.

2 அதைச் சுற்றி முற்றுகைமயிட்டாற்போல் அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி, மணல்மேடு ஒன்றையும் எழுப்பு. அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து, சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை.

3 மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே; இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.

4 நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள். நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய்.

5 எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.

6 இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.

7 மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, திறந்த புயத்தோடு, அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும்.

8 மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது.

9 நீயோ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்துக்கொள். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத் தொண்ணூறு நாள்கள்வரை அவற்றால் அப்பம் சுட்டுச் சாப்பிடு.

10 நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு. அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும்.

11 தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும். ஒரு கலயம் அளவையில் "ஆறிலொரு பங்கைக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி.

12 உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு. மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும்.

13 ஆண்டவர் உரைத்தது; "இவ்வாறே இஸ்ரயேல் மக்களும் நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள் தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள். "

14 அப்போது நான், "தலைவராகிய ஆண்டவரே! நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதில்லை. என் இளமை முதல் இப்போதுவரை தானாய்ச் செத்ததையோ, மற்ற விலங்குகளால் கிழிக்கப்பட்டதையோ நான் உண்டதில்லை. தீட்டான இறைச்சி கூட என் வாயில் நுழைந்ததே இல்லை" என்றேன்.

15 அப்போது அவர் என்னிடம், "சரி, மனித மலத்துக்குப் பதிலாக உனக்கு மாட்டுச் சாணத்தை அனுமதிக்கிறேன். அதைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடு" என்றார்.

16 மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! இதோ நான் எருசலேமில் உணவின் தரவைக் குறையச் செய்வேன். அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர். தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர்.

17 இதனால் அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக, ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத் தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர்.

எசேக்கியேல் அதிகாரம் 5


1 "மானிடா! மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு.

2 அதில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாள்கள் முடியும்போது நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு; மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன்.

3 அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை.

4 பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும். "

5 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்;துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.

6 அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக் கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள். தங்கைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக என் நியமங்களை எதிர்த்தார்கள். ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி, என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள்.

7 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் கிளர்ச்சி செய்தீர்கள்; என் நியமங்களின்படி நடக்கவில்லை. என் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்கவில்லை. உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களின் நீதிநெறிகளின்படிகூட நீங்கள் நடக்கவில்லை.

8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.

9 உங்கள் எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும், நான் இதுவரை செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான ஒன்றை உங்கள் நடுவே செய்யப்போகிறேன்.

10 எனவே உங்களுள் பெற்றோர் தம் பிள்ளைகளையும் பிள்ளைகள் தம் பெற்றோரையும் தின்பர்; உங்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பு அளித்து உங்களுள் எஞ்சியிருப்போர் அனைவரையும் எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்.

11 என்மேல் ஆணை! வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய உங்கள் எல்லாச் செயல்களாலும் என் திருத்தூயகத்தை நீங்கள் தீட்டுப்படுத்தியதால் நான் உங்களைவிட்டு விலகிவிடுவேன். என் கண்கள் உங்களுக்கு இரக்கம் காட்டா. இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.

12 உங்களுள் மூன்றிலொரு பங்கினர் கொள்ளை நோயால் மடிவர்; பஞ்சத்தால் அழிவர்; இன்னும் மூன்றிலொரு பங்கினர் வாளால் வீழ்வர்; எஞ்சிய மூன்றிலொரு பங்கினரை எத்திசையிலும் சிதறுண்டு போகச் செய்து, அவர்களை உருவிய வாளோடு தொடர்வேன்.

13 இவ்வாறு என் சினம் தணியும்; அவர்கள்மீது எனக்குள்ள சீற்றத்தை ஆற்றிக்கொள்வேன், பழிதீர்த்துக் கொள்வேன். என் சீற்றம் அவர்கள் மீது பாய்ந்து முடியும்போது ஆண்டவராகிய நான் என் பேரார்வத்தினால் பேசியுள்ளேன் என அவர்கள் அறிந்து கொள்வர்.

14 இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி, பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன்.

15 சினத்தோடும், சீற்றத்தோடும் உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது, உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு அது பழிச்சொல்லும் வசைமொழியும் எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும். ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன்.

16 உங்களைப் பாழாக்குவதற்காக நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன். உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன். உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன்.

17 நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும் உங்கள் மேல் ஏவுவேன். அதனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை இழப்பீர்கள்; கொள்ளை நோயும் இரத்தக் களறியும் உங்களிடையே உண்டாகும். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்.

எசேக்கியேல் அதிகாரம் 6


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

2 மானிடா! நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைத்திடு.

3 நீ சொல்லவேண்டியது; "இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் மலை இடுக்குகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நானே உங்கள்மேல் வாளை வரச்செய்து உங்கள் தொழுகைமேடுகளை அழிப்பேன்.

4 உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட, உங்கள் தூபபீடங்கள் தகர்க்கப்படும். உங்களுள் கொலையுண்டோரை உங்கள் சிலைகளின்முன் விட்டெறிவேன்.

5 இஸ்ரயேல் மக்களின் பிணங்களை அவர்களுடைய சிலைகளின்முன் போடுவேன். உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எறும்புகளைச் சிதறச் செய்வேன்.

6 நீங்கள் வாழும் எல்லா இடங்களிலும் நகர்கள் அழிக்கப்படும்; தொழுகை மேடுகள் சிதைக்கப்படும். இதனால் உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும். உங்கள் சிலைகள் உடைத்து நொறுக்கப்படும். உங்கள் தூப பீடங்கள் தகர்க்கப்படும். உங்கள் கைவேலைப்பாடுகள் அழித்தொழிக்கப்படும்.

7 கொலையுண்டோரும் உங்கள் நடுவில் வீழ்ந்து கிடப்பர். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

8 ஆயினும், நீங்கள் நாடுகளுக்குள்ளே சிதறடிக்கப்படும்போது, வாளுக்குத் தப்பும் சிலரை எஞ்சியோராக நான் வேற்றினங்களிடையே விட்டுவைப்பேன்.

9 இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.

10 அப்போது, நானே ஆண்டவர் என்றும் 'இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்' என நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள். "

11 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீ கையடித்துக் காலை உதறிச் சொல்; ஐயோ கேடு! இஸ்ரயேல் வீட்டாரின் எல்லாத் தீய அருவருப்புகளுக்காகவும் அவர்கள் வாளாலும் வறட்சியாலும் கொள்ளை நோயாலும் மடிவர்.

12 தொலைவில் இருப்போர் கொள்ளை நோயால் மடிவர்; அருகில் இருப்போர் வாளால் வீழ்வர். மீந்திருந்து முற்றுகையிடப்படுவோரோ வறட்சியால் சாவர். இவ்வாறு அவர்கள்மேல் என் சீற்றத்தைத் தணித்துக்கொள்வேன்.

13 ஒவ்வோர் உயர்ந்த குன்றிலும் எல்லா மலையுச்சிகளிலும், ஒவ்வொரு பசு மரத்தடியிலும், தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரங்களடியிலும், எங்கெங்கு அவர்கள் தங்கள் சிலைகளுக்கெல்லாம் நறுமணத் தூபம் காட்டினரோ அங்கெல்லாம் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றி அவர்களுடைய சிலைகளோடு அவர்களுள் கொலையுண்டோரும் கிடக்கும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

14 நான் அவர்கள்மீது என் கையை ஓங்கிப் பாலைநிலம் முதல் திப்லாவரை அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும் அழித்துப் பாழாக்குவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

எசேக்கியேல் அதிகாரம் 7


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது!

3 இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்; உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்; வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பேன்.

4 என் கண்களில் உனக்கு இரக்கம் இராது; நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

5 தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்; இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!

6 முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது; இதோ, அது வருகின்றது.

7 நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல; குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள்.

8 இப்போது விரைவில் என் சீற்றத்தை உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்; உன் வழிகளுக்;கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு, உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி உனக்குப் பதிலடி கொடுப்பேன்.

9 என் கண்களில் உனக்கு இரக்கம் இராது; நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக உன் நடத்தைக்கும் உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்றும் நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

10 இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! கேடுகாலம் நெருங்கி விட்டது; அநீதி துளித்து விட்டது; செருக்கு அரும்பிவிட்டது.

11 வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது; அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ, எதுவுமே தப்ப முடியாது. அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது.

12 அந்நேரம் வந்துவிட்டது; அந்நாள் நெருங்கிவிட்டது. வாங்குவோர் மகிழ வேண்டாம்; விற்போர் வருந்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.

13 அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.

14 அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.

15 வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும் கொள்ளை நோயும் உள்ளன. வயலில் இருப்போர் வாளால் மடிவர். நகரில் இருப்போரையோ பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும்.

16 அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போலப் புலம்புவர்.

17 கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.

18 அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்; திகில் அவர்களை மூடிக்கொள்ளும்; முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்; அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.

19 தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்; பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்; ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது; அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை; அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை; ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.

20 அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்; அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்; எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.

21 மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.

22 அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்; அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்; கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.

23 நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்; நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.

24 ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்; அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.

25 கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்; ஆனால் அது கிடைக்காது.

26 அழிவுக்குமேல் அழிவு உண்டாகும், வதந்திக்கு மேல் வதந்தி பரவும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்; ஆனால் குருக்களிடம் திருச்சட்டமும் மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும்.

27 அரசன் புலம்புவான்; இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்; நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்; அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்; அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்; அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.

எசேக்கியேல் அதிகாரம் 8


1 ஆறாம் ஆண்டில், ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் மூப்பரும் என் முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே தலைவராகிய ஆண்டவரின் கை என்மீது விழுந்தது.

2 அப்போது இதோ நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன்.

3 அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி என் தலை முடியைப் பிடித்தார். கடவுள் அருளிய இக்காட்சியில் ஆவி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் தூக்கி எருசலேமுக்குக் கொணர்ந்து அங்கே ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருக்கும் வடதிசை நோக்கி அமைந்த உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டது.

4 அங்கே சமவெளியில் நான் கண்ட காட்சியைப் போன்று இஸ்ரயேலின் கடவுளது மாட்சி இலங்கியது.

5 அவர் என்னை நோக்கி, "மானிடா! உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்" என்றார். நானும் வடதிசைநோக்கி என் கண்களை உயர்த்தினேன். அங்கே வடக்கில் பலிபீடத்தின் முற்றத்தில் நுழைவாயிலின் அருகே ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருந்தது.

6 அவர் என்னை நோக்கி, "மானிடா! அவர்கள் செய்வதைப் பார்த்தாயா? என் திருத்தலத்திலிருந்து நான் விலகியிருக்குமாறு இஸ்ரயேல் வீட்டார் செய்கிற மிகவும் அருவருக்கத்தக்கவற்றைப் பார்க்கின்றாய் அல்லவா? திரும்பி வா, இதை விடவும் அருவருக்கத்தக்கவற்றைக் காண்பாய்" என்றார்.

7 பின்னர் அவர் என்னை முற்றத்தின் வாயிலுக்குக் கொண்டு சென்றார். அங்கே சுவரில் ஒரு துளை இருக்கக் கண்டேன்.

8 அவர் என்னிடம், "மானிடா! சுவரை உடை" என்றார். நான் சுவரை உடைத்தபோது அங்கே ஒரு வாயிற்படி இருந்தது.

9 அவர் என்னை நோக்கி, "உள்ளே போய் அவர்கள் செய்யும் தீய அருவருப்பான செயல்களைப் பார்" என்றார்.

10 நான் உள்ளே நுழைந்து பார்த்தேன். இதோ எல்லாவகை ஊர்வனவும், வெறுக்கத்தக்க விலங்குகளும், இஸ்ரயேல் வீட்டினரின் தெய்வ உருவங்களும் சுவரைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.

11 அவற்றிற்கு முன் இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களில் எழுபதுபேர் கையில் நறுமணம் கமழும் தூபகலசத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவே சாப்பானின் மகன் யாசனியாவும் நின்று கொண்டிருந்தார்.

12 ஆண்டவர் என்னை நோக்கி, "மானிடா! இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களை இருளில் தாங்கள் வைத்த தெய்வ உருவங்களின்முன் என்ன செய்கிறார்கள்? பார்த்தாயா! 'ஆண்டவர் நம்மைப் பார்க்கவில்லை; ஆண்டவர் நாட்டைக் கைவிட்டுவிட்டார்' என அவர்கள் சொல்கின்றனர்" என்றார்.

13 மீண்டும் அவர் என்னை நோக்கி, "திரும்பி வா. இவர்கள் செய்யும் இன்னும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப் போகிறாய்" என்று சொன்னார்.

14 பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக அழுது கொண்டிருந்தனர்.

15 பின் அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்" என்றார்.

16 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.

17 அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ? அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள். அதோ பார், திராட்சைக் கிளைகளைத் தங்கள் மூக்கிற்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

18 எனவே நான் அவர்களிடம் சினத்துடன் நடந்து கொள்வேன். என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். என் செவிகளில் அவர்கள் பெரும் குரலிட்டு அழுதாலும் நான் கேட்கமாட்டேன். "

எசேக்கியேல் அதிகாரம் 9


1 அவர் என் செவிகளில் உரத்த குரலில் "நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்" என்றார்.

2 இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது. அவர்களுடன் நார்ப்பட்டு உடுத்தி, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர்.

3 அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது. உடனே ஆண்டவர் நார்ப்பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதரை அழைத்தார்.

4 பின் ஆண்டவர் அவரை நோக்கி, "நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு" என்றார்.

5 என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது; "நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்; இரக்கம் காட்டவேண்டாம்.

6 முதியோர், இளைஞர், கன்னியர், குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள். அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள். என் தூயகத்திலிருந்து தொடங்குங்கள். "அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த முதியோரிலிருந்து தொடங்கினர்.

7 அவர் அவர்களை நோக்கி, "கோவிலைக் கறைப்படுத்துங்கள்; முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்; புறப்படுங்கள்" என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.

8 அவர்கள் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தபோது, நான்மட்டும் தனியே இருந்தேன். நானோ முகங்குப்புற விழுந்து, "ஆ! தலைவராகிய ஆண்டவரே! நீர் உம் சீற்றத்தை எருசலேமின் மீது கொட்டி இஸ்ரயேலில் எஞ்சி இருப்போர் அனைவரையும் அழித்து விடுவீரோ?" என்று கத்தினேன்.

9 அவர் என்னை நோக்கி, "இஸ்ரயேல், யூதா வீட்டார்களின் குற்றம் மிக மிகப்பெரிது. நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது. நகரில் புரட்டு மலிந்துள்ளது. ஏனெனில், 'ஆண்டவர் நாட்டைக் கைநெகிழ்ந்து விட்டார்; அவர் எதையும் காண்பதில்லை' என்று சொல்லிக்கொள்கின்றனர்.

10 ஆகவே, என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். அவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன்" என்றார்.

11 இதோ, நார்ப்பட்டு உடுத்தி இடையில் மைக்கூட்டை வைத்திருந்த மனிதர் வந்து, "நீர் எனக்குக் கட்டளை இட்டவாறே நான் செய்துமுடித்து விட்டேன்" என்று அறிவித்தார்.

எசேக்கியேல் அதிகாரம் 10


1 நான் உற்று நோக்கினேன்; இதோ! கெருபுகளுக்குமேல் அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில் நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப் போன்றதொன்று தெரிந்தது.

2 அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரிடம், "கெருபுகளுக்குக் கீழ் இடுக்கு சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபுகளின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கை நிறைய வாரி, நகரின் மீது வீசு" என்றார். என் கண்ணெதிரே அவரும் சென்றார்.

3 அந்த மனிதர் உள்ளே சென்றபோது கோவிலின் வலப்புறத்தில் கெருபுகள் நின்றுகொண்டிருந்தன; மேகம் உள்முற்றத்தில் பரவியிருந்தது.

4 ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு, கோவிலின் வாயிற்படிக்கு வந்தது. மேகம் கோவிலில் பரவியிருந்தது. முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி நிறைந்து இலங்கிற்று.

5 கெருபுகளின் இறக்கைகள் எழுப்பிய ஒலி வெளி முற்றம் வரை கேட்டது. அது எல்லாம் வல்லவரின் குரலொலிபோன்று இருந்தது.

6 அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி, "சக்கரங்களின் இடையே கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு" என்று கட்டளையிட அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.

7 அப்பொழுது, கெருபுகளுள் ஒன்று தன் கையை நீட்டிக் கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடுத்து நார்ப்பட்டு உடுத்தியவரின் உள்ளங்கையில் வைத்தது. அவரும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

8 கெருபுகளின் இறக்கைகளின் கீழ் மனிதக் கையில் சாயல் காணப்பட்டது.

9 இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின.

10 அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின.

11 அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. முன் சக்கரம் நோக்கும் திசையில் மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன.

12 கெருபுகளின் உடல் முழுவதும்-முதுகு, கைகள், இறக்கைகள், சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள்-கண்களால் நிறைந்திருந்தன.

13 "சுழல் சக்கரங்கள்" என்று அவை அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.

14 ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன; முதலாவது எருது முகம்; இரண்டாவது மனித முகம்; மூன்றாவது சிங்க முகம்; நான்காவது கழுகு முகம்.

15 அப்பொழுது கெருபுகள் மேலெழந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.

16 கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன. கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத் தங்கள் இறக்கைகளை விரித்தபோது சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.

17 அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின்; ஆவி இவற்றில் இருந்தது.

18 ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின்மேல் வந்து நின்றது.

19 என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது.

20 கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.

21 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது.

22 அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.

அதிகாரம் 11


1 பின்னர் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவரது இல்லத்தின் கிழக்குநோக்கி இருக்கும் கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது. அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான அசூரின் மகன் யாசனியாவையும் பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன்.

2 அவர் என்னை நோக்கி, "மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.

3 'வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி' என அவர்கள் சொல்கிறார்கள்.

4 ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை! மானிடா! இறைவாக்கு உரை!" என்றார்.

5 அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது. ஆண்டவர் என்னிடம் கூறுவது; "நீ சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன்.

6 நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள். இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள். "

7 ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "உங்களால் கொலை செய்யப்பட்டு இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி; இந்நகர் ஒரு பாண்டம். உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன்.

8 வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்; ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன், "என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி உங்களை மாற்றாரிடம் கையளித்து உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.

10 உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு; நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள். அப்;போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

11 இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது; நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்; இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.

12 நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின் நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள்.

13 நான் இறைவாக்குரைத்தபோது, பெனாயாவின் மகன் பெலற்றியா செத்துப்போனான். நான் முகம்குப்புற விழுந்து, உரத்த குரலில், "ஐயோ, தலைவராகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் எஞ்சியிருப்போரை முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?" என்று கதறினேன்.

14 அப்போது, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

15 "மானிடா! உன் சகோதரர், உன் உறவின் முறையினர் மற்றும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்து, 'அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய்விட்டார்கள்; எங்களுக்குத்தான் இந்நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டுள்ளது' என எருசலேமில் வாழ்வோர் கூறுகின்றனர்.

16 எனவே நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; 'நான் அவர்களைத் தொலைவில் வேற்றினத்தாரிடையே அனுப்பி இருந்தாலும், நாடுகளிடையே அவர்களைச் சிதறடித்திருந்தாலும் அவர்கள் சென்ற அந்நாடுகளில் அவர்களுக்கு நான் ஒரு சிறிய தூயகமாக இருந்துள்ளேன்.

17 ஆதலால் நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று உங்களை ஒன்று சேர்த்து இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன்.

18 அவர்கள் அங்கு வந்ததும், வெறுக்கத்தக்க எல்லாவற்றையும், அருவருப்புகள் அனைத்தையும் அதனின்று களைவார்கள்.

19 அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன்.

20 அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.

21 ஆனால், வெறுக்கத்தக்கவற்றையும் அருவருப்புகளையும் நாடிச்செல்லும் இதயம் கொண்டவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

22 கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க, சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது.

23 ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது.

24 அப்போது, இறைக்காட்சியில் ஆவி என்னைத் தூக்கிக் கல்தேயாவிலிருந்த நாடுகடத்தப்பட்டோரிடம் கொண்டு சென்றது. பின்னர் நான் கண்ட காட்சி என்னை விட்டு அகன்றது.

25 நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும் நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன்.

அதிகாரம் 12


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.

3 மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம்.

4 நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.

5 அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.

6 அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன். "

7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

8 காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

9 "மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், "நீ செய்கிறது என்ன?" என்று கேட்கவில்லையா?

10 நீ அவர்களுக்குச் சொல்; எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;

11 நீ சொல்; உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர்.

12 அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

13 நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான்.

14 அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.

15 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

16 ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

17 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

18 "மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.

19 பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு; இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.

20 மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்; நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

21 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

22 "மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? 'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன; காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள்.

23 ஆகையால் அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்; நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.

24 இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.

25 ஏனெனில், நானே ஆண்டவர்; நானே உரைத்திடுவேன்; நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்; இனிமேல் காலந்தாழ்த்தாது; கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்; அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

26 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

27 மானிடா! 'இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை; இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது' என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.

28 எனவே அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும், "என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 13


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, "ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்.

3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மதிகெட்ட இறைவாக்கினருக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.

4 இஸ்ரயேலே! உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.

5 ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை; அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.

6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து "இது ஆண்டவரின் வாக்கு" என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.

7 நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே? நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே? நான் ஒன்றும் உரைக்காதிருந்தும் "இது ஆண்டவரின் அருள் வாக்கு" என நீங்கள் சொல்லலாமா?

8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்; பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள். எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன் "; என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

10 ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் "நல்வாழ்வு உளது" எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள்.

11 சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்; அது விழுந்துவிடும்; அடைமழை பெய்யும்; ஆலங்கட்டிகள் விழும்; புயற்காற்று சீறியெழும்.

12 சுவர் விழும்போது, "நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?" என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?

13 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்; நான் சினமுற, அடைமழை பெய்யும்; நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்; சுவரும் அழிந்துவிடும்.

14 நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன். அதன் அடித்தளம் பெயர்க்கப்படும். அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

15 இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, "சுவரையும் காணோம்; அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்" என்று உங்களுக்கு உரைப்பேன்.

16 நல்வாழ்வு இல்லாதிருந்தும் "நல்வாழ்வு உளது" என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

17 மானிடா! தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும் உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக உன் முகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.

18 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உயிர்களை வேட்டையாடுவதற்காக, அனைவரின் கைகளிலும் மணிக்கட்டைச் சுற்றிக் "காப்புக் கயிறுகள் பின்னி, ஒவ்வொருவர் உயரத்திற்கும் ஏற்ப தலைக்கு முக்காடு செய்வோர்க்கு ஐயோ கேடு! நீங்கள் என் மக்களின் உயிர்களை வேட்டையாடி உங்கள் உயிர்களை மட்டும் காத்துக்கொள்வீர்களோ?

19 கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும், சில அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள். பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து, உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.

20 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பறவைகளுக்கு வைப்பது போல் உயிர்களுக்குக் கண்ணிவைக்க நீங்கள் பயன்படுத்தும் காப்புக் கயிறுகளை நான் வெறுக்கிறேன், அவற்றை உங்கள் கைகளிலிருந்து அறுத்தெறிவேன். பறவைகளைப்போல் நீங்கள் கண்ணிவைத்துப் பிடிக்கும் உயிர்களை நான் விடுவிப்பேன்.

21 உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து, என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன். இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

22 நான் தளரச்செய்யாத நேர்மையாளனின் இதயத்தை நீங்கள் வஞ்சகமாய்த் தளரச் செய்தீர்கள். தீயவர் தம் தீய வழியினின்று விலகித் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு, வலுப்படுத்தினீர்கள்.

23 ஆதலால் பொய்க் காட்சியை இனிக் காணமாட்டீர்கள்; குறி சொல்லவும் மாட்டீர்கள். உங்கள் கைகளினின்று என் மக்களை விடுவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

அதிகாரம் 14


1 இஸ்ரயேலின் பெரியோருள் சிலர் என்னிடம் வந்து, என்முன் அமர்ந்தனர்.

2 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

3 மானிடா! இம்மனிதர் சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து, அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இவர்கள் என் திருவுளத்தை அறிய நான் விடுவேனோ?

4 ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!

5 இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும் இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும் நான் என் வயமாக்கிக்கொள்வேன்.

6 ஆகவே, இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; திரும்புங்கள், உங்கள் சிலைகளை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் அருவருப்புகள் அனைத்தையும் விட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.

7 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே, இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!

8 அவர்களுக்கெதிராக என் முகத்தைத் திருப்பி, அவர்களை அடையாளமாகவும் பழிச் சொல்லாகவும் ஆக்குவேன். அவர்களை என் மக்கள் நடுவிலிருந்து வெட்டியெறிவேன். அப்போது, நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

9 இறைவாக்கினன் ஒருவன் ஏமாற்றப்பட்டு ஒரு வாக்கை உரைப்பானாகில், ஆண்டவராகிய நானே அவனை ஏமாற்றினேன். நான் என் கையை அவனுக்கு எதிராக நீட்டி என் மக்கள் இஸ்ரயேலின் நடுவிலிருந்து அவனை அழித்து விடுவேன்.

10 என் திருவுளத்தை அறிய முற்படுவோரின் குற்றப்பழியைப் போலவே இறைவாக்கினனின் குற்றப்பழியும் இருக்கும். அவரவர்கள் தங்கள் குற்றப்பழியைச் சுமப்பார்கள்.

11 அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு வழிதவறிப் போகாமலும், தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர். அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர். நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

12 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

13 மானிடா! ஒரு நாடு நம்பிக்கைத் துரோகம் இழைத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் கையை நீட்டி, உணவின் தரவை நிறுத்தி, அங்குப் பஞ்சத்தை அனுப்பி, அங்குள்ள மனிதரையும் கால்நடைகளையும் அழிப்;பேன்.

14 அப்போது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூவரும் அங்கிருந்தால், அவர்கள் தங்கள் நேர்மையால் தங்கள் உயிரைமட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட, அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும். அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.

16 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர். தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்; நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

17 அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து, "வாள் நாட்டை ஊடுருவட்டும்" என ஆணையிட்டு மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.

18 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்; தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

19 அல்லது, நான் அந்நாட்டினுள் கொள்ளை நோயை அனுப்பி, அதனின்று மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பதற்காக, என் சீற்றத்தைக் குருதியாய் அதன்மீது கொட்டுவேன்.

20 அப்போது, நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கிருந்தால்-என்மேல் ஆணை-மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும். தங்கள் நேர்மையின் பொருட்டுத் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

21 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உண்மையிலேயே நான் மனிதரையும் கால்நடைகளையும் எருசலேமினின்று ஒழிப்பதற்காக, வாள், பஞ்சம், காட்டுவிலங்கு, கொள்ளைநோய் ஆகிய என்னுடைய நான்கு கடும் தீர்ப்புகளையும் அதன்மீது அனுப்புவேன்.

22 அப்போது, அங்கிருந்து தப்பிப் பிழைக்கும் சிலர் தங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும் வெளியேறி உங்களிடம் வந்து சேர்வர். அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்த்த பிறகு, நான் எருசலேமின்மீது வரச்செய்த தீங்கை-நான் அதன்மீது வரச்செய்த ஒவ்வொரு தீங்கையும்-குறித்து நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

23 நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர். அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 15


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும்விட திராட்சைக்கொடி எவ்வகையில் சிறந்தது?

3 ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?

4 இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது; அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது; அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது; அது எந்த வேலைக்காவது பயன்படுமா?

5 இதோ, அது முழுமையாய் இருந்த போதே அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. நெருப்பால் எரிந்து கருகிய அதை எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா?

6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.

7 என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

8 நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 16


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு.

3 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே; நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள்.

4 நீ பிறந்த வரலாறு இதுவே; நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மையாக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவுமில்லை;

5 உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்; ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.

6 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன்.

7 உன்னை வயல் வெளியில் வளரும் பயிர்போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவமெய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது; ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

8 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்தமேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன்.

10 பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

11 அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.

12 மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்.

13 பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய். நார்ப்பட்டும் மெல்லிய துகிலும், பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.

14 உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.

16 உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி அங்கு வேசித்தனம் செய்தாய். ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை; இனிமேல் நடக்கப் போவதுமில்லை.

17 நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்.

18 உன் பூப்பின்னல் ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் போர்த்தி, எனக்குரிய எண்ணெயையும் தூபத்தையும் அவற்றின் முன் எரித்தாய்.

19 நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய், தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை, நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

20 நீ எனக்குப் பெற்ற உன் புதல்வர் புதல்வியரை அவற்றுக்குப் பலியிட்டாயே! நீ வேசித்தனம் செய்தது போதாதென்றோ?

21 என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.

22 இத்துணை அருவருப்பான செயல்களிலும் நீ வேசித்தனத்திலும் ஈடுபட்டபோது உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய் உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை நீ நினைத்துப் பார்க்கவில்லை.

23 எல்லாத் தீச்செயல்களையும் செய்த உனக்கு ஐயோ கேடு, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

24 நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்; திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.

25 எல்லாத் தெருக்கோடிகளிலும், உன் தொழுகை மேடுகளை அமைத்தாய். உன் அழகைத் தரக்குறைவாக்கி, வருவோர் போவோர்க்கெல்லாம் உன் உடலைக் கொடுத்து, மிதமிஞ்சிய வேசித்தனம் செய்தாய்.

26 உன் அண்டை நாட்டவரும் உடல் பெருத்தவருமான எகிப்தியரோடு வேசித்தனம் செய்தாய்; எனக்குச் சினமூட்டுமளவுக்கு மிதமிஞ்சிய விபசாரம் செய்தாய்.

27 ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைப்பேன். உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி, உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின் விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.

28 இன்னும் நிறைவடையாமல் நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய். அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை.

29 ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்; அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.

30 வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

31 ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்; ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்; மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.

32 பிறரின் கணவரை நயக்கும் மனையாள் இவள்! தன் கணவனுக்குப் பதில் அன்னியரையே நாடுகிறாள் இவள்!

33 எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர். நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்! நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக் கையூட்டு அளிக்கின்றாய்.

34 எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்; நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!

35 எனவே, விலைமாதே! ஆண்டவரின் வார்த்தையைக் கேள்.

36 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீ காமவெறி கொண்டு உன் திறந்த மேனியைக் காட்டி, உன் காதலருடனும், அருவருப்பான உன் சிலைகள் அனைத்துடனும் வேசித்தனம் செய்தாய். இதற்காகவும், உன் பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்ட இரத்தப்பழிக்காகவும்,

37 நீ இன்பம் துய்த்த உன் காதலர் அனைவரையும் உனக்கெதிராக நான் ஒன்று திரட்டப்போகிறேன். நீ விரும்பியவர்கள், நீ வெறுத்தவர்கள் அனைவரையும் நாற்றிசையினின்றும் உனக்கெதிராய் ஒன்று சேர்ப்பேன். அவர்கள் முன்னிலையில் உன் ஆடையை உரிந்து போடுவேன். அவர்கள் அனைவரும் உன் திறந்த மேனியைக் காண்பர்.

38 பிறர் கணவர் நயந்த பெண்டிரையும், இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல், உன்னையும் தீர்ப்பிடுவேன்; என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.

39 பின் உன்னை அவர்களிடம் கையளிப்பேன். அவர்கள் உன் தொழுகைக் கூடங்களைத் தகர்த்து உன் தொழுகை மேடுகளை தரைமட்டமாக்குவர்; உன் ஆடைகளை உரிந்து, உன் அணிகலன்களைப் பிடுங்கிக் கொண்டு, உன்னைத் திறந்தமேனியாயும் வெறுமையாயும் விட்டுவிடுவர்.

40 உனக்கெதிராக மக்களைத் திரண்டெழச் செய்வேன். அவர்கள் உன்னைக் கல்லாலெறிவர்; வாளால் வெட்டிப் போடுவர்.

41 அத்தோடு, உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பர். பெண்கள் பலர் முன்னிலையில் உனக்குரிய தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவர். நானும் உன் வேசித்தனத்துக்கு முடிவுகட்டுவேன். நீ இனி யாருக்கும் அன்பளிப்பு அளிக்க மாட்டாய்.

42 அப்போது, உன்மீது நான் கொண்ட சினம் தணியும்; என் சகிப்புத் தன்மை உன்னை விட்டு அகன்றுவிடும்; இனி நான் அமைதி கொள்வேன்; சினமடையேன்.

43 ஏனெனில் உன் இளமையின் நாள்களை நினைக்காமல், இவற்றையெல்லாம் செய்து என்னை வெகுண்டெழச் செய்தாய். எனவேதான் உன் நடத்தையின் விளைவை நான் உன் தலைமேல் சுமத்தினேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். உன் அருவருப்புகளை எல்லாம் செய்தது தவிர, நெறிகேடாகவும், நீ நடந்து கொள்ளவில்லையா?

44 இதோ! பழமொழி கூறும் யாவரும் "தாயைப்போல் மகள்" என்னும் பழமொழியை உன்னைக் குறித்தே கூறுவர்.

45 தன் கணவனையும் பிள்ளைகளையும் வெறுக்கும் தாயின் மகள் தானே நீ? தங்கள் கணவரையும் பிள்ளைகளையும் வெறுக்கும் பெண்டிரின் சகோதரிதானே நீ? உன் தாய் ஓர் இத்தியள்; உன் தந்தை ஓர் எமோரியன்.

46 உனக்கு இடப்பக்கமாகத் தன் புதல்விரோடு வாழ்ந்து வந்;த சமாரியா உன் தமக்கை அன்றோ? உன் வலப்புறம் தன் புதல்வியோடு வாழ்ந்து வந்த சோதோம் உன் தங்கை அன்;றோ?

47 அவர்கள் நடந்து கொண்டவாறு நீயும் நடந்து, அவர்கள் செய்த அருவருப்புகளை நீயும் செய்யவில்லையா? அதுமட்டுமன்று; உன் கெட்ட நடத்தையில் நீ அவர்களையும் மிஞ்சி விட்டாய்.

48 என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயும் உன் புதல்வியரும் செய்துள்ளதை உன் தங்கை சோதோமும் அவள் புதல்வியரும் செய்ததில்லை.

49 உன் தங்கை சோதோமின் குற்றங்கள் இவையே; இறுமாப்பு, உணவார்வம், சோம்பல், இத்தனையும் அவளிடமும் அவள் புதல்வியரிடமும் இருந்தன. ஏழை, எளியோரின் கைகளை அவள் வலுப்படுத்தவில்லை.

50 இவர்கள் செருக்குடையவராய் என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர். ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன். இதை நீ அறிவாயன்றோ?

51 சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவுகூடச் செய்யவில்லையே. நீயோ இவர்களைவிட மிகுதியாக அருவருப்பானவற்றைச் செய்தாய். நீ செய்த அருவருப்புகள் அனைத்தோடும் ஒப்பிடும்போது உன் சகோதிரிகள் நேர்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள்.

52 இப்போது உன் இழிவை நீயே தாங்கிக்கொள். உன் சகோதரிகளை விட மிகுதியாக அருவருப்பான பாவங்களைச் செய்து, அவர்களை உன்னைவிட நேர்மையானவர்கள் ஆக்கிவிட்டாய். உன் சகோதரிகளை நேர்மையானவர்கள் ஆக்கிய அந்த இழிவை நீயே சுமந்து கொள்.

53 நான் சோதோமையும் அவள் புதல்வியரையும் சமாரியாவையும் அவள் புதல்வியரையும் மீண்டும் நன்னிலைக்குக் கொணர்வேன்.

54 இதனால் நீ செய்த அனைத்திற்காகவும் வெட்கி அவமானத்தைச் சுமப்பாய். அது அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.

55 உன் சகோதரிகள் சோதோமும் அவள் புதல்வியரும், சமாரியாவும் அவள் புதல்வியரும் தங்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவர். நீயும் உன் புதல்வியரும் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவீர்கள்.

56 நீ செருக்குடன் வாழ்ந்த காலத்தில் உன் தமக்கை சோதோமின் பெயரை உன் வாயினால் உச்சரிக்கக்கூட மாட்டாய்.

57 உன் தீச்செயல் வெளிப்படுவதற்குமுன் நீ அப்படி இருந்தாய். இப்போதோ, சிரியாவின் புதல்வியர், அவளைச் சுற்றி உள்ளோர், உன்னைச் சுற்றி இருக்கும் பெலிஸ்தியப் புதல்வியர் ஆகியோரின் வெறுப்புக்கு நீ ஆளானாய்.

58 நீ உன் ஒழுக்கக்கேட்டையும் உன் அருவருப்புகளையும் இப்போது சுமந்து கொண்டிருக்கிறாய். என்கிறார் ஆண்டவர்.

59 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய், நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.

60 ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

61 உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவென். அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய்.

62 உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

63 நீ செய்ததையெல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றையெல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 17


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு விடுகதையின் வடிவில் உவமை ஒன்று கூறு.

3 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.

4 அது, அம்மரத்தின் உச்சிக்கொழுந்து ஒன்றைக் கொய்து, ஒரு வாணிப நாட்டிற்குக் கொண்டு வந்து, வணிகர் நகரொன்றில் அதை வைத்தது.

5 பின் அந்நாட்டின் விதைகளில் ஒன்றை எடுத்துவந்து, வளமிகு வயலில் விதைத்து, அதன் நாற்றை நீர்மிகு நிலத்தில் கருத்தாய் நட்டது.

6 அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று. "அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன. வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன. இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி, கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.

7 ஆனால், பரந்த இறக்கைகளும் மிகுந்த இறகுகளும் கொண்ட வேறொரு கழுகும் இருந்தது. இந்தத் திராட்சைக் கொடி, நீர் பெறவேண்டி, தான் நடப்பட்டிருந்த நிலப்பரப்புக்கு அப்பால் இருந்த அக்கழுகை நோக்கித் தன் வேர்களை ஓடச்செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.

8 கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!

9 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இது செழிக்குமா? இதனை வேரோடு பிடுங்கி இதன் பழக்குலைகளைக் கொய்து விட, துளிர்த்த இதன் இவைகளொல்லாம் வாடி வதங்க இது பட்டுப் போகாதா? இதனை வேரோடு பிடுங்கியெறிய மிகுந்த கைவன்மையோ, மக்கள் திரளோ வேண்டியதில்லை.

10 இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா? கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா? இது முளைவிட்ட பாத்தியிலேயே உலர்ந்து போகுமே.

11 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

12 அந்தக் கலக வீட்டாரிடம் நீ சொல்; "இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா? பாபிலோனின் மன்னன் எருசலேமுக்கு வந்து அதன் அரசனையும், அதன் உயர்குடி மக்களையும் சிறைப்பிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு வந்துள்ளான்.

13 பின்னர், அவன் அரச மரபில் தோன்றிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான். நாட்டின் தலைவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.

14 குடிமக்கள் கிளர்ந்தெழாமல் பணிந்திருப்பதற்காகவும் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதன்மூலமே அவர்கள் பிழைத்திருக்க இயலும் என்பதற்காகவும் அவன் இவ்வாறு செய்தான்.

15 அந்த அரச மரபினன் அவனுக்கெதிராகக் கிளர்ந்து குதிரைகளையும் திரளான படையையும் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று எகிப்துக்குத் தூதர்களை அனுப்பினான். இவன் வெற்றி பெறமுடியுமா? இவன் தப்ப இயலுமா? உடன்படிக்கையை முறிக்கும் இத்தகையவன் தப்பவே முடியாது.

16 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்கு அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இவன், பாபிலோன் நகருக்குள்ளேயே சாவான்.

17 மண்மேடு எழுப்பப்பட்டுக் கொத்தளம் கட்டப்பட்டு பலர் வீழ்த்தப்பட இருக்கும் நிலையில் பெரிய படையும் திரளான வீரரும் கொண்ட பார்வோன் இவனுக்குத் துணை செய்ய வரப்போவதில்லை.

18 உடன்படிக்கையை முறிப்பதற்காக வாக்குறுதியை இவன் புறக்கணித்துள்ளான்; கைமேல் அடித்து வாக்களித்திருந்தும் இவ்வாறு செய்துள்ளான். இவன் தப்பவே முடியாது.

19 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என்மேல் ஆணை! எனக்களித்திருந்த வாக்குறுதியை அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும் அவன் தலை மேலேயே சுமத்துவேன்.

20 நான் என் வலையை அவன்மீது வீச, அவன் என் கண்ணியில் சிக்குவான். நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து, எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.

21 அவனுடைய படைவீரர்களுள் அவனுடன் தப்பியோடிவரும் யாவரும் வாளால் வீழ்வர். எஞ்சியோர் எத்திக்கிலும் சிதறடிக்கப்படுவர். அப்போது இதை உரைத்தது ஆண்டவராகிய நானே என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

22 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.

23 இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

24 ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.

அதிகாரம் 18


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

2 "புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்" என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?

3 என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.

4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

5 ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,

6 மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால்,

7 அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால்,

8 வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால்,

9 என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

10 ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,

11 தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க-மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,

12 எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,

13 வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.

14 ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்-

15 அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,

16 ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,

17 எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால்-அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்; அவன் வாழ்வது உறுதி.

18 மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.

19 ஆயினும், "தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது?" என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி.

20 பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.

21 தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

22 அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர்.

23 உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

24 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

25 ஆயினும், "தலைவரின் வழி செம்மையானதாக இல்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

26 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.

27 பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.

28 அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

29 ஆயினும், "தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை" என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

30 எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது.

31 எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?

32 எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.

அதிகாரம் 19


1 "நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,

2 சொல்; சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.

3 அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

4 வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்; அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.

5 தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்; எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.

6 அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

7 அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று; அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.

8 அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்; தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.

9 அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.

10 திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்; மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.

11 அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.

12 ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது; அதன் கனி உதிர்ந்து போயிற்று; தண்டு உலாந்து தீக்கிரையாயிற்று.

13 இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.

14 அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்; இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.

அதிகாரம் 20


1 ஏழாம் ஆண்டில், ஐந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.

2 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

3 "மானிடா! இஸ்ரயேல் மக்களின் பெரியோரிடம் பேசி அவர்களுக்கு அறிவி; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் திருவுளத்தைக் கேட்டறிய வந்திருக்கிறீர்களோ? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

4 மானிடா! நீயே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டாயா? நீயே அவர்களுக்குத் தீர்ப்புக் கூறமாட்டாயா? அவர்களுடைய மூதாதையரின் வெறுக்கத்தக்க செயல்களை அவர்கள் அறியச் செய்.

5 அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் வழிமரபினர்க்கு உறுதிமொழி அளித்து, எகிப்து நாட்டில் என்னை அவர்களுக்கு வெளிப்;படுத்தி, ";நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்" என்று ஆணையிட்டுக் கூறினேன்.

6 நான் அவர்களை எகிப்து நாட்டினின்றும் வெளிக் கொணர்ந்து, நான் அவர்களுக்காகத் தோந்தெடுத்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமைமிக்கதுமான நாட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்வேன் என்றும் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

7 மேலும், அவர்களைப் பார்த்து, "ஒவ்வொருவரும் தம் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும். எகிப்தின் தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர், "என்று சொன்னேன்.

8 அவர்களோ, எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். எனக்குச் செவி சாய்க்க மறுத்தனர். அவர்களின் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை எவனும் விட்டெறியவில்லை; எகிப்தின் தெய்வச் சிலைகளை ஒதுக்கிவிடவுமில்லை. ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

9 ஆயினும் அவர்களைச் சூழ்ந்திருந்த வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்து கொண்டேன். இவ்வேற்றினத்தாரின் கண்முன் அன்றோ நான் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்.

10 ஆக, நான் அவர்களை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்து, பாலைநிலத்துக்குக் கூட்டி வந்து,

11 வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து, வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்.

12 மேலும், அவர்களைப் புனிதப்படுத்தும் ஆண்டவர் நானே என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி, என் ஓய்வு நாள்களை எனக்கும் அவர்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் தந்தருளினேன்.

13 ஆனால், இஸ்ரயேல் வீட்டார் பாலை நிலத்தில் எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்காமல், என் நீதி நெறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு என் ஓய்வு நாள்களையும் மிகவும் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள் மேல் கொட்டி அவர்களை அழித்துவிடப்போவதாக நான் கூறினேன்.

14 ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நடந்து கொண்டேன்.

15 மேலும் நான் அவர்களுக்கு அளிக்கவிருந்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமை மிக்கதுமான நாட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று பாலை நிலத்தில் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

16 ஏனெனில், என் நீதிநெறிகளை அவர்கள் ஒதுக்கி விட்டனர். என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் ஓய்வுநாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். அவர்களின் தெய்வச்சிலைகளையே அவர்களின் இதயம் நாடியது.

17 ஆயினும், நான் அவர்களைக் கண்ணோக்கி, அழிக்காமல் விட்டு விட்டேன். பாலை நிலத்தில் நான் அவர்களை முழுவதும் ஒழித்துவிடவில்லை.

18 ஆனால், பாலை நிலத்திலேயே அவர்களுடைய புதல்வர்களைப் பார்த்து; "உங்கள் மூதாதையரின் நியமங்களின்படி நடவாதீர்கள். அவர்களுடைய நீதிநெறிகளைக் கைக்கொள்ளாதீர்கள். அவர்களுடைய தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

19 நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். என் நியமங்களின்படி நடந்து, என் நீதிநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள்.

20 என் ஓய்வு நாள்களைப் புனிதப்படுத்தங்கள். அவை எனக்கும் உங்களுக்கிடையே ஓர் அடையாளமாகத் திகழும். அப்போது நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள், என்று நான் கூறினேன்.

21 ஆனால், அவர்களின் பிள்ளைகளோ எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகவில்லை. என் ஓய்வு நாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

22 ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட பிறவினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்துகொண்டு என்னை அடக்கிக் கொண்டேன்.

23 மேலும் அவர்களை வேற்றினத்தாரிடையே பிரிந்துபோகச் செய்வதாகவும், நாடுகளிடையே சிதறிப்போகச் செய்வதாகவும், பாலைநிலத்தில் அவர்களுக்கெதிராக ஆணையிட்டுக் கூறினேன்.

24 ஏனெனில், என் நீதிநெறிகளின்படி அவர்கள் செய்யவில்லை; என் நியமங்களை ஒதுக்கிவிட்டார்கள்; என் ஓய்வு நாள்களை இழிவுபடுத்தினார்கள்; அவர்களின் மூதாதையரின் தெய்வச் சிலைகளை வணங்கினார்கள்.

25 ஆகவே அவர்களுக்கு நன்மை பயக்காத நியமங்களையும், வாழ்வு தராத நீதி நெறிகளையும் நான் அவர்களுக்கு அளித்தேன்.

26 அவர்கள் தங்கள் தலைப்பிள்ளைகளை எல்லாம் பலியிடச் செய்து அவர்களின் அந்தக் காணிக்கைகளாலேயே அவர்களைத் தீட்டுப்படச் செய்தேன். அவர்களைத் திகிலுறச் செய்யவும். நானே ஆண்டவர் என்று அவர்கள் அறியும் பொருட்டும் இவ்வாறு செய்தேன்.

27 ஆகையால், மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு எடுத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எனக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து, உங்கள் மூதாதையர் என்னை இழிவுபடுத்தியுள்ளனர்.

28 நான் அவர்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்த நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்ததும், அங்கிருந்த ஒவ்வொரு உயர்ந்த குன்றையும், தழைத்த மரத்தையும் கண்டவுடன் ஆங்காங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். எனக்குச் சினமூட்டும் நேர்ச்சைகளைப் படைத்தார்கள்; நறுமணப் புகை காட்டினார்கள்; நீர்மப்பலிகளை வார்த்தார்கள்.

29 நான் அவர்களை நோக்கி, "நீங்கள் செல்லும் தொழுகை மேடு எங்கே உள்ளது?" என்று கேட்டேன். எனவே அதன் பெயர் "பாமா" என்று இந்நாள்வரை வழங்குகிறது.

30 ஆகவே இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்; உங்கள் மூதாதையரைப் பின்பற்றி நிங்களும் தீட்டுப்படுவீர்களோ? அவர்களின் அருவருக்கத்தக்கவற்றின் பின் திரிந்து நீங்களும் விபசாரம் செய்வீர்களோ?

31 இன்று வரையிலும் நீங்கள் உங்கள் காணிக்கைகளை அர்ப்பணித்து, உங்கள் பிள்ளைகளை நெருப்புக்குப் பலியாக்கி, உங்கள் தெய்வச்சிலைகள் அனைத்தாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே, நீங்களா என் திருவுளத்தைக் கேட்டறியப் போகிறர்கள்? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

32 மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, "நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம்" என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.

33 இது என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், வெளிப்படும் சினத்தோடும் நான் உங்களை ஆள்வேன்.

34 வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், சீறிவரும் சினத்தோடும், பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வந்து, நீங்கள் சிதறிக் கிடக்கும் நாடுகளிலிருந்து உங்களை ஒன்று சேர்ப்பேன்.

35 உங்களை வேற்றினத்தாரின் பாலைநிலத்துக்கு அழைத்துச்சென்று, அங்கே உங்களை நேருக்கு நேராய்த் தீர்ப்பிடுவேன்.

36 எகிப்து நாட்டின் பாலை நிலத்தில் உங்கள் மூதாதையரைத் தீர்ப்பிட்டது போல் உங்களையும் நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

37 உங்களை என் கோலின் கீழ்க் கடந்து போகச் செய்து, உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டு வருவேன்.

38 கிளர்ச்சி செய்வோரையும் என்னை மீறி நடப்போரையும் உங்களிடையே இருந்து களைந்து விடுவேன். அவர்கள் வாழும் நாட்டிலிருந்து நான் அவர்களையும் அழைத்து வருவேன். ஆனால் இஸ்ரயேல் நாட்டினுள் அவர்கள் புகமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.

39 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஒவ்வொருவரும் போய் உங்கள் தெய்வச் சிலைகளை வழிபட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பின்னர் நீங்கள் எனக்குச் செவிசாய்த்து உங்கள் காணிக்கைகளாலும் தெய்வச் சிலைகளாலும் என் பெயரை மாசுபடுத்தவே மாட்டீர்கள்.

40 என் திருமலையில், இஸ்ரயேல் நாட்டு மலைமுகட்டில் வாழும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் அந்நாட்டில் என்னை வழிபடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். அங்கே நான் அவர்களை ஏற்றுக் கொள்வேன். அங்கே உங்கள் புனிதப்பலிகள் அனைத்தோடும் படையல்களையும் முதற்பலன் காணிக்கைகளையும் நான் எதிர்பார்த்து நிற்பேன்.

41 பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வருவேன். நீங்கள் சிதறிக்கிடக்கும் நாடுகளிலிருந்து நான் ஒன்று சேர்க்கும்போது, உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வேன். அப்போது நான் தூயவர் என்பது உங்கள் மூலம் வேற்றினத்தார்க்கு வெளிப்படும்.

42 இவ்வாறு நான் உங்கள் மூதாதையர்க்குத் தருவதாக ஆணையிட்டுக் கூறிய இஸ்ரயேல் நாட்டுக்கு நான் உங்களை அழைத்து வரும்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

43 உங்கள் வழிகளையும், உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளச் செய்த செயல்கள் அனைத்தையும் அங்கே நீங்கள் நினைத்து, நீங்கள் புரிந்த எல்லாத் தீச்செயல்களின் பொருட்டும் உங்களையே மிகவும் நொந்து கொள்வீர்கள்.

44 இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் தீய வழிகளுக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் ஏற்ப நான் உங்களை நடத்தாமல், என் பெயரின் பொருட்டு உங்களுக்கு இவ்வாறெல்லாம் செய்யும்போது, நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

45 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

46 மானிடா! நீ உன் முகத்தைத் தெற்கு நோக்கித் திருப்பி, தென் பகுதிக்கு எதிராக அருளுரையாற்றி, நெகேபின் நிலப்பரப்பின் காட்டு வெளிக்கு எதிராக இறைவாக்குரை.

47 நெகேபிலிருக்கும் காட்டு வெளிக்குச் சொல். ஆண்டவரின் வாக்கைக் கேள். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் உனக்குத் தீ வைப்பேன். அது உன்னிலிருக்கும் எல்லாப் பச்சை மரங்களையும் பட்ட மரங்களையும் எரித்து விடும். கொழுந்து விட்டெரியும் அப்பிழம்பு அணைக்கப்படாது. தென்திசைமுதல் வடதிசைவரை இருக்கும் எல்லா முகங்களும் அதனால் கருகிப் போகும்.

48 ஆண்டவராகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை யாவரும் அறிந்து கொள்வார்கள். அதுவோ அணைந்து போகாது.

49 அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! "இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே" என்று முறையிட்டேன்.

அதிகாரம் 21


1 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! உன் முகத்தை எருசலேம் நோக்கித் திருப்பி, திருத்தலங்களுக்கு எதிராக அரளுரையாற்றி, இஸ்ரயேல் மண்ணுக்கு எதிராக இறைவாக்குரை.

3 இஸ்ரயேல் மண்ணுக்குச் சொல். ஆண்டவர் கூறுவது இதுவே. இதோ, நான் உனக்கு எதிராக எழுந்து, என் வாளை உறையினின்று உருவி, உன்னிலிருக்கும் நேரியவர்களையும், தீயவர்களையும் வெட்டி வீழ்த்துவேன்.

4 உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும் நான் வெட்டி வீழ்த்தப் போவதால், தென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக என் வாள் உறையினின்று உருவப்படும்.

5 ஆண்டவராகிய நானே என் வாளை உறையினின்று உருவியுள்ளேன். இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.

6 மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு; உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும் அவர்கள் கண்முன் பெருமூச்செறித்து அழு!

7 "ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்?" என்று அவர்கள் உன்னைக் கேட்பார்கள். அப்போது நீ சொல்; வரப்போவதை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான் அது வரும்போது இதயமெல்லாம் உருகும்; கைகளெல்லாம் தளரும்; மனமெல்லாம் மயங்கும்; முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும். இதோ அது வருகிறது. அது வந்தே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

8 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

9 மானிடா! இறைவாக்காகச் சொல்; தலைவர் கூறுவது இதுவே; ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்டதும் துலக்கப்பட்டதுமான வாள்!

10 படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது! மின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது! நாம் மகிழ்ச்சி கொள்வோமா? ஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் புறக்கணித்து விட்டனர்.

11 கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள் துலக்கி வைக்கப்பட்டுள்ளது; கொலைஞனின் கரத்தில் கொடுப்பதற்காகவே அவ்வாள் கூர்மையாக்கப்பட்டுத் துலக்கப்பட்டுள்ளது.

12 மானிடா! நீ ஓலமிட்டு அலறு; ஏனெனில், அது என் மக்களை நோக்கியும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரை நோக்கியும் வீசப்படும்; என் மக்களுடன் அவர்கள் அனைவரும் அவ்வாளுக்கு இரையாவர். ஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.

13 உண்மையாகவே இது ஒரு சோதனை; அவர்கள் மனமாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

14 மானிடா! நீயோ இறைவாக்குரை; கை கொட்டு; இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்; கொலைக்கான வாள் அது; அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.

15 அது இதயங்களைக் கலங்கச் செய்யும்; நான் வைத்துள்ள அவ்வாள் ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும். ஆம், அது மின்னுவதற்காகக் செய்யப்பட்டது; கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.

16 "வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு; எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ அங்கெல்லாம் காட்டு;

17 நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன். இதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.

18 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

19 மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று நீ இரண்டு சாலைகள் அமை. அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும். ஒரு கைகாட்டியைச் செய்து நகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.

20 அம்மோனியரின் இராபாவுக்கும், யூதாவின் அரண்சூழ் எருசலேமுக்கும் வாள் செல்லும் வகையில் சாலை அமை.

21 ஏனெனில் பாபிலோன் மன்னன் இரு சாலைகளும் பிரியும் சந்தியில் நிமித்தம் பார்ப்பதற்காக நிற்கிறான். அம்புகளை உலுக்கிப் போடுகிறான். குலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் கேட்கிறான்; ஈரலால் நிமித்தம் பார்கிறான்.

22 அவனது வலக்கையின் எருசலேமுக்குப் போகும்படியான குறி விழுந்தது. அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும், குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும், வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக் கட்டுவதற்குமான குறி விழுந்தது.

23 ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின் பார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல் அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்.

24 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை. நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன. உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன. இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.

25 இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே, உனக்கு இறுதித் தண்டனைக்கெனக் குறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.

26 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தலைப்பாகையை எடுத்துவிடு, மகுடத்தை அகற்றி விடு. இப்போதைய நிலை இனி தொடராது. தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.

27 நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு. தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ அவர் வரும்வரை அது நடவாது. அவருக்கே அப்பொறுப்பை அளிப்பேன்.

28 நீயோ, மானிடா! இறைவாக்குரை. அம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ வாள்! கொலை செய்வதற்காக வாள உருவப்பட்டுள்ளது. மின்னலைப் போல் ஒளிர்ந்து, வெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.

29 உன்னைக் குறித்து வீணான காட்சிகள் கண்டு, பொய்யான குறிகள் சொன்னாலும், வெட்டப்படவிருக்கும் தீயோரின் பிடரியில் வாள் விழும். அந்த வாள் வந்து விட்டது. தண்டனை உச்ச நேரத்தை எட்டிவிட்டது.

30 நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு. நீ படைக்கப்பட்ட ஊரில், நீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.

31 என் ஆத்திரத்தை உன்மேல் கொட்டுவேன். என் சினத்தீயை உன்மேல் பொழிவேன். அழிப்பதில் வல்லவர்களான கொடியோரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.

32 நீ தீக்கிரையாவாய். உன் இரத்தம் நாட்டினுள் சிந்திக் கிடக்கும். ஏனெனில் நீ நினைக்கப்படமாட்டாய். ஆண்டவராகிய நானே இதை உரைத்துள்ளேன்.

அதிகாரம் 22


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு. "

3 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தனக்குத் தண்டனை நாள் வரும்படித் தன் நடுவில் குருதியைச் சிந்தித் தனக்கெனச் சிலைகளைச் செய்து தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே!

4 நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய். நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய். நீ உன் நாள்களை முடித்து விட்டாய். உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய். ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும், எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.

5 உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.

6 உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்;

7 உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்; அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள்.

8 நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய்.

9 புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர்.

10 தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர்.

11 ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான்.

12 உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

13 உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன்.

14 நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.

15 உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்; நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்; உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.

16 வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில், நானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய்.

17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது;

18 "மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர். அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி, வெண்கலம், வெள்ளீயம், இரும்பு, ஈயம் ஆகியன போலாயினர்; அவாகள் களிம்பாகி விட்டார்கள்".

19 ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால் உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.

20 வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல் நானும் என் சினத்திலும் சீற்றத்திலும் நகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.

21 நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து, உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன். நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.

22 வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல் நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள். அதன் மூலம் ஆண்டவராகிய நான் என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

23 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது;

24 "மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்; நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.

25 அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல் மக்களை விழுங்குகிறார்கள். அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும் பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர். கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர்.

26 அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர். எனக்குரிய தூய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர். தூய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும், தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர். நானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன்.

27 அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களை கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.

28 அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே" என்கிறார்கள்.

29 நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்; கொள்ளையடிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.

30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.

31 எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்" என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 23


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.

3 அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக் கொங்கைளை பிறர் தொட்டு விளையாடினர்.

4 அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா; இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.

5 ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.

6 அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.

7 அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்; தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.

8 எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்; அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்; தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.

9 எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.

10 அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.

11 அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.

12 அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.

13 அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.

14 ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட்டாள். சுவரில் சிவப்பாய்த்தீட்டப்பட்ட கல்தேய நாட்டு ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.

15 இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.

16 அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினாள்.

17 பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத் தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர். அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.

18 அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத் தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்; அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.

19 ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.

20 அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.

21 எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.

22 ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன். இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய். அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.

23 பாபிலோனியர் கல்தேயர் யாவரையும், பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும், அசீரியரையும் வரச்செய்வேன். அவர்கள் அழகிய இளைஞராயும் ஆளுநர்களாயும் படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர். அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.

24 அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர். தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன் பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும் தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய் நாற்புறமும் உன்னைச் சூழந்துகொள்வர். நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.

25 நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.

26 மேலும் அவர்கள் உன் ஆடைகளை உரிந்து உன் விலையுயர்ந்த அணிகளை எடுத்துக் கொள்வர்.

27 இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும் வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய். எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.

28 ஏனெனில் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ யாரை வெறுக்கிறாயோ, யாரிடமிருந்து மனம் கசந்து திரும்பினாயோ அவர்களிடமே உன்னை ஒப்புவிப்பேன்.

29 அவர்கள் வெறுப்போடு உன்னை நடத்துவர். நீ உழைத்துப் பெற்றவை அனைத்தையும் கவர்ந்துகொண்டு, உன்னைத் திறந்த மேனியாகவும் வெறுமையாகவும் விட்டுச் செல்வர். உன் வேசித்தனம், காமவெறி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் வெட்கக்கேடு வெளிப்படும்.

30 நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டால் அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.

31 உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய். எனவே அவள் குடித்த கிண்ணத்தை உன் கையில் தருவேன்.

32 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்; அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்; நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.

33 குடிவெறியாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்! உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம் துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!

34 குடிப்பாய்; அதை நீ குடித்து முடிப்பாய்! அதனை உடைத்தெறிவாய் துண்டுகளாய்! உன் மார்புகளைக் கீறிக்கொள்வாய்! நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

35 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ என்னை மறந்து உன்னிடமிருந்து என்னை ஒதுக்கிவிட்டதால், உன் காமவெறி மற்றும் வேசித்தனத்தின் விளைவுகளை நீயே சுமந்துகொள்.

36 ஆண்டவர் எனக்கு மேலும் உரைத்தது; "மானிடா ஒகோலாவையும் ஒகலிபாவையும் தீர்ப்பிடுவாயா? அவ்வாறெனில் அவர்களின் அருவருப்பான செயல்களை எடுத்துக் கூறு.

37 ஏனெனில் அவர்கள் வேசித்தனம் செய்தனர். அவர்கள் கைகளோ இரத்தக் கறை படிந்தவை. சிலைகளோடு அவர்கள் வேசித்தனம் செய்தனர். எனக்கெனப் பெற்றெடுத்த பிள்ளைகளைச் சிலைகளுக்கு உணவாய்ப் படைத்தனர்.

38 இதற்கு மேலும் செய்தனர், அதே நேரத்தில் எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி என் ஓய்வுநாள்களை இழிவுபடுத்தினர்.

39 அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர். என் தூயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர். என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

40 அவர்கள் தொலைவில்வாழ் மனிதருக்காகத் தூதர்களை அனுப்பினர்; அவர்கள் வந்தபோது குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களை அணிந்து கொண்டனர்.

41 அழகான மஞ்சத்தில் அமர்ந்து அதன் முன்னால் இருந்த மேசையில் எனக்குரிய நறுமணப்பொருள்களையும் எண்ணெயையும் வைத்தனர்.

42 களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது. பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள். அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.

43 அப்போது வேசித்தனத்தால் தளர்ந்துபோன ஒருத்தியைக் குறித்து நான் உரைத்தேன்; 'அவர்கள் அவளை வேசியாய் நடத்தட்டும், ஏனெனில் அவள் இப்போது வேசிதான்.'

44 விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்; ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.

45 ஆனால் நீதிமான்கள் அவர்களுக்கு வேசித்தனத்தில் ஈடுபட்டுக் கொலை செய்த ணெ;களுக்குரிய தண்டனையைக் கொடுப்பர். ஏனெனில் அவர்கள் வேசிகள்தாம். இரத்தக்கறை அவர்கள் கைகளில் உள்ளது.

46 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அவர்களை நடுக்கத்திற்கும் கொள்ளைக்கும் உள்ளாக்குமாறு அவர்களுக்கு எதிராய் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டிவா.

47 அக்கூட்டமோ அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டிச் சாய்க்கும். அவர்களின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கொன்று, வீடுகளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.

48 இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல் காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.

49 நீங்களும் உங்கள் காமவெறி, சிலை வழிபாடு ஆகிய குற்றங்களின் பாவவினையைச் சுமப்பீர்கள். அதன்மூலம் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள். "

அதிகாரம் 24


1 ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம்; நாளில் ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

2 "மானிடா! இந்த நாளை-பாபிலோன் மன்னன் எருசலேமை முற்றுகையிட்ட இந்த நாளை-குறித்து வை.

3 கலக வீட்டாருக்கு உவமை ஒன்றின் வழியாக எடுத்துக்கூறு; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; கொப்பரை ஒன்றை எடுத்து வை; தண்ணீரை அதில் ஊற்று.

4 உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு; தொடை, தோள்பகுதி ஆகிய நல்ல பாகங்களைப் போடு; பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.

5 மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா; விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு; இறைச்சித் துண்டுகளை வேகவை; எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.

6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; குருதியைச் சிந்தும் நகருக்கு ஐயோ கேடு! துருப்பிடித்த கொப்பரை இது; இதன் துரு நீங்கவே இல்லை; ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு; தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.

7 ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது; வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்; புழுதியில் மறையும்;படித் தரையில் அதை ஊற்றவில்லை.

8 சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.

9 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு! விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.

10 எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு; நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை; நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு; எலும்புகளும் கரியட்டும்.

11 பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை; களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்; அதன் அழுக்கு கரைந்து போகட்டும்; அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.

12 அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது. அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.

13 உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் தூய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.

14 ஆண்டவராகிய நானே உரைத்தேன்; நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பின்வாங்க மாட்டேன். இரக்கம் காட்ட மாட்டேன்; மனம் மாறமாட்டேன். உன் நடத்தைக்கு ஏற்பவும் நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

16 "மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.

17 மெதுவாய்ப் பெருமூச்சுவிடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணாதே! "

18 நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.

19 அப்போது மக்கள் என்னிடம், "நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?" என்று கேட்டனர்.

20 எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது; "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

21 இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச்சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.

22 நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.

23 தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.

24 இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.

25 "மானிடா! நான் அவர்களிடமிருந்து அவர்களுடைய வலிமை, மகிழ்ச்சி, மாட்சி, கண்களின் இன்பம், இதயத்தின் விருப்பம் ஆகியவற்றையும் அவர்களுடைய ஆண்மக்கள் பெண்மக்கள் யாவரையும் என்று எடுத்துக்கொள்கிறேனோ,

26 அன்று அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் ஓடிவந்து இச்செய்தியை உனக்குச் சொல்வான்.

27 அப்போது உன் வாய் திறக்கப்படும். தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மௌனமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய். நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள். "

அதிகாரம் 25


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை.

3 அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். அவர் கூறுவது இதுவே; நீங்கள் எனது தூயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும், இஸ்ரயேல் நாடு பாழாக்கப்பட்டபோதும் யூதாவின் வீட்டார் சிறைப்பிடிக்கப்பட்டபோதும் "ஆகா" என்று கூறி அக்களித்தீர்கள்.

4 எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்; கூடாரங்கள் அடிப்பார்கள்; உங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்; உங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள்.

5 இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து வன்மனத்துடன் மகிழ்ந்தீர்கள்.

7 எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி உங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன். உங்களை மக்களினங்களினின்று பிரித்து, நாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மோவாயும் சேயிரும், "இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்" எனக் கூறினர்.

9 எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்; அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.

10 மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.

11 மோவாபின்;மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும்.

12 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது.

13 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்; அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.

14 என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு ஏதோமுக்குச் செய்வார்கள். அது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பெலிஸ்தியர் பழிவாங்குமாறு இதயத்தில் பகை உணர்வுடன் செயல்பட்டனர். பழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர்.

16 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.

17 வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 26


1 பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! எருசலேமைக் குறித்து தீர் நகரம் கூறியது; "ஆகா! நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது அழிவில் வீழ்ந்;துகிடப்பதால் நான் வளமடைவேன். "

3 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; தீர் நகரே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; கடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப் பல மக்களினங்கள் எழும்பும்படி செய்வேன்.

4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்; அதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்; இடிபாடுகளும் அதில் இராதபடி வெறும் கற்பாறையாகத் தோன்றச் செய்வேன்.

5 கடல் நடுவே வலைகாயும் திட்டாய் அது மாறும்; ஏனெனில் நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எல்லா மக்களினங்களுக்கும் கொள்ளைப் பொருளாகும் அந்நகர்.

6 உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள்வாளால் அழிக்கப்படும்; அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

7 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ வடக்கிலுள்ள மன்னரின் மன்னனாம் பாபிலோனின் மன்னன் நெபுகத்;னேசரைக் குதிரைகளோடும் தேர்களோடும் குதிரை வீரர்களோடும் பெரிய படைகளோடும் தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன்.

8 உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை அவன் வாளால் வீழ்த்துவான்; உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி உன் மதில்களுக்கு எதிராய் முற்றுகை அரண் அமைத்து உனக்கெதிராய்த் தன் கேடயங்களை உயர்த்துவான்.

9 அரண்தகர் பொறிகளை உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி, உன் காவல் மாடங்களைப் படைக் கலன்களால் நொறுக்குவான்.

10 அவனுடைய குதிரைகள் மிகுதியானவை; எனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல் அவன் உன் நகரில் நுழைகையில், குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் எழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும்.

11 குதிரைகள் குளம்புகளால் உன் தெருக்களை அவன் மிதிப்பான்; வாளால் உன் மக்களைக் கொல்வான்; வலிமையான உன் தூண்கள் தரையில் வீழும்.

12 அவர்கள் உன் செல்வத்தைக் கொள்ளையடித்து உன் வாணிபச் சரக்கைப் பறித்துக் கொண்டுபோவர்; உன் மதில்களை இடிப்பர்; உன் அழகிய வீடுகளை அழிப்பர்; உன் கற்களையும் மரங்களையும் இடிபாடுகளையும் கடலில் எறிவர்.

13 உன் பாடலின் ஒலியை நிறுத்திவிடுவேன்; இனிமேல் உன் யாழோசை கேட்காது.

14 உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன்; நீயோ வலைகாயும் திட்டாவாய்; ஒருபோதும் நீ திரும்பக் கட்டியெழுப்பப்பட மாட்டாய்; ஏனெனில், ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 தலைவராகிய ஆண்டவர் தீர்நகருக்குக் கூறுவது இதுவே; நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில், உன் மக்கள் காயமுற்று ஓலமிடுகையில், அவர்கள் உன் நடுவே கொல்லப்படுகையில், கடற்கரை நகர்கள் அதிராவோ?

16 அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்; திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்; ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர்.

17 அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்; சீர்மிகு மாநகரே! நெய்தல்நில மாந்தரால் நிறைந்தவளே! மாகடலில் வலிமையோடு விளங்கினையே! நீயும் உன்னில் வாழ் மக்களும் அடுத்திருந்த அனைவர்க்கும் பேரச்சம் விளைவித்தீர்! அந்தோ! என்னே உன் வீழ்ச்சி!

18 இப்போது, உன் வீழ்ச்சியில் கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன; உன் அழிவில் தீவுகள் திகிலுறுகின்றன.

19 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில்,

20 நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்; வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய்.

21 உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்; நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 27


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு.

3 கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்; தீர் நகரே! "நான் அழகில் சிறந்தவள்" என நீ சொல்லிக்கொள்கின்றாய்.

4 கடலின் தொலைவிடத்தை உன் எல்லைகள் எட்டும். உன்னைக் கட்டினோர் உன் அழகை நிறைவு செய்தனர்.

5 செனீரிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உனக்குப் பலகைகள் செய்தனர்; லெபனோனின் கேதுரு மரத்தால் உனக்குப் பாய்மரம் அமைத்தனர்.

6 பாசானிலிருந்து கொண்டுவந்த கருவாலி மரங்களால் துடுப்புகள் செய்தனர்; கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால் உன் மேல்தளம் கட்டி அதில் தந்தங்களை இழைத்தனர்.

7 எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று; எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின.

8 சீதோன், அர்வாத்து குடிமக்கள் உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்; தீர் நகரே! உன் திறமைமிக்க ஆடவர் உன்னிடம் இருந்தனர்; அவர்களே உன் மாலுமிகள் ஆயினர்.

9 கேபால் நகரின் மூத்த கைவினைஞர் பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்; கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் அதன் மாலுமிகளும் உன் வாணிபப் பெருக்கில் ஆர்வம் கொண்டனர்.

10 பாரசீகர் லூதியர், பூத்தியர் முதலியோர் உன் படையில் வீரராய்ச் சேவை செய்தனர். உன் மதில்களில் அவர்கள் தங்கள் கேடயங்களையும், தலைச் சீராக்களையும் தொங்கவிட்டு உனக்குப் பெருமை சேர்த்தனர்.

11 அர்வாதியரும், ஏலேக்கியரும் உன் மதில்மேல் எப்பக்கமும் நின்றனர். கம்மாதியர் உன் காவல்மாடங்களில் நின்றனர்; தங்கள் கேடயங்களை உன் மதில்களில் எப்பக்கமும் தொங்கவிட்டு உன் அழகுக்கு அழகு சேர்த்தனர்.

12 உன் பெருஞ்சொத்து காரணமாய் தர்சீசு உன்னோடு வாணிபம் செய்தது. வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம் ஆகியவற்றை உன் வாணிபப் பொருள்களாய்ப் பண்டம் மாற்றினர்.

13 யாவானும் தூபாலும் மெசேக்கும் உன்னோடு வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் அடிமைகளையும் வெண்கலத்தையும் பண்டம் மாற்றினர்.

14 உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர்.

15 தெதான் மக்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். பல கடற்கரை நகர் மக்கள் உன் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் உன் பொருள்களுக்கு ஈடாய் தந்தனர்.

16 சிரியர் உன் மிகுதியான பொருள்களை முன்னிட்டு உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் சிவப்புக் கற்கள், சிவப்புப் பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், விலையுயர்ந்த நார்ப்பட்டு ஆடைகள், பவளங்கள், பளிங்குக் கற்கள் யாவற்றையும் உன் சந்தைக்குக் கொண்டு வந்தனர்.

17 யூதாவும், இஸ்ரயேலும் உன்னுடன் வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் மின்னித்து, பன்னாக்கு ஆகிய ஊர்களின் கோதுமை, தைலங்கள், தேன், எண்ணெய், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.

18 தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர்.

19 தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.

20 தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர்.

21 உன் வாடிக்கையாளரான அரேபியா, கேதார் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆட்டுக்குட்டிகளையும், கிடாய்களையும், வெள்ளாடுகளையும் கொண்டுவந்து உன்னுடன் வாணிபம் செய்தனர்.

22 சேபா மற்றும் இராமா ஆகிய நகர்களின் வணிகர்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் உன் பலவகைப் பொருள்களுக்காய் விலையுயர்ந்த நறுமணப் பொருள்களையும் இரத்தினக் கற்களையும் தங்கத்தையும் பண்டம் மாற்றினர்.

23 ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர்.

24 அவர்கள் சிறந்த போர்வைகள், நீலப்பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், பல வண்ணக் கம்பளங்கள், நேர்த்தியாய்ப் பின்னிய கயிறுகள் ஆகியவற்றை உன் சந்தையில் கொண்டுவந்து பண்டம் மாற்றினர்.

25 தர்சீசு நகர்க் கப்பல்கள் உன் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன; கடல் நடுவே மிகுந்த சரக்கால் சுமத்தப்பட்டுள்ளாய்!

26 தண்டு வலிப்போர் உன்னை ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்; ஆனால் கீழைக்காற்று கடலின் நடுவே உன்னை உடைத்துவிடும்.

27 உன் கப்பல் உடையும் நாளில் உன் செல்வமும் வணிகப் பொருள்களும் உன் கடலோடிகளும் மாலுமிகளும் பழுதுபார்ப்போரும் வணிகரும் உன் போர்வீரர் யாவரும், கப்பலில் இருக்கும் எல்லாரும் ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.

28 உன் மாலுமிகள் ஓலமிடுகையில், கடற்கரை நாடு அதிரும்.

29 தண்டு வலிப்போர் அனைவரும் கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்; கடலோடிகளும் எல்லா மாலுமிகளும் கடற்கரையில் வந்து நிற்பர்.

30 உரத்த குரலெழுப்பி, உன்னைக் குறித்துக் கசந்தழுவர்; புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர்; சாம்பலில் புரண்டழுவர்.

31 உன் பொருட்டுத் தங்கள் தலைகளை மழித்துக்கொள்வர்; சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்; உனக்காக உளம் நொறுங்கி அழுவர்; மனங்கசந்து புலம்புவர்.

32 உனக்காக அழுது புலம்புகையில், உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடுவர்; "கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட தீருக்கு நிகரான நகரேது?" எனப் பாடுவர்.

33 உன் வணிகப் பொருள்கள் கடல் கடந்து செல்கையில், பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்; உன் பெரும் செல்வத்தாலும் வணிகப் பொருள்களாலும் மண்ணுலகின் மன்னர்களைச் செல்வர் ஆக்கினாய்.

34 இப்போது நீயோ கடலால் நொறுங்கிவிட்டாய்; கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விட்டாய்; உன் பொருள்களும் உன் நடுவில் இருந்த மாலுமிகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர்.

35 கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்; அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்; அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.

36 மக்களினங்களின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கின்றனர்; நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்! இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்!

அதிகாரம் 28


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் இதயத்தின் செருக்கில், "நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்" என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!

3 தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!

4 உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.

5 உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.

6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,

7 மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர்.

8 படு குழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே!

9 அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் "நானே கடவுள்" என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.

10 விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

11 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

12 மானிடா! தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய்.

13 கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்! விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருநதாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.

14 காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.

15 நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.

16 பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்; பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.

17 உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது; உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்; எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்; மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.

18 உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்; எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன். உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன்.

19 உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ; இனிமேல் நீ இருக்கமாட்டாய். "

20 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

21 மானிடா! சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல்.

22 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, "நானே ஆண்டவர்" என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.

23 உன்னிடத்தில் கொள்ளை நோய் வரச்செய்து, உன் தெருக்களில் குருதி ஓடச் செய்வேன். கொலை செய்யப்பட்டோர் உன் நடுவில் விழுந்துகிடப்பர்; உனக்கு எதிராய் எப்பக்கமும் வாள் இருக்கும்; அப்போது "நானே ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.

24 இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போர், அவர்கள் "நானே தலைவராகிய ஆண்டவர்" என்பதை அறிந்து கொள்வர்.

25 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் தூய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர்.

26 அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்; வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது "நானே ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 29


1 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.

3 அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! "நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்" என்கிறாய் நீ!

4 ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்;டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.

5 உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்; உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ; உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்; காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன்.

6 அப்போது எகிப்தில் வாழும் யாவரும் "நானே ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.

7 இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ; அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்; அவர்கள் தோள்களைக் கிழித்தாய்; உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.

8 எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.

9 எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது "நானே ஆண்டவர்" என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் "நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்" என்று உரைத்தாய்.

10 எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை-கூசு எல்லைப் பகுதிவரை-எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.

11 ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார்.

12 அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.

13 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.

14 எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.

15 அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.

16 இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது "நானே தலைவராகிய ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.

17 இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

18 "மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் "அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.

19 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.

20 அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

21 அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, "நானே ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 30


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது" என்று அலறுங்கள்;

3 ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்; ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது; அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.

4 எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்; கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்; எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்; அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.

5 எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.

6 ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்; அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்; மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

7 அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்; அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.

8 நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து கொள்வர்.

9 அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்; எகிப்தின்; அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்; ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.

10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.

11 மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்;த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்; எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.

12 ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அன்னியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.

13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் சிலைகளை அழிப்பேன்; நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்; எகிப்தில் இனி மன்னன் இரான்; நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.

14 பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்; சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்; நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.

15 எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்; நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.

16 எகிப்துக்கு நெருப்பிடுவேன்; சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்; புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்; தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.

17 ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்; அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.

18 எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்; இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்; மேகங்களால் அது மூடப்படும்; சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.

19 இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து கொள்வர்.

20 பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

21 "மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.

22 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும்-நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும்-முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.

23 மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.

24 பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.

25 நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

26 எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். "

அதிகாரம் 31


1 பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்; மேன்மையில் உனக்கு நிகர் யார்?

3 இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று; அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.

4 தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது; ஆழ் ஊற்றுகள் அதனை உயர்ந்து வளரச் செய்தன; அவை தம் அருவிகளாக அதனைச் சுற்றி ஓடி கால்வாய்களாகக் காட்டின் எல்லா மரங்களுக்கும் நீர் பாய்ச்சின.

5 காட்டின் எல்லா மரங்களையும் விட அது ஓங்கி வளர்ந்தது; அதன் தளிர்கள் பெருகின; நீர் வளத்தால் கிளைகள் நீண்டன; கொப்புகள் மிகுந்தன.

6 வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின; காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன; அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.

7 மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால், கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.

8 கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு அதற்குச் சமமான கிளைகள் இல்லை; அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை; கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும் அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை.

9 அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்; கடவுளின் "சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம் அதன்மேல் பொறாமை கொண்டன.

10 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து, தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது.

11 எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன். அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான். நானும் அதனைப் புறம்பாக்குவேன்.

12 மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர் அதனை வெட்டி வீழ்த்திவிடுவர். மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்; அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும். மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து அதனைப் புறக்கணிப்பர்.

13 வீழ்ந்து கிடக்கும் அதன் மேல் வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும். அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.

14 இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும் மிகுந்த உயரத்திற்கு வளராது; தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது; நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும்; அளவுக்கு உயராது. ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும் மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.

15 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை முன்னிட்;டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.

16 கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.

17 அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள் அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.

18 மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்? ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய். விருத்தசேதனமில்லார் நடுவே, வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 32


1 பன்னிரண்டாம் ஆண்டில், மாதத்தின் முதல் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 "மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடி, அவனிடம் சொல்; நாடுகளிடையே உன்னை ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்! ஆனால், நீ நீர் வாழ் பெருவிலங்குபோல் இருக்கின்;றாய்! ஆற்றினைச் சேறாக்குகின்றாய்! கால்களினால் நீரினைக் கலக்குகின்றாய்! ஆறுகளைக் குழப்புகின்றாய்.

3 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு நான் என் வலையை உன்மீது வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துவருவர்.

4 உன்னைத் தரையில், வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்; வானத்துப் பறவைகள் அனைத்தும் உன்மேல் வந்து அடையும்; மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும் உன்னை அடித்து விழுங்கும்.

5 உன் சதையை மலைகளின்மேல் வீசியெறிந்து, பள்ளத்தாக்குகளை உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.

6 வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்; நீரோடைகள் உன்னால் நிரம்பியிருக்கும்.

7 நான் உன்னை இல்லாமல் ஆக்கும்போது, வானங்களை நான் மூடுவேன்; அவற்றின் விண்மீன்களை இருளச் செய்வேன்; கதிரவனை மேகத்தால் மறைத்திடுவேன்; நிலாவும் அதன் ஒளியைக் கொடாது.

8 வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம் உனக்கு இருண்டு போகச் செய்து, உன் நாட்டின்மீது இருள் கவியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 நீ அறியாத அன்னிய நாட்டினரிடையே நான் உனக்கு அழிவைக் கொண்டுவருகையில், பல மக்களினங்களின் இதயங்களை கலக்கமுறச் செய்வேன்.

10 பல்வேறு மக்களினங்;களை உன்னைக் குறித்துத் திகிலடையச் செய்வேன். நான் என் வாளை அவர்களின் மன்னர்கள்முன் வீசுகையில், உன்னைக் குறித்து அவர்கள் நடுக்கமுறுவர். நீ வீழ்ச்சியுறும் நாளில், அவர்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த உயிர் குறித்து நடுங்குவர்.

11 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.

12 மக்களினங்களில் மிகக் கொடியவரான வலியோரின் வாள்களினால் உன் படைத்திரளை வீழ்ச்சியுறச் செய்வேன். அவர்கள் எகிப்தின் பெருமையைக் குலைத்து அதன் மக்கள்திரளை அழிப்பர்.

13 நீர்நிலைகளின் ஓரத்திலுள்ள அதன் கால்நடைகளை எல்லாம் நான் அழித்து விடுவேன். மனித காலடியோ குளம்போ அவற்றை இனிக் குழப்பாது.

14 அப்போது நான் நீர்நிலைகளைத் தெளியச் செய்து, அவற்றின் ஆறுகளை எண்ணெய் போல் ஓடச்செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 எகிப்திய நாட்டை நான் பாழாக்குவேன், அதன் நிலத்தினின்று, அதில் உள்ளது அனைத்தையும் பறித்திடுவேன்; அதில் வாழ்வோரை எல்லாம் அழித்திடுவேன். அப்போது, "நானே ஆண்டவர்" என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

16 இது புலம்பிப் பாடப்படவிருக்கும் ஓர் இரங்கற்பா, நாடுகளின் புதல்வியர் இதனைப் பாடிடுவர். எகிப்தையும் அதன் அனைத்து மக்கள் திரளையும் குறித்துப் பாடிடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

17 பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

18 மானிடா! எகிப்தின் மக்கள் திரளைக் குறித்து நீ ஓலமிடு; அதனையும் பெருமைமிகு நாடுகளின் புதல்வியரையும் படுகுழிக்குள் செல்கிறவர்களோடு கீழுலகுக்கு அனுப்பிவை.

19 "அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்? நீ கீழிறங்கி, விருத்தசேதனம் இல்லாரோடு கிட. "

20 வாளால் கொல்லப்படுவோரோடு எகிப்தின் மக்கள் வீழ்வர். இதோ! ஒரு வாள் அவர்களைக் கொல்ல உருவப்பட்டுள்ளது.

21 போரில் வலிமைமிக்கோர் பாதாளத்தின் நடுவினின்று எகிப்தியரையும் துணையாளரையும் குறித்து "விருத்தசேதனமில்லார் வாளால் வெட்டுண்டுவர்களுடன் கிடக்கின்றனரே" என்பர்.

22 அதோ அசீரியா கிடக்கின்றாள்! அவளுடன் அவளுடைய மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே. அவளைச் சுற்றி கல்லறைகள் கிடக்கின்றன.

23 அவர்களின் கல்லறைகள் படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன; அவளுடைய மக்கள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவருமே வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே; வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.

24 அதோ, ஏலாம் கிடக்கின்றாள்! அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் அவளுடைய மக்கள் கூட்டத்தார் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்; விருத்தசேதனமில்லாமல் கீழுலகுக்குள் சென்றவர்கள்; வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து அவர்களும் தங்கள் மானக்கேட்டைச் சுமக்கின்றார்கள்.

25 வெட்டுண்டோர் நடுவே அவளுடைய படுக்கையை அமைந்துள்ளது. அவளுடைய மக்கள் திரள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றன; அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லார்; வாளால் வெட்டுண்டவர்கள்; வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் படுகுழிக்குச் செல்வோருடன் சேர்ந்து தங்கள் மானக்கேட்டைச் சுமந்து வெட்டுண்டவர்களின் நடுவிலே கிடக்கின்றார்கள்.

26 அதோ! மெசேக்கும் தூபாலும் கிடக்கின்றனர்! அவர்களின் மக்கள் கூட்டத்தார் அவர்களின் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; வாளால் வெட்டுண்டவர்கள்; வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.

27 தங்கள் போர்க் கருவிகளுடன் பாதாளத்தில் இறங்கித் தங்கள் வாள்களைத் தங்கள் தலைகளுக்கு அடியிலும், தங்கள் கேடயங்களைத் தங்கள் எலும்புகள் மேலும் வைத்துக்கொண்டு இறந்துபோன பழங்கால வீரருடன் அவர்கள் கிடக்கவில்லை; ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம் வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.

28 எனவே, நீங்கள் நொறுக்கப்பட்டு, விருத்தசேதனமில்லார் நடுவில் வாளால் வெட்டுண்டவர்களோடு கிடப்பீர்கள்.

29 அதோ ஏதோமும் அவளுடைய மன்னர்களும், முதன்மைத் தலைவர்களும் கிடக்கின்றார்கள்! அவர்கள் எத்துணை வலிமை உடையவர்களாயிருந்தும் "வாளால் வெட்டுண்டவர்களோடு, விருத்தசேதனமில்லாது, படுகுழிக்குச் செல்வோருடன் கிடக்கின்றார்கள்.

30 அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்; அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவத்தவர்களாயிருந்தும் மானக்கேட்டுக்கு உள்ளாகி, வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள். விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு அவர்கள் கிடக்கின்றார்கள்; படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.

31 பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும் தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

32 வாழ்வோரின் நாட்டில் அவன் அச்சத்தைப் பரவச் செய்ததால், பார்வோனும் அவனுடைய மக்கள் கூட்டத்தார் அனைவரும் விருத்தசேதனமில்லாது வாளால் வெட்டுண்டவர்களுடன் கிடப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 33


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்; ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,

3 அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,

4 எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.

5 எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.

6 ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.

7 அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.

8 தீயோரிடம் நான், "ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்" என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

9 ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

10 நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்; நீங்கள் சொல்கிறீர்கள்; "எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம். எப்படி நாங்கள் வாழமுடியும்? "

11 அவர்களிடம் சொல்; "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?

12 மேலும், மானிடா! உன் மக்களிடம் சொல்; நேர்மையாளர் தவறிழைக்கும்போது, அவர்களுடைய நற்செயல்கள் அவர்களை விடுவிக்கா. தீயோரோ தம் தீமையினின்று மனம் மாறிவிட்டால், தம் தீமையை முன்னிட்டு வீழ்ச்சியடையார். நேர்மையாளர் தவறிழைக்கும்போது தம் முன்னைய நற்செயல்களை முன்னிட்டு வாழமுடியாது.

13 நேர்மையாளரிடம் அவர்கள் உறுதியாக வாழ்வது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் முன்னைய நற்செயல்களை நம்பித் தவறிழைத்தால், அவர்களுடைய நற்செயல்களில் எதுவுமே எண்ணப்படமாட்டாது. அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.

14 மாறாக, தீயோரிடம் "நீங்கள் சாவது உறுதி" என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் பாவத்தினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்-

15 அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்தால், திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து, தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால்-அவர்கள் வாழ்வது உறுதி; சாகார்.

16 அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்வது உறுதி.

17 இருப்பினும், "ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது" என உன் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் நெறிமுறைதான் நீதியற்றது.

18 நேர்மையாளர் தம் நன்னெறியினின்று பிறழ்ந்து தவறிழைத்தால் அதன்பொருட்டு அவர்கள் சாவர்.

19 தீயோரும் தம் தீமையினின்று விலகி நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அதன்பொருட்டு அவர்கள் வாழ்வர்.

20 இருப்பினும், "ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது" என நீங்கள் சொல்கின்றீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! உங்களில் ஒவ்வொருவரையும் அவரவர் நெறிமுறைக்குத் தக்கவாறு நான் தீர்ப்பிடுவேன். "

21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதத்தின் ஐந்தாம் நாள், எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து, "நகர் வீழ்;ந்துவிட்டது" என்றான்.

22 தப்பியவன் வருவதற்குமுன் மாலையில் ஆண்டவரின் கை என் மேல் இருந்தது. அம்மனிதன் காலையில் என்னிடம் வருமுன் ஆண்டவர் என்னை வாய்திறக்கச் செய்தார். ஆகவே என் வாய் திறக்கப்பட்டிருக்க, நான் பேச இயலாதவனாய் இல்லை.

23 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

24 மானிடா! இஸ்ரயேல் நாட்டின் பாழிடம்வாழ் மக்கள், "ஆபிரகாம் தனியொரு மனிதராக இருந்தும் அவர் நாட்டை அவர்தம் உடைமையாகக் கொண்டிருந்தார். அப்படியிருக்க, நாம் பலராய் இருக்கும் போது, இந்த நாடு நமக்கே உரிமையாய்த் தரப்பட்டுள்ளதன்றோ?" என்று சொல்கிறார்கள்.

25 எனவே அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் குருதியுடன் சேர்ந்து இறைச்சியை உண்கிறீர்கள்; உங்கள் தெய்வச் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்! கொலை செய்கிறீர்கள். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?

26 உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்; அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?

27 அவர்களுக்கு இதைச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! பாழிடம்வாழ் எஞ்சியோர் வாளால் வீழ்வர். வயல் வெளியில் இருப்போரைக் காட்டு விலங்குகளுக்கு இரையாய் அளிப்பேன். கோட்டையிலும் குகையிலும் தங்கியிருப்போர் கொள்ளை நோயால் மடிவர்.

28 அழிவுக்கும் வெறுமைக்கும் நாட்டைக் கையளிப்பேன். அதன் வலிமையின் பெருமை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இஸ்ரயேலின் மலைகள் பாழாய்ப்போம். அங்கே நடமாட்டம் ஏதும் இராது.

29 அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் பொருட்டும் நான் நாட்டைப் பாழாக்குகையில் நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

30 மானிடா! உன் மக்களினத்தார் உன்னைக் குறித்து சுவர்களின் அருகிலும் வீடுகளின் கதவருகிலும் பேசிக்கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பாரிடம் "ஆண்டவரிடமிருந்து வரும் செய்தி என்ன எனக் கேட்க வாருங்கள்" எனக் கூறுகின்றார்கள்.

31 என் மக்கள் வழக்கம்போல் உன்னிடம் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் அமர்ந்து உன் சொற்களைக் கேட்கின்றனர். ஆனால் அவற்றையோ கடைப்பிடிப்பதில்லை. அவர்களின் உதடுகள் அன்பொழுகப் பேசுகின்றன; உள்ளமோ நேர்மையற்ற பொருளைத் தேடி ஓடுகின்றது.

32 அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய். அவர்கள் உன்சொற்களைக் கேட்கின்றனர்; ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.

33 உண்மையில் இவை வரப்போகின்றன. அப்பொழுது தங்கள் நடுவே ஓர் இறைவாக்கினர் இருந்தார் என உணர்ந்து கொள்வர்.

அதிகாரம் 34


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

2 மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை. அவர்களுக்கு இறைவாக்குரைத்துச்சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்!

3 நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை.

4 நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.

5 ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின.

6 என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத்;; தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

7 எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;

8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.

9 எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;

10 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

11 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.

12 ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.

13 மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.

14 நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.

15 நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

16 காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.

17 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

18 நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா, எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள்? நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்கள்!

19 உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை என் மந்தை உண்ண வேண்டுமா? உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா?

20 எனவே, தலைவராகிய ஆண்டவர் அவர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்; நானே கொழுத்த ஆட்டுக்கும் நலிந்த ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.

21 நலிந்த ஆடுகளை விலாவினாலும் முன்னந்தொடையினாலும் இடித்துத் தள்ளி, உங்கள் கொம்புகளால் முட்டி அவற்றை வெளியே விரட்டியடிக்கிறீர்கள்.

22 எனவே, நான் என் மந்தையை மீட்பேன். அவை இனிமேல் கொள்ளையிடப்படா. நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.

23 எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன். அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.

24 ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.

25 சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன். காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன். எனவே என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.

26 அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன். ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன். அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.

27 வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும். நிலமோ நல்விளைச்சல் நல்கும். அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர். நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து, அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.

28 இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார். நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா. அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.

29 சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன். அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.

30 அப்போது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும், இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள் என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

31 நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள், நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 35


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்குரை.

3 அதற்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.

4 உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

5 ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு நீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில், அவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில் வாளுக்கு இரையாக்குமாறு கையளித்தாய்.

6 எனவே, என்மேல் ஆணை! உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன். அப்பழி உன்னைத் தொடரும், நீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

7 சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.

8 உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.

9 உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.

10 ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும் நீ இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை; நான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன்" எனச் சொன்னாய்.

11 எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்;;போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

12 அப்;போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். "அவை பாழாக்கப்பட்டுவிட்டன; இரையாகத் தரப்பட்டுள்ளன" என்று நீ சொன்னாய்.

13 நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.

14 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.

15 இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அதிகாரம் 36


1 மானிடா! இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்; இஸ்ரயேல் மலைகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

2 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களைக் குறித்து உங்கள் பகைவன், "ஆகா! பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின" என்றான்.

3 எனவே இறைவாக்காகச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.

4 எனவே, இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் அழிவின் பாழிடங்களுக்கும், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகள் கொள்ளையிட்டு ஏளனம் செய்யும், குடிகளற்ற நகர்களுக்கும், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே;

5 அவர் கூறுவது; உண்மையாகவே எரியும் என் சினத்தால் மற்ற நாடுகளுக்கெதிராகவும் ஏதோம் முழுவதற்கும் எதிராகவும் நான் பேசுகிறேன். ஏனெனில் இதயத்தில் மகிழ்வோடும் கெடுமதியோடும் என் நாட்டின் மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிட நாட்டைத் தாங்;;களே உடைமையாக்கிக் கொண்டன.

6 எனவே இஸ்ரயேல் நாட்டைக் குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் என் சகிப்பின்மையிலும் சினத்திலும் பேசுகிறேன். மக்களினங்களின் வசைமொழிகளை நீங்கள் சுமக்கிறீர்களே.

7 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கையுயர்த்தி நான் ஆணையிடுகிறேன். உண்மையாகவே உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்கள் தங்கள் இழிவைத் தாங்களே சுமப்பர்.

8 ஆனால் இஸ்ரயேல் மலைகளே! நீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி, என் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள். ஏனெனில் அவர்கள் விரைவில் வந்துவிடுவர்.

9 ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்; உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.

10 உங்கள் மக்களைப் பெருகச் செய்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் பெருகச் செய்வேன். நகர்களில் மக்கள் குடியேறுவர். அழிவிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்.

11 உங்களில் மானிடரையும் விலங்குகளையும் மிகுதியாக்குவேன். அவர்கள் பலுகிப் பெருகுவர். முற்காலங்களைப்போல் உங்களைக் குடியேற்றுவேன். முந்தைய காலங்களை விட மிகுதியாக நீங்கள் வளமடையச் செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

12 இஸ்ரயேல் மக்களாகிய என் மக்களை உங்களில் நடமாடச் செய்வேன். அவர்கள் உங்களை உடைமையாக்கிக் கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் அவர்களைப் பிள்ளையில்லாதாராய்ச் செய்யமாட்டீர்கள்.

13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களிடம் மக்கள் "நீங்கள் மனிதரை விழுங்கி, உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள்" என்று சொல்கிறார்கள்.

14 எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள். உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 இனிமேல், நாடுகளின் பழிச்சொல்லை நீங்கள் கேட்கவிடமாட்டேன்; மக்களினங்களின் இழிசொல்லை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்; உங்கள் நாட்டை விழ வைக்கமாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

16 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது;

17 மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது.

18 எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர்.

19 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன்.

20 வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது.

21 இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன்.

22 எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.

23 நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

24 நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.

25 நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.

26 நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.

27 என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.

28 நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

29 உங்கள் எல்லாத் தீட்டிலிருந்தும் நான் உங்களை மீட்பேன். தானியம் முளைக்கச் செய்து அதை மிகுதியாய் விளையச் செய்வேன். உங்கள்மேல் பஞ்சம் வரவிடேன்.

30 நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி மரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.

31 அப்போது நீங்கள் உங்கள் தீய வழிகளையும், தகாத செயல்;களையும் எண்ணி உங்கள் பாவங்களுக்காகவும் உங்கள் அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே வெறுப்பீர்கள்.

32 உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை; இது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.

33 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களைத் தூய்மைப்படுத்தும் நாளில், நகர்களில் உங்களை மீண்டும் குடியேற்றுவேன். அழிவிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவேன்.

34 பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும், பாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.

35 அப்போது மக்கள், "பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய்;க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து "குடியேற்ற நகர்களாகிவிட்டனவே!" என்பர்.

36 அப்போது உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தார், ஆண்டவராகிய நான் அழிந்திருந்ததைக் கட்டியுள்ளேன் என்றும் பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்கியுள்ளேன் என்றும் அறிந்துகொள்வர். ஆண்டவராகிய நான் இதை உரைத்தேன். நானே இதைச் செய்து முடிப்பேன்;.

37 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மேலும் இதனை நான் அவர்களுக்குச் செய்யும்படி இஸ்ரயேல் வீட்டார் என்னிடம் மன்றாடச் செய்வேன். அவர்களின் மக்களை மந்தை போல் பெருகச் செய்வேன்.

38 அவர்கள் விழா நாள்களில் பலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்; அழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 37


1 ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.

2 அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

3 அவர் என்னிடம், "மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?" என்று கேட்டார். நான், "தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே" என்று மறுமொழி அளித்தேன்.

4 அவர் என்னிடம் உரைத்தது; நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. "உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்" என்று சொல்.

5 தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்; நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன்;. நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

6 நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்;;;களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.

7 எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.

8 நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.

9 பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை; மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான்கு காற்றுகளிலிருந்தும் "உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர். "

10 எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.

11 அவர் மேலும் என்னிடம் கூறியது; மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ "எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்" எனச் சொல்கிறார்கள்.

12 எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.

13 அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

14 என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்;துவேன். "ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்" என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

16 மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள். அதில் "யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது" என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் "யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் உரிய எப்ராயிமின் கோல்" என்று எழுது.

17 அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர்.

18 உன் மக்களினத்தார் உன்னிடம், "இவற்றால் என்ன கூட்;டிக்காட்ட விழைகிறீர்?" எனக் கேட்கையில்,

19 அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் எப்ராயிமின் கையிலிருக்கும் யோசேப்பு மற்றும் அதனுடன் சேர்ந்த இஸ்ரயேல் குலங்களின் கோலை எடுத்து அதை யூதாவின் கோலுடன் சேர்த்து அவற்றை ஒரே கோலாய் மாற்றுவேன். அவை என் கையில் ஒரே கோலாய் இருக்கும்.

20 நீ எழுதிய கோல்களை அவர்கள் கண்முன்னால் உன் கையில் பிடித்து,

21 அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.

22 இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.

23 அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.

24 என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர்.

25 நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.

26 நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.

27 என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்.

28 என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 38


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

2 மானிடா! மெசேக்கு மற்றும் தூபால் இனத்தவர்களின் தலைவனும் மாகோகு நாட்டினனுமான கோகு என்பவனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு எதிராக இறைவாக்குரை.

3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

4 நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி, முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும், குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன் கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன்.

5 அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.

6 கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும், தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும்-உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.

7 நீ தயாராயிரு; உன்னுடன் சேர்ந்திருக்கும் கூட்டத்தினரையும் தயாராய் இருக்கச் சொல். நீ அவர்களுக்குத் தலைமை தாங்குவாய்.

8 பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய். வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த, இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை, வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய். வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.

9 நீ புயல்போல் முன்னேறி, மேகம்போல் நாட்டை மூடுவாய். நீயும் உன்னுடனுள்ள அனைத்து படைகளும் உன்னுடனுள்ள பல மக்களினங்களும் இவ்வாறு செய்வீர்கள்.

10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.

11 நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன். அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன். அவர்களுக்கு அரண் இல்லை; அடைக்கும் தாழ் இல்லை; வாயில் கதவும் இல்லை.

12 எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.

13 சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும், தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம் "உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ, பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ, பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு, கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு, மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ?" எனக் கேட்பார்கள்.

14 எனவே, மானிடா! நீ இறைவாக்குரைத்துக் கோகுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்கள் இஸ்ரயேலர் பாதுகாப்பாய் வாழும் நாளை நீ அறிவாயோ?

15 தொலை வடக்குப் பகுதிகளிலிருந்து நீ உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களுடன் வருவாய். நீங்கள் யாவரும் குதிரையில் ஏறிய பெரிய வலிய படைகளாய் வருவீர்கள்.

16 நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு, நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய். கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன். நான் மக்களினங்களின் கண்முன்னே என்னை உன் வழியாய்த் தூயவர் என வெளிப்படுத்தும்போது அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.

17 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய் எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே! அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க் கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.

18 அந்நாளில் நடப்பது இதுவே; கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

19 என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.

20 கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும்.

21 நான் கோகுக்கு எதிராய் என் எல்லா மலைகளிலும் வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.

22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.

23 இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிய பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அதிகாரம் 39


1 மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

2 நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி, இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.

3 பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.

4 இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்; நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

5 நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

6 நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

7 நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

8 இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்; இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.

10 அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

11 அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன். அது வழிப்போக்கரின் பாதையில் இருக்கும். ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர். எனவே அதை "அமோன் கோகு பள்ளத்தாக்கு" என அழைப்பர்.

12 நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.

13 நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர். நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள் அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

14 நாட்டைத் தூய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர். அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர். ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.

15 அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.

16 இத்துடன் "அமோனா" எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்; இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.

17 மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்; வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.

18 வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள். நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள், பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள்.

19 நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில் நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு, வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

20 என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும் வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

21 நான் என் மாட்சியை வேற்றினத்தாரிடையே வெளிப்படுத்துவேன். நான் நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்பையும் அவர்கள் மீது விழும் என் கைவலிமையையும் எல்லா மக்களினத்தாரும் காண்பர்.

22 ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்பதை அந்நாளிலிருந்து இஸ்ரயேல் வீட்டார் அறிந்துகொள்வர்.

23 இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவராய் நடந்ததால் தங்கள் பாவத்தின் பொருட்டுச் சிறையிருப்புக்குச் சென்றனர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர். எனவே நான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அவர்களைப் பகைவர்களிள் கையில் ஒப்புவித்தேன். அவர்கள் எல்லாரும் வாளால் வீழ்ந்தனர்.

24 நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.

25 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இப்போது நான் யாக்கோபை முன்னைய நன்னிலைக்குக் கொணர்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவர் மீதும் மனம் இரங்குவேன். என் திருப்பெயர் குறித்து பேரார்வம் கொண்டிருப்பேன்.

26 அவர்கள் தங்கள் நாட்டில் எவருடைய அச்சுறுத்தலுமின்;றிப் பாதுகாப்புடன் வாழும்போது, தங்கள் அவமானத்தையும் அவர்கள் எனக்குச் செய்த எல்லா நம்பிக்கைத் துரோகங்களையும் மறந்து விடுவர்.

27 நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங்;கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.

28 அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே சிறையிருப்புக்கு அனுப்பினாலும் அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.

29 நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 40


1 எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் மாதத்தின் பத்தாம் நாளில், எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில், ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது. அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

2 கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன.

3 அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது. அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

4 அந்த மனிதர் என்னை நோக்கி, "மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை. ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய். நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாரக்குத் தெரிவி" என்றார்.

5 கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்-சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடையும் நீளம் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல்.

6 பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.

7 பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.

8 பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.

9 பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்; இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.

10 கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.

11 பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.

12 ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.

13 பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சிலிருந்து நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார். ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது. இடைப்பட்ட தூரம் இருபத்தைந்து முழம்.

14 அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.

15 வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம்.

16 அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும் குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன. புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன. சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன. புடைநிலைகளில் பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.

17 பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன.

18 வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும் ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதுவே கீழ்த்தள நடைமேடை.

19 பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார். அது கிழக்கேயும் வடக்கேயும் நூறு முழம் இருந்தது.

20 பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார்.

21 ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும், புடைநிலைகளும் புகுமுக மண்டபமும் முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதாவது ஐம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம்.

22 அதன் பலகணிகள், புகுமுக மண்டபம், பேரீச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின் அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன. அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது.

23 கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது.

24 பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்; அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.

25 அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.

26 அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது. அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.

27 உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது நூறு முழ நீளம் இருந்தது.

28 பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.

29 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.

30 சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.

31 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

32 பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.

33 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும் மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன. அவற்றின் நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.

34 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

35 பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.

36 அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஐம்பது முழம் நீளமும் இருபத்தைந்து முழம் அகலமும் இருந்தன.

37 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

38 ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில் வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது. அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர்.

39 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்;;;வோரு பக்கமும் இரு மேசைகள் இருந்தன. அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி, குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும்.

40 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில் இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன.

41 இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.

42 செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.

43 சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.

44 உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில் இசைக்குழு அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது. இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.

45 அவர் என்னிடம், "தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.

46 வடக்கு நோக்கி இருக்கும் அறை பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது. இவர்கள் சாதோக்கின் மக்கள். லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய அவரருகில் செல்லலாம்" என்றார்.

47 பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.

48 அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து, அதன் புடைநிலைகளை அளந்தார். அது ஒரு பக்கம் ஐந்து முழமும் மறுபக்கம் ஐந்து முழமும் இருந்தது. வாயிலின் அகலம் பதினான்கு முழம்; அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.

49 புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.

அதிகாரம் 41


1 பின்னர் அவர் என்னைக் கோவிலின் கூடத்திற்கு அழைத்துச் சென்று அதன் புடைநிலைகளை அளந்தார். அவை ஒருபுறம் ஆறு முழ அகலமும் மறுபுறம் ஆறு முழ அகலமும் கொண்ட கூடார அளவுடையதாய் இருந்தது.

2 வாயிலின் அகலம் பத்து முழம், வாயிலின் புடைநிலைகள் ஒவ்வொரு பக்கமும் ஐந்து முழம் இருந்தன. பின்பு அவர் கோவிலின் கூடத்தை அளந்தார். அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமும் உடையதாயிருந்தது.

3 பின்னர் அவர் உட்கூடத்திற்குப் போய், அதன் வாயிலின் புடைநிலைகளை அளந்தார். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலம் உடையதாயிருந்தன. வாயில் ஆறு முழ அகலம் உடையதாயிருந்தது. அதன் வெளிப் புடைநிலை ஒவ்வொரு பக்கமும் ஏழு முழ அகலம் கொண்டிருந்தது.

4 அவர் உட்கூடத்தின் நீளத்தை அளந்தார். அது இருபது முழம், அதன் அகலம் வெளிக்கூட விளம்பு வரை இருபது முழமாக இருந்தது. அவர் என்னிடம், "இதுவே திருத்தூயகம்" என்றார்.

5 பின்னர் அவர் கோவிற் சுவரை அளந்தார். அதன் அகலம் ஆறு முழம், கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வோர் அறையும் நான்கு முழ அகலம் கொண்டிருந்தது.

6 பக்கத்து அறைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று அடுக்குகளாய் இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் இருந்தன. இந்த அறைகள் கோவில் சுவர்மேல் ஊன்றியிராமல், இருபுறத்திலுமுள்ள சுற்றுக் கட்டுகளின் விளிம்;;பை ஆதாரமாகக் கொண்டிருந்தன.

7 கோவிலைச் சுற்றியிருந்த பக்க அறைகள், அடுக்குகள் உயர உயர, அகலம் மிகுதியானவையாய் இருந்தன. கோவிலைச் சுற்றிய அமைப்பு மேலே போகப் போக அகலமானதாய்க் கட்டப்பட்டிருந்தது. அதனால் மேலே இருந்த அறைகள் தமக்குக் கீழே இருந்த அறைகளைவிட அகலம் கூடியனவாயிருந்தன. கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாக மேல்தளத்திற்கு ஒரு படிக்கட்டு இருந்தது.

8 கோவிலைச் சுற்றிலும் அதன் தளமேடை உயர்ந்திருக்கக் கண்டேன். அதுவே பக்க அறைகளின் தளமேடையாகவும் இருந்தது. அது ஒரு கோலின் அளவாகிய ஆறு முழம் இருந்தது.

9 பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்து முழ அகலம் உடையதாய் இருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும்,

10 குருக்களின் அறைக்கும் இடையிலுள்ள திறந்தவெளி இருபது முழமளவாய் கோவிலைச் சுற்றி இருந்தது.

11 பக்க அறைகளுக்குத் திறந்த வெளியிலிருந்து வடக்குப் பக்கம் ஒன்றும் தெற்குப் பக்கம் ஒன்றுமாக இரு வாயில்கள் இருந்தன. திறந்த வெளியைத் தொட்ட தளமேடை எப்பக்கமும் ஐந்து முழம் அகலமுடையதாய் இருந்தது.

12 மேற்குப் பக்கத்தில் கோவில் முற்றத்தை நோக்கிய கட்டடம் எழுபது முழ அகலம் கொண்டிருந்தது. கட்டடத்தின் சுவர் எப்பக்கமும் ஐந்து முழ அகலமும், தொண்ணூறு முழ நீளமும் கொண்டிருந்தது.

13 பின்னர் அவர் கோவிலை அளந்தார். அது நூறு முழம் நீளமுடையதாய் இருந்தது. கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும் நூறு முழ நீளமுடையதாய் இருந்தன.

14 கோவிலின் முகப்பும் அதன் கிழக்கு முற்றமும் நூறு முழ அகலமுடையனவாய் இருந்தன.

15 பின்னர் அவர் கோவிலின் அருகிலிருந்த முற்றத்தை நோக்கிய கட்டடத்தை அதன் ஒவ்வொரு பக்கமுமிருந்த மேடை இருக்கையுடன் அளந்தார். அது வெளிக்கூடம், உட்கூடம், முற்றத்தை நோக்கிய புகுமுக மண்டபம் உட்பட நூறு முழமாய் இருந்தது.

16 அவை மூன்றையும் சுற்றிய மேடை இருக்கைகள், வாயிற்படிகள், குறுகலான பலகணிகள், வாயிற்படிகளை உள்ளடக்கியதும் தாண்டியதுமான அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. தளத்திலிருந்து பலகணிவரை சுவர் முழுவதும் பலகணிகளும் மரத்தினால் வேயப்பட்டிருந்தன.

17 வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும் வெளியேயும்

18 கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன.

19 அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவும், மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும் கோவில் முழுவதும் அமைந்திருந்தன.

20 தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள், பேரீச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.

21 கோவில் கூடத்திற்கு நீள்சதுர வாயிற்கதவு இருந்தது; திருத்தூயகத்தின் முன்னும் அதுபோன்றே இருந்தது.

22 அங்கே மூன்று முழ உயரமும் இரு முழ நீளமும் கொண்ட ஒரு பீடம் இருந்தது. அதன் முனைகளும் அடிப்பகுதியும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அந்த மனிதர் என்னிடம் "ஆண்டவரின் திருமுன்னிலை மேசை இதுவே" என்றார்.

23 கோவிற் கூடத்திற்கும், திருத்தூயகத்திற்கும் இரு வாயில்கள் இருந்தன.

24 வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கதவுகள் இருந்தன.

25 கோவிற் கூடத்தின் கதவுகளில், சுவர்களில் அமைக்கப் பெற்றிருந்தது போலவே கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகுமுக மண்டபத்தின் முன்னால் மரத்தினாலான விதானம் இருந்தது.

26 புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் குறுகலான பலகணிகளும், ஒவ்வொரு பக்கத்திலும் பேரீச்ச மர வடிவங்களும் இருந்தன. கோவிலின் பக்க அறைகளில் விதானங்கள் இருந்தன.

அதிகாரம் 42


1 பின்னர், அம்மனிதர் என்னை வடதிசை வழியாய் வெளி முற்றத்திற்கு அழைத்துச் சென்று கோவில் முற்றத்திற்கு எதிரிலும் வடதிசையில் உள்ள வெளிச் சுவருக்கு எதிரிலும் இருந்த அறைகளுக்கு இட்டுச் சென்றார்.

2 வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.

3 உள் முற்றத்திற்கு இருபது முழத்திற்கு இரு பக்கமும் இருந்த பகுதியிலும், வெளி முற்றத்தின் நடைமேடைக்கு எதிரில் இருந்த பகுதியிலும் எதிர் எதிரான மேடையிருக்கைகள் மூன்று அடுக்குகளாய் இருந்தன.

4 அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது. அதன் அகலம் பத்து முழம்; நீளம் நூறு முழம். அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.

5 மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன. ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும் நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.

6 முற்றங்களில் இருந்தது போல மூன்றாம் தளத்தில் தூண்கள் இல்லை. எனவே கீழ்த்தளம் மற்றும் நடுத்தள அறைகளைவிட அவை இடம் குறைந்தனவாய் இருந்தன.

7 அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது. அது அறைகளின் முன்னால் ஐம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.

8 வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஐம்பது முழ நீளமுடையவை; ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ நூறு முழ நீளம் உடையவை.

9 கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.

10 கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும், வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.

11 அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது. இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன. அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும் மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.

12 வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.

13 பின்னர் அம்மனிதர் என்னிடம் சொன்னார்; கோவில் முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு மற்றும் தெற்கு அறைகள் யாவும் தூய அறைகளாகும். அங்கே ஆண்டவரை அணுகிவரும் குருக்கள் உன்னத பலிப்பொருள்களை உண்ணுவர். அவர்கள் அங்கே உன்னத பலிப்பொருள்களான தானியப் படையல், பாவம் போக்கும் பலிப்பொருள்கள், குற்றநீக்கப் பலிப்பொருள்கள் ஆகியவற்றை வைப்பர். ஏனெனில், அது தூய இடமாகும்.

14 குருக்கள் தூய இடங்களில் நுழைந்தபின் அவர்கள் பணிபுரியப் பயன்படுத்திய திருஉடைகளை அங்கேயே கழற்றி வைக்காமல் அங்கிருந்து வெளியேறக் கூடாது. ஏனெனில், அவை தூயவை. மக்கள் பகுதிக்குப் போகுமுன் அவர்கள் வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

15 கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின், அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து, கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.

16 அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார். அது ஐந்நூறு கோல்கள் இருந்தது.

17 அவர் வடக்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

18 அவர் தெற்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

19 பின்னர் அவர் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.

20 இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார். ஒவ்வொரு புறமும் சுவர் ஐந்நூறு முழம் இருந்தது. அச்சுவர் தூயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.

அதிகாரம் 43


1 பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

2 இதோ, "இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி" கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.

3 நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

4 ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.

5 பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

6 அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.

7 அவர் உரைத்தது; "மானிடா! இது என் அரியணையின் இடம்; என்; கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன். இஸ்ரயேல் வீட்டார் இனி ஒருபோதும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்த மாட்டார். அவர்களோ, அவர்கள் அரசர்களோ விபசாரத்தினாலோ, அவர்களுடைய அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலோ, தொழுகை மேடுகளில் தீட்டுப்படுத்த மாட்டார்!

8 அவர்களின் வாயிற்படியை என் வாயிற்படிக்கு அருகிலும், அவர்கள் கதவுகளை என் கதவு நிலைகளுக்கு எதிரிலும் வைத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சுவரைமட்டும் வைத்து என் திருப்பெயரை அவர்களின் அருவருப்பான செயல்கள் மூலம் தீட்டுப்படுத்தினர். எனவே அவர்களை நான் என் சினத்தில் அழித்தேன்.

9 இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும், தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும். அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.

10 நீயோ! இஸ்ரயேல் வீட்டாருக்குக் கோவிலைப் பற்றி விவரி. அதன்மூலம் அவர்கள் தங்கள் பாவங்கள் குறித்து வெட்கமுறட்டும். கோவிலின் அளவு முறையை அவர்கள் ஆராயட்டும்.

11 அவர்கள் தாங்கள் செய்ததெல்லாம் குறித்து வெட்கமுற்றால் அவர்களுக்கு கோவிலின் அளவுமுறையைக் காட்டு. அதன் கட்டமைப்பையையும் வெளி வாயில்களையும் நுழைவாயில்களையும் அதன் முழு அமைப்பையும், எல்லா முறைமைகளையும் முழுத்திட்டத்தையும் சட்டங்களையும் தெரிவி. இவற்றை அவர்கள் கண்முன்னால் எழுதிவை. அப்போது அவர்கள் அத்திட்டத்தின்படி நடந்து அதன் எல்லா முறைமைகளையும் கடைப்பிடிப்பார்கள்.

12 கோவிலின் சட்டம் இதுவே. மலையின் உச்சியிலுள்ள எல்லாச் சுற்றுப் பகுதிகளும் உன்னத இடங்களாகும். இதுவே கோவிலின் சட்டமாகும்.

13 முழு அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு; ஒரு முழம் என்பது ஒருமுழமும் நான்கு விரற்கடையும் கொண்டது. பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் கொண்டது. சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே;

14 நிலத்தில் அடிப்பாகத்திலிருந்து கீழ் விளிம்புவரை இதன் உயரம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம். சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை உயரம் நான்கு முழம், அகலம் ஒரு முழம்.

15 பலிபீடச் சிகரம் நான்கு முழ உயரமானது. நான்கு கொம்புகள் சிகரத்திலிருந்து மேல் நோக்கி இருந்தன.

16 பலிபீடச் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.

17 மேல் விளிம்பு பதினான்கு முழ நிளமும் பதினான்கு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது. அதன் கனம் சுற்றிலும் அரை முழமும் அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது. பீடத்தின் படிகள் கிழக்கு நோக்கி இருந்தன.

18 பின்னர் அம்மனிதர் என்னிடம் கூறியது; மானிடா! தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பீடத்தைக் கட்டியபின் பீடத்தில் எரிபலியிடுகையிலும், குருதித் தெளிப்புப் பலியிடுகையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளாவன;

19 என்னை அணுகி வந்து என் முன்னிலையில் திருப்பணிபுரியம் சாதோக்கின் வழிவந்த லேவியராகிய குருக்களுக்கு ஓர் இளங்காளையைப்; பாவம் போக்கும் பலியாய்த் தர வேண்டும். இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.

20 நீங்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும் மேல்விளிம்பின் நான்கு முனைகளிலும் சுற்றுமுள்ள சதுரங்கள் முழுவதிலும் தடவ வேண்டும். இவ்வாறு பீடத்தையும் புனிதப்படுத்தி அதற்குக் கறைநீக்கம் செய்ய வேண்டும்.

21 பாவம் போக்கும் பலிக்கான இளங்காளையைக் கோவில் பகுதியில் தூயகத்துக்கு வெளியே குறிப்பிட்ட பகுதியில் எரிக்க வேண்டும்.

22 இரண்டாம் நாள் ஒரு மாசு மறுவற்ற ஆட்டுக்கிடாயை எடுத்து பாவம் போக்கும் பலியாய்ச் செலுத்த வேண்டும். இவ்வாறு இளங்காளையினால் புனிதப்படுத்துவது போல் பீடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.

23 அதைப் புனிதப்படுத்தி முடிந்தபின் நீங்கள் மந்தையிலிருந்து, மாசு மறுவற்ற ஒர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் பலியிட வேண்டும்.

24 அவற்றை ஆண்டவரின் முன்னிலையில் படைக்க வேண்டும். குருக்கள் அதன்மேல் உப்புத் தூவி அவற்றை ஆண்டவருக்கு எரிபலியாய் அளிக்க வேண்டும்.

25 ஏழு நாள்களுக்குத் தினமும் பாவம் போக்கும் பலியாய் நீங்கள் ஆட்டுக்கிடாயைக் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் மந்தையிலிருந்து மாசு மறுவற்ற ஓர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும்.

26 ஏழு நாள்களுக்கு அவைகள் பீடத்திற்காய்ப் பாவக்கழுவாய் செய்து அதைப் புனிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதை அர்ப்பணிப்பார்கள்.

27 இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்;;, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 44


1 பின்னர் அம்மனிதர் என்னைத் தூயகத்தின் வெளிவாயிலுக்குத் திரும்பவும் கூட்டிவந்தார். அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

2 ஆண்டவர் என்னிடம் கூறியது; இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும்.

3 தலைவன் மட்டுமே வாயிலுக்கு உட்புறம் ஆண்டவரின் முன்னிலையில் உண்பதற்காக அமரலாம். அவன் வாயிலின் புகுமுகமண்டபம் வழியாய் உள் நுழைந்து, அதே வழியில் வெளிவர வேண்டும்.

4 பின்னர் அம்மனிதர் என்னை வடக்கு வாயிலின் வழி கோவிலுக்கு முன்னால் அழைத்து வந்தார். அப்போது ஆண்டவரின் மாட்சி அவர்தம் கோவிலை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, முகங்குப்புற விழுந்தேன்.

5 ஆண்டவர் என்னிடம் சொன்னது; மானிடா! ஆண்டவரின் கோவிலைப் பற்றி நான் சொல்லும் எல்லா நியமங்களையும் சட்டங்களையும் கவனமாய்க் காதால் உற்றுக்கேட்டு இதயத்தில் பதித்துவை. அவ்வில்லத்தின் எல்லா வாயில்களிலும் நுழைவது பற்றியும் தூயகத்தின் வாயில்களினின்று வெளிச்செல்வது பற்றியும் கவனமாய்க் கேள்.

6 கலக வீட்டாராகிய இஸ்ரயேலுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் அருவருப்பான செயல்களை விட்டுவிடுங்கள்.

7 நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும், இரத்தமும் கொண்டுவரும்போதே உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அன்னியரை என் தூயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.

8 நீங்கள் என் தூய பொருள்களைப் பாதுகாக்காமல் உங்களுக்குப் பதிலாக அன்னியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.

9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உடலிலும் உள்ளத்திலும் விருத்;தசேதனம் செய்யாத எந்த அன்னியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அன்னியரும்கூட என் தூயகத்தில் நுழையக்கூடாது.

10 இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது, அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத் தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.

11 அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று என் தூயகத்தில் பணிபுரியலாம்; எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்; மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.

12 அவர்கள் அவர்களின் தெய்வச் சிலைகளுக்கு முன்னால் பணிபுரிந்து இஸ்ரயேல் வீட்டாரைப் பாவத்தில் விழ வைத்ததால், நான் என் கையை அவர்களுக்கு எதிராய் ஓங்கியுள்ளேன். அவர்கள் தங்கள் குற்றப்பழியைத் தாங்களே சுமப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

13 அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ, என் தூய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது. அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.

14 ஆயினும் நான் அவர்களுக்கு கோவிலைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அதில் ஆற்றவேண்டிய அனைத்துப் பணிகளைச் செய்யும் பொறுப்பையும் கொடுப்பேன்.

15 ஆனால், லேவியர்களில் சாதோக்கின் வழியினரான குருக்கள், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிப்போனபோது என் தூயகத்தைக் கண்காணித்து வந்தனர். எனவே அவர்கள் என் அருகில் வந்து திருப்பணிபுரியவேண்டும். அவர்கள் கொழுப்பு, மற்றும் இரத்தப் பலிகளை எனக்குச் செலுத்த என் முன்னிலையில் நிற்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

16 அவர்கள் மட்டுமே என் தூயகத்தினுள் நுழையலாம். அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.

17 அவர்கள் உள்முற்றத்தின் வாயில் வழி நுழைகையில் நார்ப்பட்டு ஆடை அணிய வேண்டும். அவர்கள் உள் முற்றத்தின் வாயிலிலோ கோவிலிலோ திருப்பணிபுரிகையில் கம்பளி ஆடைகளை அணியலாகாது.

18 அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும், இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும். வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது.

19 அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில் திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி, அவற்றைத் தூயக அறைகளில் வைத்து விட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆடைகள் வழியாகத் தூய்மை மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும்.

20 அவர்கள் தலையை மழிக்கவோ நீள்முடி வளர்க்கவோ வேண்டாம். தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளட்டும்.

21 உள்முற்றத்தில் நுழைகையில் எக்குருவும் திராட்சை மது அருந்தலாகாது.

22 எந்தக் குருவும் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது. ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம்.

23 தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும், தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் அவர்கள் என் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

24 வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.

25 இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம்.

26 அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.

27 அவர் தூயகத்தில் பணியாற்ற அதன் உள்முற்றத்தில் நுழையும் நாளில் பாவம் போக்கும் பலியைத் தமக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

28 குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து; அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம். நானே அவர்களின் உடைமை.

29 அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி, குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர். இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.

30 உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும் உங்கள் சிறப்புக் காணிக்;;கைகளில் உன்னதமானவை யாவும் குருக்களுக்கே சொந்தம். நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக் குருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும்.

31 குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ, தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது.

அதிகாரம் 45


1 நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழம் நீளமும் பத்தாயிர முழம் அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும்.

2 அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும். ஐம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.

3 தூய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்விடத்தில்தான் தூயகமும் திருத்தூயகமும் அமையும்.

4 அவ்விடமே தூயகத்தில் நின்று ஆண்டவருக்கு முன் பணிபுரிய வரும் குருக்களுக்குரிய தூய நிலப்பகுதியாய் இருக்கும். அது அவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாகவும் கோவிலுக்கான தூய பகுதியாகவும் அமையும்.

5 இருபத்தைந்தாயிர முழ நீளமும், பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதி கோவிலில் பணிபுரியும் லேவியர்களுக்கு உரியதாகும். அவர்களுக்கு இருபது அறைகள் உடைமையாய் இருக்கும்.

6 தூய பகுதியை ஒட்டி ஐயாயிர முழ அகலமும் இருபத்தைந்தாயிர முழ நீளமும் கொண்ட ஒரு பகுதியை நகருக்கென ஒதுக்க வேண்டும். அது இஸ்ரயேல் வீட்டார் அனைவர்க்கும் உரியதாய் இருக்கும்.

7 தூய பகுதிக்கும், நகருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய நிலம் இருக்கும். மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு எல்லை வரைக்கும் கிழக்குப் பகுதியிலிருந்து கிழக்கு எல்லைவரைக்கும் நீண்டு மேற்கிலிருந்து கிழக்காக நீண்டிருக்கும் ஒவ்வொரு குலப்பகுதியின் நிலத்திற்கும் இணையாக இது இருக்க வேண்டும்.

8 இந்த நிலமே இஸ்ரயேலின் தலைவனது உடைமையாயிருக்கும். என் தலைவர்கள் இனிமேல் என் மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேல் வீட்டினர் தங்கள் குலத்திற்கேற்றவாறு நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள அனுமதியளிப்பர்.

9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலின் தலைவர்களே! நீங்கள் வன்முறையையும் அடக்கு முறையையும் விட்டொழியுங்கள். நீதியையையும் நியாயத்தையும் கடைப்பிடியுங்கள். என் மக்கள் நில உரிமை இழக்கச் செய்வதை நிறுத்துங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

10 உங்களிடம் சரியான எடைக்கருவிகள் இருக்க வேண்டும். சரியான எடையுடைய மரக்காலும் சரியான அளவுடைய குடமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

11 மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். குடம் என்பது கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.

12 செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும், பதினைந்து செக்;கேல்களும் இருக்க வேண்டும்.

13 நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே; ஒவ்வோரு கலம் அளவு கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும், ஒவ்வோரு கலம் அளவு வாற் கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும கொடுக்க வேண்டும்.

14 படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும். ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் பத்திலொரு பகுதியாகும். கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம். ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.

15 இஸ்ரயேலின் வளமான மேய்ச்சல் நிலத்தில் இருநூறு ஆடுகள் உள்ள ஒவ்வொரு மந்தையிலிருந்தும் ஓர் ஆட்டுக்குட்டி எடுக்கப்பட வேண்டும். பாவக் கழுவாய்ப் பலிகளான தானியப் படையலுக்கும், எரிபலிகளுக்கும், நல்லுறவுப் பலிகளுக்கும் அது பயன் படுத்தப்படும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

16 இஸ்ரயேலின் தலைவனுக்குக் கொடுக்கும் இச்சிறப்புக் காணிக்கையை நாட்டின் மக்கள் யாவரும் கொடுக்க வேண்டும்.

17 இஸ்ரயேலின் திருநாள்களிலும் அமாவாசை நாள்கள், ஓய்வு நாள்கள் மற்றும் இஸ்ரயேலின் எல்லாச் சிறப்புத் திருநாள்களிலும், எரிபலிகளுக்கும் தானியப் படையலுக்கும் நீர்மப் படையல்களுக்கும் வேண்டியவற்றை அளிக்க வேண்டியது தலைவனின் பொறுப்பாகும். அவன் இஸ்ரயேல் வீட்டார் சார்பில் பாவக் கழுவாய் செய்யப் பாவம் போக்கும் பலிகள், தானியப் படையல்கள், எரிபலிகள், நல்லுறவுப் பலிகள் ஆகியவற்றிற்குத் தேவையானவற்றைத் தருவான்.

18 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; முதல் மாதத்தின் முதல் நாளில் நீங்கள் மாசுமறுவற்ற ஓர் இளங்காளையை மந்தையிலிருந்து எடுத்துத் தூயகத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.

19 குரு பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைக் கோவிலின் கதவு நிலைகளிலும், பீடத்து விளிம்பின் நான்கு முனைகளிலும், உள் முற்றத்தின் வாயில் நிலைகளிலும் பூச வேண்டும்.

20 அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில் இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.

21 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் உங்களுக்குப் பாஸ்காத் திருநாளாக இருக்கும். அது ஏழு நாள் தொடரும். அந்நாள்களில் நீங்கள் புளியாத அப்பங்களையே உண்ண வேண்டும்.

22 அந்த நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவம் போக்கும் பலிக்கென ஒரு காளையைக் கொடுக்க வேண்டும்.

23 திருவிழாவின் அந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் ஆண்டவருக்கு எரிபலிக்கென மாசு மறுவற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும், பாவம் போக்கும் பலிக்கென ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொடுக்க வேண்டும்.

24 ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும் ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும் ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும்.

25 ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் தொடங்கும் திருவிழாவில் ஏழு நாள்களிலும் இவ்வாறே பாவம் போக்கும் பலிப்பொருள்கள், எரிபலிப்பொருள்கள், தானியப் படையல், எண்ணெய்ப் படையல் ஆகியவற்றை அவன் அளிக்க வேண்டும்.

அதிகாரம் 46


1 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.

2 தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.

3 ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும் நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன் நுழை வாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

4 ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.

5 வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல் ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும். ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல் அவன் விரும்பும் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.

6 அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை, ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும். அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.

7 காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும் வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும் ஆட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும்;. ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன் ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.

8 தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.

9 குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.

10 தலைவன் மக்களுடன் சேர்ந்து, அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து, அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.

11 விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.

12 தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்;;லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.

13 ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும். காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.

14 ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.

15 இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.

16 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

17 ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது "விடுதலை ஆண்டு" வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.

18 தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன்; உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.

19 பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்; மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.

20 அவர் என்னிடம் சொன்னது; குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.

21 அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார். நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.

22 வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமாய் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.

23 நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.

24 அவர் என்னிடம், "கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச் சமைக்கும் அடுப்புகள் இவையே" என்றார்.

அதிகாரம் 47


1 அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது.

2 அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

3 அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.

4 அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீர்pல் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.

5 அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப்போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.

6 அவர் என்னிடம் "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

7 நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.

8 அவர் என்னிடம் உரைத்தது; "இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.

9 இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

10 மீனவர் கடலோரமெங்கும் நிற்பர். ஏன்கேதியிலிருந்து எனக்லயிம்வரை வலைகளை விரிக்க இடமிருக்கும். மீன்களோ பெருங்கடலின் மீன்கள் போலப் பலவகைப்பட்டவையாய் இருக்கும்.

11 ஆயினும் உவர் மற்றும் சதுப்பு நிலங்கள் வளமை பெறா; அவை உப்பளங்களுக்காய் விடப்படும்.

12 பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்;;கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.

13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கும் யோசேப்பின் இரு பாகங்களுக்கும் ஏற்ப இந்த நாட்டைப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே;

14 நீங்கள் அதனை ஒவ்வொரு சகோதரனுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும். ஏனெனில், நான் இதனை உங்கள் மூதாதையருக்குத் தருவதாய்க் கையுயர்த்தி வாக்களித்துள்ளேன். இந்த நாடு உங்கள் உரிமைச் சொத்தாகும்.

15 நாட்டின் எல்லை இதுவே; வடக்குப் பக்கம் இது பெருங் கடலிலிருந்து ஏத்லோன் சாலை வழியாய்ச் செதாது வரை;

16 பெரோத்தா, தமஸ்கு எல்லை முதல் ஆமாத்து எல்லையிலுள்ள சிப்ரயிம் வரை; அவ்ரான் எல்லையில் இருக்கும் ஆட்சேர் அத்திக்கோன் வரை;

17 இவ்வெல்லை கடலிலிருந்து அட்சர் ஏனோன் வரை நீண்டு, தமஸ்குவின் வடக்கு எல்லை வழியாய் வடக்கில் ஆமாத்து எல்லை வரை போகும். இது வடக்கு எல்லையாகும்.

18 கிழக்குப் பக்க எல்லை அவ்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையே, யோர்தான் வழியாய், கிலயாதுக்கும் இஸ்ரயேல் நாட்டிற்கும் இடையில் போய், கிழக்குக் கடல் வரை போகும். இது கிழக்கு எல்லையாகும்.

19 தெற்குப் பக்கத்தில் இது தாமாரிலிருந்து மெரிபா காதேசு நீர்நிலை வரை போய் எகிப்தின் எல்லை ஓரமாய்ப் பெருங்கடல் வரை போகும். இது தெற்கு எல்லையாகும்.

20 மேற்குப் பகுதியில் பெருங்கடலிலிருந்து ஆமாத்து நுழைவின் எதிர்ப்பக்கம் வரை எல்லையாக இருக்கும். இது மேற்கு எல்லையாகும்.

21 நீங்கள் இந்த நாட்டை இஸ்ரயேலின் குலங்களுக்கு ஏற்பப் பங்கிட வேண்டும்.

22 நீங்கள் இதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகவும், உங்கள் நடுவில் வந்து குடியேறி உங்கள் நடுவில் பிள்ளைகள் பெற்றெடுத்த அன்னியரின் உரிமைச் சொத்தாகவும் பங்கிட வேண்டும். அவர்களும் உங்கள் நாட்டில் பிறந்த இஸ்ரயேலராகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உங்களோடு சேர்ந்த இஸ்ரயேலின் குலங்கள் நடுவே அவர்களுக்கும் உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும்.

23 அன்னியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும், அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 48


1 குலங்களின் பெயர்கள் இவையே; வடக்கு எல்லையில், ஏக்லோன், ஆமாத்து நுழைவு அட்சர், ஏனோன் சாலை வழியாய் தமஸ்கு எல்லைவழி, வடக்கில் ஆமாத்து பக்கம் வரை கிழக்கிலிருந்து மேற்குவரை, தாணுக்கு உரியது.

2 தாணின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ஆசேருக்கு உரியது.

3 ஆசேரின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நப்தலிக்கு உரியது.

4 நப்தலியின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை மனாசேக்கு உரியது.

5 மனாசேயின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை எப்ராயிமுக்கு உரியது.

6 எப்ராயிமின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ரூயஅp;பனுக்கு உரியது.

7 ரூயஅp;பனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை யூதாவுக்கு உரியது.

8 யூதாவின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி; அது இருபத்தையாயிர முழ அகலமும் ஒரு குலத்துக்குரிய கிழக்கு முதல் மேற்குப் பகுதிக்கான நீளமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் தூயகம் இருக்கும்.

9 நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்கும்.

10 அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும். அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும் கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும், தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் ஆண்டவரின் தூயகம் இருக்கும்.

11 அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற லேவியரைப் போல் அல்லாமல் எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.

12 லேவியரின் எல்லையருகே உள்ள மிக உன்னத இடத்தின் ஒரு பகுதியாகிய அது அவர்களுக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.

13 குருக்களுக்கான பகுதியின் எல்லையருகே இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட பகுதி லேவியருக்கு உரியதாய் இருக்கும்; ஆம், மொத்த நீளம் இருபத்தையாயிர முழமும் அகலம் பத்தாயிர முழமும் இருப்பதாக!

14 அவர்கள் அதிலிருந்து கொஞ்சமும் விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. சிறந்த நிலமாகிய அதை யாருக்கும் கொடுத்தலாகாது. ஏனெனில் அது ஆண்டவரின் தூய நிலமாகும்.

15 ஐயாயிர முழ அகலமும் இருபத்தையாயிர முழ நீளமும் கொண்ட எஞ்சிய பகுதி பொதுவானது. இது நகருக்காகவும் வீடுகளுக்காகவும் திறந்த வெளிக்காகவும் ஒதுக்கப்படும். நகர் அதன் நடுவில் இருக்கும்.

16 நகர்க்குரிய அளவுகள் பின்வருமாறு; வடக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; தெற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; கிழக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; மேற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்.

17 நகரின் திறந்த நிலம் வடக்கில் இருநூற்று ஐம்பது கோலும் தெற்கில் இருநூற்று ஐம்பது கோலும் கிழக்கில் இருநூற்று ஐம்பது கோலும் மேற்கில் இருநூற்று ஐம்பது கோலும் உடையதாய் இருக்கும்.

18 தூயகத்தை ஒட்டி எஞ்சியுள்ள நீண்ட பகுதி கிழக்கில் பத்தாயிரம் கோலும், மேற்கில் பத்தாயிரம் கோலுமாய் இருக்கும். அதில் கிடைக்கும் விளைச்சல் நகரின் பணியாளர்களுக்கு உணவளிக்கும்.

19 நகரில் பணிபுரிவோர் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

20 முழு நிலப்பகுதியும் இருபத்தையாயிரம் கோல் நீள அகலமுடைய சதுர நிலமாய் இருக்கும். தூயகத்திற்கும் நகருக்குமான பகுதிகளை ஒதுக்கி வைப்பீர்களாக!

21 தூயகத்திற்கும் நகருக்கமான பகுதிகளின் இருபக்கங்களிலும் எஞ்சியுள்ளவை தலைவனுக்கு உரியன. அது தூயகத்திலிருந்து கிழக்கே இருபத்தையாயிரம் கோலும் மேற்கே இருபத்தையாயிரம் கோலுமாய் இருக்கும். குலங்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஒட்டிய இவ்விரு பகுதிகளும் தலைவனுக்கு உரியன. கோவிலின் தூயகத்தை உள்ளடக்கிய புனிதப் பகுதி நடுவில் இருக்கும்.

22 லேவியரின் பகுதிக்கும், நகரின் பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய பகுதி இருக்கும். அப்பகுதி யூதாவின் எல்லைக்கும் பென்யமினின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.

23 மற்றக் குலங்களைப் பொறுத்த வரை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை பென்யமினுக்கு உரியது.

24 பென்யமினின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை சிமியோனுக்கு உரியது.

25 சிமியோனின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை இசக்காருக்கு உரியது.

26 இசக்காரின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதி வரை செபுலோனுக்கு உரியது.

27 செபுனோனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை காத்துக்கு உரியது.

28 காத்தின் எல்லையருகே தெற்குப் பகுதி தாமார் எல்லையிலிருந்து மெரிபா, காதேசு நீர்நிலை வரையும் எகிப்திய எல்லையோரம் பெருங்கடல் வரையும் போகும்.

29 நீங்கள் இஸ்ரயேல் குலங்களுக்கு உரிமைச் சொத்தாய்ப் பங்கிட வேண்டிய நாடு இதுவே; அவர்களின் பங்குகள் இவையே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

30 நகரைவிட்டு வெளிச்செல்லும் வாயில்கள் இவையே; வடக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் இருக்கும்.

31 நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்; வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று "ரூயஅp;பனின் வாயில்", ஒன்று "யூதாவின் வாயில்", ஒன்று "லேவியின் வாயில்".

32 கிழக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று "யோசேப்பின் வாயில்", ஒன்று 'பென்யமின் வாயில்', ஒன்று "தாணின் வாயில்".

33 தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று "சிமியோனின் வாயில", ஒன்று "இசக்காரின் வாயில்", ஒன்று "செபுலோனின் வாயில்".

34 மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று "காத்தின் வாயில்", ஒன்று "ஆசேரின் வாயில்", ஒன்று "நப்தலியின் வாயில்".

35 அந்நகரின் சுற்றளவு பதினெட்டாயிரம் கோல். அந்நாளிலிருந்து நகர் "ஆண்டவர் இங்கு இருக்கிறார்" என்னும் பெயர் பெறும்.



எசேக்கியேல் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு




Labels:
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *