திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

நீதிமொழிகள் பழமொழி ஆகமம் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு


நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)

முன்னுரை:

நீதிமொழிகள், என்னும் இந்நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும்.இவை சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலனவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இந்நூல், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது. இங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இஸ்ரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்றியும், மனத்தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகள் பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது,

நீதிமொழிகள் நூலின் பிரிவுகள்

1) ஞானம் பற்றிய புகழுரை 1:1 - 9:18

2) சாலமோனின் நீதிமொழிகள் 10:1 - 29:27

3) ஆகூரின் மொழிகள் 30:1 - 33

4) பல்வேறு சொற்கோவைகள் 31:1 - 31

----------------------------------------------------------

 

நீதிமொழிகள் அதிகாரம் 1


1 தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.

2 இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்;

3 நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்;

4 அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்; இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.

5 ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்; விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;

6 நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.

7 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.

8 பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே;

9 அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.

10 பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே.

11 அவர்கள் என்னைப் பார்த்து, "எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்;

12 பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.

13 எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.

14 நீ எங்களோடு சேர்ந்துகொள்; எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்" என்றெல்லாம் சொல்வார்கள்.

15 பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.

16 அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன.

17 பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.

18 அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.

19 தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.

20 ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது; பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது;

21 பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது; நகர வாயிலிருந்து முழங்குகின்றது;

22 "பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?

23 என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்; என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

24 நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை நீட்;டினேன்; எவரும் கவனிக்கவில்லை.

25 என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.

26 ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்; உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.

27 பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.

28 அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்; நான் பதிலளிக்க மாட்டேன்; ஆவலோடு என்னை நாடுவீர்கள்; ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.

29 ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்; ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை

30 நீங்கள் என் அறிiவுரையை ஏற்கவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.

31 நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்; சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.

32 பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்; சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.

33 எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார். "

நீதிமொழிகள் அதிகாரம் 2


1 பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,

2 என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.

3 ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.

4 செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.

5 அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.

6 ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.

7 நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.

8 நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.

9 எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.

10 ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.

11 அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.

12 நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.

13 நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.

14 அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.

15 அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.

16 ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.

17 அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்; தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.

18 அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது; அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.

19 அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும்; பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை

20 எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!

21 நேர்மையாளரே உலகில் வாழ்வர்; மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.

22 பொல்லாரோ உலகினின்று ப+ண்டோடு அழிவர்; நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.

நீதிமொழிகள் அதிகாரம் 3


1 பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே; என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்;

2 அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.

3 அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் ப+ண்டுகொள்.

4 அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்; அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.

5 முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.

6 நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.

7 உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.

8 அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும்.

9 உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.

10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.

11 பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.

12 தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.

13 ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;

14 வெள்ளியை விட ஞானமே மிகுநலன் தருவது; பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.

15 ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.

16 அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது. அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.

17 அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்; அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.

18 தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்; அதனபை; பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.

19 ஆண்டவர் ஞானத்தால் ப+வுலகிற்கு அடித்தளமிட்டார்; விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.

20 அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது; வானங்கள் மழையைப் பொழிகின்றன.

21 பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்; இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.

22 இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.

23 நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது.

24 நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.

25 பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.

26 ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்; உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.

27 உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.

28 அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, 'போய் வா, நாளைக்குத் தருகிறேன்' என்று சொல்லாதே.

29 அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?

30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.

31 வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.

32 ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.

33 பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.

34 செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;

35 ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

நீதிமொழிகள் அதிகாரம் 4


1 பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

2 நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்; நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்;

3 நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.

4 அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே; "நான் சொல்வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய்.

5 ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே;

6 ஞானத்தை புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும்.

7 ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.

8 அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.

9 அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும். "

10 பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.

11 ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.

12 நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது; நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.

13 பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்; அதை விட்டுவிடாதே; அதைக் கவனமாய்க் காத்துக்கொள்; அதுவே உனக்கு உயிர்.

14 பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.

15 அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல்.

16 தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது

17 தீவினையே அவர்கள் உண்ணும் உணவு; கொடுஞ்; செயலே அவர்கள் பருகும் பானம்.

18 நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.

19 பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது; தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது

20 பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.

21 என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.

22 அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும்.

23 விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.

24 நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.

25 உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.

26 நேர்மையான பாதையில் நட; அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.

27 வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே; தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.

நீதிமொழிகள் அதிகாரம் 5


1 பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; என் அறிவுரைக்குச் செவிகொடு.

2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.

3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.

4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்

5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.

6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.

7 ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.

8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.

9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.

10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.

11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.

12 "ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!

13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!

14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே" என்று அலறுவாய்.

15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு

16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?

17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.

18 உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.

19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வ+ட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!

20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?

21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.

22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.

23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.

நீதிமொழிகள் அதிகாரம் 6


1 பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,

2 அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,

3 பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.

4 அதைச் செய்யும்; வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே.

5 நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.

6 சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;

7 அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.

8 எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.

9 சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?

10 இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.

11 வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.

12 போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.

13 அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.

14 அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.

15 ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; தீடீரென்று அழிந்துபோவான்; மீPளமாட்டான்.

16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.

17 அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,

18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,

19 பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

20 பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.

21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.

22 நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.

23 கட்டளை என்பது ஒரு விளக்கு; அறவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.

24 அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.

25 உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.

26 விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.

27 ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?

28 ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?

29 பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

30 திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.

31 ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.

32 கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.

33 அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.

34 ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;

35 சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் "அவன் சினம் தணியாது.

நீதிமொழிகள் அதிகாரம் 7


1 என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று;

2 என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்; என் அறிவுரையை உன் கண்மனிப்போல் காத்துக்கொள்வாய்.

3 அவற்றை உன் விரல்களில் அணியாகப் ப+ண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை.

4 ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள்.

5 அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்; தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.

6 ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,

7 பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்; மதிகோடான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.

8 அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.

9 அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை; அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,

10 அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.

11 அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது.

12 அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்; முச்சந்தியிலும் நிற்பாள்; மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.

13 அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,

14 "நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;

15 அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.

16 என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.

17 வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.

18 நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்; இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.

19 என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.

20 அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்" என்று சொன்னாள்.

21 இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்; நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.

22 உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,

23 கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில் தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.

24 ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள்.

25 உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்; மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.

26 அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்; வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.

27 அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.

நீதிமொழிகள் அதிகாரம் 8


1 ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?

2 வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.

3 நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது;

4 மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்;;; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.

5 முன்மதியற்றோரே! விவேகமாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.

6 நான் சொல்வதைக் கவனியுங்கள்; மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்; நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.

7 ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்; பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.

8 என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.

9 உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு; அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.

10 வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.

11 பவளத்திலும் ஞானமே சிறந்தது; நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

12 நானே ஞானம்; நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்; அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.

13 ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.

14 திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே. வலிமையும் எனதே.

15 அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்; ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.

16 அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே; உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,

17 எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.

18 என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.

19 என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது; என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியை விட மேலானது.

20 நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்; என் பாதை முறையான பாதை.

21 என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்; அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.

22 ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.

23 தொடக்கத்தில், ப+வுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.

24 கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.

25 மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.

26 அவர் ப+வுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.

27 வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன்.

28 உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.

29 அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, ப+வுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,

30 நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.

31 அவரது ப+வுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

32 எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!

33 நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்; அதைப் புறக்கணியாதீர்கள்.

34 என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!

35 என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.

36 என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்; என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!

நீதிமொழிகள் அதிகாரம் 9


1 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது.

2 அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது;

3 தன் தோழிகளை அனுப்பிவைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று,

4 "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்" என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது;

5 "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்;

6 பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்" என்றது.

7 இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே; பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே.

8 இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்.

9 ஞானிகளுக்கு அறிவுரை கூறு; அவர்களது ஞானம் வளரும்; நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு; அவர்களது அறிவு பெருகும்.

10 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.

11 என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்; உன் ஆயுட்காலம் நீடிக்கும்.

12 நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்; நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.

13 மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.

14 அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,

15 தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,

16 "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்" என்பாள்; மதிகேடரைப் பார்த்து,

17 "திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது; வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது" என்பாள்.

18 அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

நீதிமொழிகள் அதிகாரம் 10


1 சாலமோனின் நீதிமொழிகள்; ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.

2 தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

3 நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.

4 வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்; விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5 கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்; அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.

6 நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

7 நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

8 ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

9 நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.

10 தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

11 நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்;.

12 பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.

13 விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்; மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.

14 ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.

15 செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்; ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.

16 நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.

17 நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்; கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.

18 உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யர்; வசைமொழி கூறுவோர் மடையர்.

19 மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.

20 நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.

21 நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.

22 ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

23 தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.

24 பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.

25 சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.

26 பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.

27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.

28 நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.

29 ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.

30 கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.

31 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்; வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.

32 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்; பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.

நீதிமொழிகள் அதிகாரம் 11


1 கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

2 இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

3 நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

4 கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

5 குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

6 நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.

7 பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.

8 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

9 இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.

10 நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

11 நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.

12 அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;

13 வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.

14 திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.

15 அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.

16 கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

17 இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.

18 பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.

19 நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

20 வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.

21 தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

22 மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.

23 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.

24 அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.

25 ஈகை குணமுள்ளோர் வளம் பட வாழ்வர்;  குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

26 தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

27 நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

28 தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.

29 குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.

30 நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.

31 நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!

நீதிமொழிகள் அதிகாரம் 12


1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.

2 நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.

3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.

4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.

5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.

6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.

7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்;றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.

8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.

9 வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.

10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.

11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.

12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.

13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.

15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.

16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.

17 உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

18 சுpந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.

19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.

20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.

21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.

22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.

23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.

24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.

25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.

26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.

27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.

28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.

நீதிமொழிகள் அதிகாரம் 13


1 ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இருமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.

2 நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

3 நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.

4 சோம்பேறிகள் உண்ண விரும்பகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.

5 நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.

6 நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்; பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.

7 ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.

8 அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.

9 சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.

10 மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.

11 விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்; சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.

12 நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.

13 அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.

14 ஞானமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.

15 நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

16 கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பப்படுத்துவார்.

17 தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்; நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.

18 நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.

19 நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.

20 ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்; மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.

21 பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.

22 நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.

23 தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

24 பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

25 கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்; பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.

நீதிமொழிகள் அதிகாரம் 14


1 ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.

2 நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.

3 மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.

4 உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

5 வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

6 ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.

7 மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

8 விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.

9 பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.

10 ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.

11 பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.

12 ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

13 நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.

14 உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.

15 பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

16 ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.

17 எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.

18 பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.

19 தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.

20 ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

21 அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

22 தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

23 கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

24 ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமைதான் ப+மாலை.

25 உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.

26 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.

27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.

28 மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும்; உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.

29 பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

30 மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புறுக்கியாகும்.

31 ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

32 பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.

33 விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.

34 நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

35 கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.

நீதிமொழிகள் அதிகாரம் 15


1 கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

2 ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

3 ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும்.

4 சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.

5 தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்; கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.

6 நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.

7 ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது; மதிகேடரின் உள்ளம் அத்தகையதல்ல.

8 பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்; நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.

9 பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு; நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.

10 நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்; கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.

11 பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?

12 ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;

13 அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத்துயரால் உள்ளம் உடையும்.

14 விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.

15 ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.

16 பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

17 பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.

18 எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.

19 சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

20 ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

21 மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.

22 எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

23 தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

24 விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.

25 இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்; கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.

26 தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.

27 வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

28 சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

29 ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலையில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.

30 இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

31 நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.

32 கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.

33 ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

நீதிமொழிகள் அதிகாரம் 16


1 எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.

2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3 உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

4 ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.

5 இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.

6 அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.

7 ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.

8 தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

9 மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.

10 அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.

11 நிறைகோலும் துலாக்கோலும் ஆண்டவருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.

12 தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.

13 நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றசை; சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.

14 அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.

15 அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.

16 பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

17 நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.

18 அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.

19 மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

20 போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

21 ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

23 ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சே விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

24 இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

25 ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

26 உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

27 பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.

28 கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.

29 வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

30 கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக்கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

31 நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

32 வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

33 மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.

நீதிமொழிகள் அதிகாரம் 17


1 சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்.

2 முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர்களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.

3 வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.

4 தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.

5 ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.

6 முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.

7 பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.

8 கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்.

9 குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர்; குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்ப+ட்டுகிறவன் நட்பை முறிப்பான்.

10 சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.

11 தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்; அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப்பப்படுவார்.

12 மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேடனுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.

13 நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.

14 வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்; வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.

15 குற்றம் செய்தவரை நேர்மையானவரென்றும்; நேர்மையானவரைக் குற்றம் செய்தவரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.

16 மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில்லையே!

17 நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.

18 அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறிவில்லாதவனே.

19 வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.

20 கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்; வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.

21 மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள்ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.

22 மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.

23 கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.

24 உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.

25 மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை; பெற்ற தாய்க்குத் துயரம்.

26 நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.

27 தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்பவரே மெய்யறிவாளர்.

28 பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.

நீதிமொழிகள் அதிகாரம் 18


1 பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

2 மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

3 கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.

4 மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன்றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.

5 பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல; நேர்மையானவருக்கு நீதி கிடைக்காமல் தடுப்பது நேரியதல்ல.

6 மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.

7 மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.

8 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

9 தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.

10 ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.

11 செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.

12 முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

13 வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர்களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.

14 மன வலிமை நோயைத் தாங்கிக்கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?

15 உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்; ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.

16 ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.

17 வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.

18 திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.

19 உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்; அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.

20 ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.

21 வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

22 மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.

23 ஏழை கெஞ்சிக் கேட்பார்; செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.

24 கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.

நீதிமொழிகள் அதிகாரம் 19


1 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

2 எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.

3 மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.

4 பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.

5 பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.

6 வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.

7 வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

8 ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.

9 பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.

10 அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல; மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.

11 விவேகமுடையோர் எளிதில் சினமடையார்; குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.

12 அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.

13 மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.

14 வீடும்; சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.

15 சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.

16 திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்; ஆண்டவருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.

17 ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.

18 மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.

19 கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.

20 அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.

21 மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.

22 நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.

23 ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.

24 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.

25 ஏளனம் செய்வோரை அடி; அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.

26 தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.

27 பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் பறக்கணிக்கிறவன் ஆவாய்.

28 தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.

29 இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக்கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத்திருக்கிறது.

நீதிமொழிகள் அதிகாரம் 20


1 திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.

2 அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.

3 விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.

4 சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.

5 மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்?

6 பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?

7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.

8 மன்னன்; நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான்.

9 "என் இதயத்தைக் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன் "என்று யாரால் சொல்லக்கூடும்?

10 பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.

11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.

12 கேட்கும் காது, காணும் கண்; இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.

13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.

14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.

15 பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.

16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.

17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.

18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.

19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.

20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.

21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.

22 "தீமைக்குத் தீமை செய்வேன்" என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.

23 பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.

24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?

25 எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும்.

26 ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.

27 ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.

28 அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.

29 இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.

30 நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.

நீதிமொழிகள் அதிகாரம் 21


1 மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.

2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3 பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும்; நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.

4 மேட்டிமையான பார்வை, இறுமாப்புக்கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும்; பாவங்கள்.

5 திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.

6 ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.

7 பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.

8 குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.

9 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.

10 பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.

11 ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.

12 நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.

13 ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.

14 மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.

15 நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.

16 விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.

17 ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள்களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.

18 நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடுவார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.

19 நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.

20 ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.

21 நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.

22 வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ்வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துக் தள்ளுவார்.

23 தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.

24 ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.

25 சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.

26 அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.

27 பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத்தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?

28 பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக்கும் ஏற்புடையதாகும்.

29 பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப்படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.

30 ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையுமில்லை.

31 போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.

நீதிமொழிகள் அதிகாரம் 22


1 திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.

2 செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.

3 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

4 தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.

5 நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.

6 நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.

7 செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.

8 அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.

9 கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.

10 ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.

11 ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.

12 அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

13 "வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்" என்கிறான் சோம்பேறி.

14 பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.

15 பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.

16 செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.

17 ஞானிகள் போதித்ததை நான் உனக்குக் கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.

18 அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக் கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.

19 நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.

20 அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?

21 அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.

22 ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.

23 ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்; அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.

24 கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.

25 அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.

26 பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.

27 அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?

28 வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.

29 தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.

நீதிமொழிகள் அதிகாரம் 23


1 ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.

2 உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.

3 அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே; அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.

4 செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே; அதனால் உனது அறிவை இழந்து விடாதே.

5 இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?

6 கஞ்சர் தரும் உணவை உண்ணாதே; அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.

7 அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்; "உண்டு பருகு" என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம்.

8 நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.

9 மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே; உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.

10 வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே; உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.

11 ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.

12 நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து; அறிவ+ட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.

13 பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள்.

14 நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.

15 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன்.

16 உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.

17 வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு.

18 அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.

19 பிள்ளாய், இதைக் கவனி; ஞானமுள்ளவனாயிரு; உன் மனத்தை நன்னெறியில் செலுத்து.

20 குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே.

21 குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.

22 பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.

23 மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு; ஆனால் அதை விற்பனை செய்யாதே; அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு.

24 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.

25 நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக; உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.

26 மகனே, நான் சொல்வதைக் கவனி; என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து.

27 விலைமகள் ஒரு படுகுழி; பரத்தை ஓர் ஆழ்கிணறு.

28 அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்; அவள் ஏராளமான பேரை வஞ்வசிப்பவள்.

29 துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?

30 திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,

31 மதுவைப் பார்த்து, "இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!" எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்;

32 பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும்.

33 உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.

34 கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.

35 "என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்" என்று நீ சொல்வாய்.

நீதிமொழிகள் அதிகாரம் 24


1 தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.

2 அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.

3 ஞானம் வீட்டைக் கட்டும்; மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும்.

4 அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.

5 வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.

6 ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.

7 ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.

8 தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான்.

9 மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.

10 நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?

11 கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.

12 "அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?

13 பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.

14 ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.

15 கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே.

16 நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.

17 உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே.

18 நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.

19 தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.

20 தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.

21 பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட; கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே.

22 ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?

23 ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்; நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல.

24 குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.

25 ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்; நற்பேறும் கிடைக்கும்.

26 நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.

27 வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.

28 தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.

29 "அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்" என்று சொல்லாதே.

30 சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.

31 அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் சுவர் இடிந்து கிடந்தது.

32 அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே;

33 இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.

34 அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.

நீதிமொழிகள் அதிகாரம் 25


1 இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.

2 மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.

3 அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந்தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.

4 வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.

5 அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப்பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.

6 அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோருக்குரிய இடத்தில் நில்லாதே.

7 பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, "நீ மேலிடத்திற்கு வா" என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.

8 ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?

9 அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.

10 வேளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.

11 தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

12 தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.

13 குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.

14 கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.

15 பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.

16 தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.

17 அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.

18 அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.

19 இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.

20 மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவதுபோலவும், புண்ணில் காடியை வார்ப்பதுபோலவும் இருக்கும்.

21 உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.

22 இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.

23 வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்றுவிக்கும்.

24 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.

25 தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.

26 பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.

27 தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.

28 தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.

நீதிமொழிகள் அதிகாரம் 26


1 வேனிற் காலத்தில் பனி இருக்குமா? அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா? அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.

2 சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.

3 குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.

4 மடையரின் கேள்விக்கு முட்டாள்தனமாகப் பதிலுரைக்காதே; உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.

5 மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை; இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;

6 மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக்கொள்வதற்குச் சமம்.

7 ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்;; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.

8 மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.

9 மூடன் வாயில் முதுமொழி, குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.

10 மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.

11 நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச்செயலையே மீண்டும் செய்வார்.

12 தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக்கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.

13 "வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது" என்று சொல்லிக்கொண்டிருப்பவர் சோம்பேறி.

14 கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண்டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.

15 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.

16 விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞானமுள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.

17 பிறருடைய சச்சரவுகளில் தலையிடுகிறவர், தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப் பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.

18 கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,

19 பிறனை வஞ்சித்துவிட்டு "நான் விளையாட்டுக்குச் செய்தேன்" என்று சொல்பவரே.

20 விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்; புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.

21 கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.

22 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம். அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

23 தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.

24 பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.

25 அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே; அவர் உள்ளத்தில் அருவருக்கத்தக்கவை ஏழு இருக்கும்.

26 அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.

27 தான் வெட்டின குழியில் தானே விழுவார்; தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.

28 பொய் பேசம் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசம் வாய் அழிவை உண்டாக்கும்.

நீதிமொழிகள் அதிகாரம் 27


1 இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன்போலப் பெருமையாகப் பேசாதே.

2 உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர்களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.

3 கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.

4 சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?

5 வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.

6 நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.

7 வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்; பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.

8 தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.

9 நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.

10 உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே; உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே; தொலையிலிருக்கும் உடன்பிறந்தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.

11 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.

12 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

13 அன்னியருடைய கடனுக்காகப் பிணையாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.

14 ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப்பதற்குச் சமமெனக் கருதப்படும்.

15 ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.

16 அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.

17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.

18 அத்திமரத்தைக் காத்துப் பேணுகிறவருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.

19 நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.

20 பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவதேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.

21 வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.

22 மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.

23 உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்; உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்துமாயிரு.

24 ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத்திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.

25 புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்; மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.

26 ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.

27 எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.

நீதிமொழிகள் அதிகாரம் 28


1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.

2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமைவாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.

3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.

4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.

5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.

6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.

8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.

9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.

10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.

11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.

12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்தற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.

13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.

14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங்கிற்கு உள்ளாவார்.

15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.

16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.

17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.

18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.

19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.

20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.

21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.

22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார்.

23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.

24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, "அது குற்றமில்லை" என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.

25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.

26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.

27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.

28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.

நீதிமொழிகள் அதிகாரம் 29


1 பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.

2 நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

3 ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்புகிறவர் சொத்தை அழித்துவிடுவார்.

4 நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.

5 தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.

6 தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.

7 ஏழைகளின் உரிமைகளைச் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.

8 வன்முறையாளர் ஊரையே கொளுத்திவிடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.

9 போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.

10 தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.

11 அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்கமாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோடிருப்பதால், அவர் சினம் ஆறும்.

12 ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.

13 ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.

14 திக்கற்றவர்களின் வழக்கில்; அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.

15 பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக்கேட்டை வருவிப்பர்.

16 பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.

17 உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.

18 எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரிவார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.

19 வெறும் வார்த்தைகளினால் வேலைக்காரர் திருத்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்.

20 பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.

21 அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.

22 எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.

23 இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.

24 திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.

25 பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.

26 பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?

27 நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.

நீதிமொழிகள் அதிகாரம் 30


1 மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்; அவர் ஈத்தியேல் ஊக்கால் என்பவர்களுக்குக் கூறிய வாக்கு;

2 மாந்தருள் மதிகேடன் நான்; மனிதருக்குரிய அறிவாற்றல் எனக்கில்லை.

3 ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.

4 வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எலலாவற்றையும் அறிந்தவனாயிற்றே!

5 கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.

6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.

7 வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.

8 வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.

9 எனக்கு எல்லாம் இருந்தால், நான், "உம்மை எனக்குத் தெரியது" என்று மறுதலித்து, "ஆண்டவரைக் கண்டது யார்?" என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

10 வேலைக்காரரைப் பற்றி அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே; சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்; நீயே குற்றவாளியாவாய்.

11 தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.

12 மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.

13 கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம்-இத்தகைய மக்களும் உண்டு.

14 பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி - இவற்றை உடைய மக்களும் உண்டு; அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்; உலகிலுள்ள எளியோரைத் தின்று விடுவார்கள்.

15 அட்டைப்ப+ச்சிக்கு, "தா, தா" எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு; ஆவல் தணியாத மூன்று உண்டு; "போதும்" என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.

16 அவை; பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம், "போதும்" என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.

17 தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.

18 எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.

19 அவை; வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.

20 விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே; தவறு செய்தபின் அவள் குளித்துவிட்டு, "நான் தவறு எதுவும் செய்யவில்லை" என்பாள்.

21 உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று; அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு;

22 அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,

23 யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண், உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.

24 சிறியவையாயினும் ஞானமுள்ள சிற்றுயிர்கள் நான்கு உலகில் உண்டு;

25 எலும்புகள்; இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.

26 குறுமுயல்கள்; இவையும் வலிமையற்ற இனமே; எனினும், இவை கற்பாறைகளுக்கிடையே தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.

27 வெட்டுக்கிளிகள்; இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.

28 பல்லி; இதைக் கைக்குள் அடக்கி விடலாம்; எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.

29 பீடுநடை போடுபவை மூன்று உண்டு; ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு;

30 விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;

31 பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.

32 நீ வீண் பெருமைகொண்டு மூடத்தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக்கொண்டிரு.

33 ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.

நீதிமொழிகள் அதிகாரம் 31


1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்; இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்;

2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.

3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.

4 இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது.

5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.

6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.

7 அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.

8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு.

9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும்; வறியோருக்கும் நீதி வழங்கு.

10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.

11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.

12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.

13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.

15 வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.

16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதியத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.

17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.

18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.

19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.

20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.

22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.

23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.

24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.

25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் ப+ண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.

26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவரை கூறுவாள்.

27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.

28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.

29 "திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே" என்று அவன் சொல்வான்.

30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.

31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
 


நீதிமொழிகள் பழமொழி ஆகமம் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் பழமொழி ஆகமம் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு




Labels:
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *