திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

எசாயா தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு


எசாயா

முன்னுரை:

கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்த எசாயா இறைவனால் சிறப்பான முறையில் தெரிந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர். இந்த மாபெரும் இறைவாக்கினரின் பெயரால் வழங்கப் பெறும் எசாயா நூலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) எசாயா அதிகாரங்கள் 1 - 39:

இக்காலத்தில் தென் நாடாம் யூதா, வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருந்தது. ஆனால் யூதாவுக்கு வரவிருந்த அழிவுக்கு, அசீரியாவின் ஆற்றலை விட, அந்த நாடு கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே உண்மையான காரணம் என்று எசாயா உணர்ந்தார். எனவே அவர் எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களலும், அம்மக்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடாவிடில் இருளும் அழிவுமே காத்திருக்கின்றன என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார்.

2) எசாயா அதிகாரங்கள் 40 - 55 :

இப்பகுதி யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இஸ்ரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு வலியுறுத்தப் பெறுகின்றன. இப்பகுதியில் காணப்பெறும் ,ஆண்டவரின் ஊழியன் , பற்றிய பாடல்கள் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்த பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

3) எசாயா அதிகாரங்கள் 56 - 66 :

இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில்  வலியுறுத்தப்படுகின்றது; நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம்; பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.

எசாயா நூலின் பகுதிகள்

1) எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 1: 1 - 12:6

2) வேற்றினத்தார்க்குரிய தண்டனைகள் 13:1 - 23:18

3) உலகின் மீது ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு 24:1 - 27:13

4) எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 28:1 - 35:10

5) யூதாவின் அரசன் எசேக்கியாவும் அசீரியரும் 36:1 - 39:8

6) வாக்குறுதி, நம்பிக்கை உரைகள் 40:1 - 55:13

7) எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 56:1 - 66:24



எசாயா அதிகாரம் 1


1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

2 விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு; ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்; பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.

3 காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.

4 ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது; அநீதி செய்வோரின் கூட்டம் இது; தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது; கேடுகெட்ட மக்கள் இவர்கள்; ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்; இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்; அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.

5 நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்; இதயமெல்லாம் தளர்ச்சி.

6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.

7 உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது; உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின; வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்; வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.

8 மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.

9 படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.

10 எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

11 "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?" என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.

12 நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?

13 இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.

14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.

15 என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.

16 உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்;

17 நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

18 "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" என்கிறார் ஆண்டவர்; "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.

19 மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.

20 மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.

21 உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது; நீதி குடி கொண்டிருந்தது; இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.

22 உன் வெள்ளி களிம்பேறிற்று; உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.

23 உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்; கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகின்றான். திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

24 ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் எதிரிகளைப் பழிவாங்குவேன்; என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.

25 உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்; உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்; உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.

26 முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் "நீதியின் நகர்" எனப் பெயர் பெறும்; "உண்மையின் உறைவிடம்" எனவும் அழைக்கப்படும்.

27 நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.

28 ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்;

29 நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்; நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்.

30 ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்; நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்;

31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்; அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்; நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.

எசாயா அதிகாரம் 2


1 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி;

2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.

5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;

6 யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்; ஏனெனில் கீழை நாட்டுப் போதனை அவர்களிடையே மிகுந்துள்ளது. பெலிஸ்தியரைப் போல அவர்கள் நிமித்தம் பார்க்கின்றார்கள்; வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள்.

7 அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது; அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை; அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது; அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா.

8 அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன; தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்; தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.

9 இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்; மக்கள் சிறுமை அடைவார்கள்; ஆண்டவரே! அவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்;

10 கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்; ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;

11 செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்; ஆணவமிக்கோர் அவமானமடைவர்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவார்.

12 படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது; அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்; உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும்.

13 அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.

14 வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.

15 உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்; வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும்.

16 தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.

17 மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்; அவர்தம் செருக்கு அகற்றப்படும்; ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்;

18 சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும்.

19 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்; மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.

20 அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.

21 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்; குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.

22 நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்; அவர்களின் உயிர் நிலையற்றது; ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன?

எசாயா அதிகாரம் 3


1 படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்; யூதாவின் நலத்தை நலியச் செய்வார்; ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.

2 வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.

3 ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.

4 சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்; பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.

5 மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்; எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்; இளைஞர் முதியோரை அவமதிப்பர்; கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.

6 தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், "நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்; நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக; பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக" என்பான்.

7 அந்நாளில் அவன், "நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல; இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை; மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்" எனச் சொல்லி மறுத்துவிடுவான்.

8 எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது; யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன; மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.

9 அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் பறைசாற்றுகிறார்கள். ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு; ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள்.

10 ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்; அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி.

11 தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும்.

12 என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்; பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்; என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்; உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.

13 ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்; மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.

14 தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்; இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்; எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன;

15 என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?" என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

16 மேலும் ஆண்டவர் கூறியது இதுவே; "சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்;;றார்கள்; தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்; தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்.

17 ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை வருவிப்பார்; வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்; ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார்.

18 அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,

19 ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,

20 கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள்,

21 காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,

22 வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,

23 கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.

24 நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்; கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்; வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்; ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள்.

25 உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்; வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.

26 சீயோன் வாயில்கள் புலம்பி அழும்; அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.

எசாயா அதிகாரம் 4


1 அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்; எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்வோம்; உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக" என்பார்கள்.

2 அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

3 அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும், "புனிதர்" எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் "புனிதர்" எனப்படுவர்.

4 என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக்; கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்.

5 சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒருவிதான மண்டபம் இருக்கும்.

6 அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

எசாயா அதிகாரம் 5


1 என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்;டத்தைப்பற்றிக்; காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.

2 அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைத்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது.

3 இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.

4 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?

5 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; "நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.

6 நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன். "

7 படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

8 வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து நாட்டில் வாழ்வீர்களோ?

9 என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியது இதுவே; "மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்; அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள் தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.

10 ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்; பத்துக் கலம் விதை விதைத்தால், ஒரு கலமே விளையும்.

11 விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவுவரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஐயோ, கேடு!

12 அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை; அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.

13 ஆதலால் அறியாமையால் என்; மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்; அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்; பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்;

14 ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது; தன் பசியைப் பெருக்கியிருக்கிறது. எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார், அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.

15 மனிதர் தலைகுனிவர், மானிடமைந்தர் தாழ்வுறுவர், இறுமாப்புக் கொண்டோரின் பார்வை தாழ்ச்சியடையும்.

16 ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்; தூயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.

17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் தங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல மேயும், வெள்ளாட்டுக் குட்டிகளும் இளங்கன்றுகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.

18 பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப் பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஐயோ கேடு!

19 "நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து, தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் தூயவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும்" என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!

20 தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!

21 தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு!

22 திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

23 அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்; குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்;

24 ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை எரித்துச் சாம்பலாக்குவது போல, காய்ந்த புல் தீக்கிரையாக்கித் தீய்ந்து போவது போல, அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்; அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்; ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்; இஸ்ரயேலின் தூயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.

25 ஆதலால், ஆண்டவரின் சினத் தீ அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார். மலைகள் நடுநடுங்கின; அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன; இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை. நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.

26 அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.

27 அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை; இடறி விழவில்லை; தூங்கவில்லை; உறங்கவுமில்லை; அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை; மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.

28 அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை; அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன; அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப் போல் காட்சியளிக்கின்றன; அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.

29 அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது; இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்; யாரும் விடுவிக்க இயலாதவாறு இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

30 அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்; நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்; மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.

அதிகாரம் 6


1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.

2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து; "படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.

4 கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

5 அப்பொழுது நான்; "ஐயோ, நான் அழிந்னே;. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றேன்.

6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்;கிப் பறந்து வந்தார்.

7 அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது, "என்றார்.

8 மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன்.

9 அப்பொழுது அவர், "நீ இந்த மக்களை அணுகி, 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்' என்று சொல்.

10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்;படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்" என்றார்.

11 அதற்கு நான், என் தலைவரே! எத்துணை காலத்திற்கு இது இவ்வாறிருக்கும்?" என்று வினவினேன். அதற்கு அவர், "நகரங்கள் அழிந்து குடியிருப்;பார் இல்லாதனவாகும்; வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்; நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;

12 ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்; நாட்டில் குடியிருப்பாரின்றி வெற்றிடங்கள் பல தோன்றும்; அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.

13 பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும்; தேவதாரு அல்லது கருவாலி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டபின் அடிமரம் எஞ்சியிருப்பதுபோல் அது இருக்கும். அந்த அடிமரம்தான் தூய வித்தாகும், "என்றார்.

அதிகாரம் 7


1 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.

2 'சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது' என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வுகொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன.

3 அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி; "நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்;

4 "நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள்.

5 சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,

6 'யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்' என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். "

7 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்; "அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது.

8 ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு; தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்)

9 எப்ராயிமின் தலைநகர் சமாரியா; சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள். "

10 ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது;

11 "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார்.

12 அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட.;டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார்.

13 அதற்கு எசாயா; "தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.

15 தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.

16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.

17 எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.

18 அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும் அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்;

19 உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.

20 அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்; அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்; அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.

21 அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.

22 அவை மிகுதியாகப்பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்; நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும், வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.

23 அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள ஆயிரம் திராட்சைச் செடிகள் வளாந்த நிலம் முழுவதிலும் நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.

24 நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்;;;போடுமே மனிதர்கள் வருவார்கள்.

25 மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில் நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால் அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார். அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்; ஆடுகள் நடமாடும் காடாகும்.

அதிகாரம் 8


1 அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி; "நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது.

2 உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்" என்றார்.

3 நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு 'மகேர்சாலால் கஸ்பாசு' என்று பெயரிடு.

4 ஏனெனில் இச்சிறுவன் "அப்பா, அம்மா" என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்" என்றார்.

5 மீண்டும்; ஆண்டவர் என்னோடு உரையாடி,

6 "அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்; இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.

7 ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்வார்; கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்; எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்;

8 எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்; யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்; இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்;

9 மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்; ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்; தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்; போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்; ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்; ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.

10 ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்; கூடிப்பேசி முடிவெடுங்கள்; அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.

11 தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்;

12 "இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்;

13 படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்; அவருக்கே அஞ்சுங்கள்; அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,

14 அவரே திருத்தூயகமாய் இருப்பார்; இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்; எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.

15 அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

16 இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாய்க் கட்டிவை; என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை;

17 யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.

18 படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்; நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம்.

19 "மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்;களை ஓதிக் குறி சொல்;;வோரையும் அணுகிக் குறி கேளுங்கள்; என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?" என்பார்கள்.

20 "இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்" என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.

21 பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்; பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்; முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.

22 தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்; எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்; காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.

அதிகாரம் 9


1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.

2 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.

3 ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

4 மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

5 அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.

6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

7 அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

8 யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்; அது இஸ்ரயேல் மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும்.

9 எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள் ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள்.

10 செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது; "செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது; எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன; எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம் ".

11 ஆதலால் ஆண்டவர் இரட்சீனின் அதிகாரிகளை அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்; அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.

12 கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்; தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்; இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

13 தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை; படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை.

14 ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;

15 முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்; பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.

16 இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்; அவர்களால் வழி நடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.

17 ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை; அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை; அவர்கள் அனைவரும்இறைப்பற்று இல்லாதவர்கள்; தீச்செயல் புரிபவர்கள்; எல்லாரும் மதிகேட்டையே பேசினர்; இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

18 கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது; அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது; காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது; அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.

19 படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது; மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்; ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.

20 அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை; இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை; ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்;

21 மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்; இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்; இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை;

அதிகாரம் 10


1 அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்;களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!

2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்; எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்; கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகின்றார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.

3 தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?

4 கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்;து வருவீர்கள்; இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள். இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை. ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

5 அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.

6 இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன்.

7 அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.

8 அவன் இறுமாப்புடன் சொல்வதாவது; "என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?

9 கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்ற தல்லவா? ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா? சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா?

10 சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை என் கை எட்டியிருக்கின்றது; அந்நாட்டுச் சிலைகள் எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி.

11 சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும் அழித்துப் பாழ்படுத்தியவன் நான்; இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும் அவ்வாறே செய்யமாட்டேனோ? "

12 எனவே சீயோன் மலைமேலும் எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின், ஆணவம் நிறைந்த அசீர்pய அரசனின் சிந்தனையை முன்னிட்டும், இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும் "அவனை நான் தண்டிப்பேன்" என்கிறார் என் தலைவர்.

13 ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்; "என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.

14 குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையுயம் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை. "

15 வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னை தூக்கியவனைச் சுழற்றி வீச கைத்தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?

16 ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

17 இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்; அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்; அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும்.

18 வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்; அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும்.

19 அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்; ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம்.

20 அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள்.

21 யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.

22 இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.

23 ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார்.

24 என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்;

25 ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும் ".

26 ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது தமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.

27 அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள்மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.

28 பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்; அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்; மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.

29 கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்; கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்; இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்; சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள்.

30 பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்; இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்; அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள்.

31 மத்;;மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்; கேபிமினில் வாழ்;வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.

32 இன்;றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்; அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.

33 நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால், கிளைகளை வெட்டி வீழ்த்துவார்; உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்; செருக்குற்றவை தாழ்த்தப்படும்; நிமிர்ந்து நிற்;பவை தரைமட்டமாக்கப்படும்.

34 அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும்.

அதிகாரம் 11


1 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்.

2 ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்;.

3 அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்;

4 நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.

5 நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

6 அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.

7 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்;;கோல் தின்னும்;

8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.

9 என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

10 அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

11 அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.

12 பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்; இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்; யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.

13 எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும், யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர். எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை; யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை.

14 அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்; கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்; ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.

15 எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்; பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்; கால்;; நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.

16 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.

அதிகாரம் 12


1 அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்; "ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்; நீPர் என்மேல் சினமடைந்திருந்தீர்; இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது; நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.

3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்;களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.

6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

அதிகாரம் 13


1 ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு;

2 வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்; போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்; உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.

3 போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்; நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன்.

4 மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்; அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவராம்; அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்;

5 தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்; அவர்கள் வருகின்றார்கள்; ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.

6 அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது;

7 ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்; மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும்.

8 அவர்கள் திகிலடைவார்கள்; துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்; பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்; ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்; கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும்.

9 இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது.

10 வானத்து விண்மீன்;களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா; தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்; வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது.

11 உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்; ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்; அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்.

12 மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.

13 ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்; மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்; படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும்.

14 துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்; எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர்.

15 அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.

16 அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.

17 இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்; பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.

18 அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்; சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.

19 அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும்.

20 இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்; அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்; அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்; ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.

21 ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்; ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்; தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்; வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும்.

22 அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்; அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்; அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது; அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன.

அதிகாரம் 14


1 ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.

2 மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.

3 ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,

4 பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு; "ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே!

5 தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார்.

6 அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்; பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.

7 மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது; மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.

8 தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன; 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன.

9 நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது; உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது. "

10 அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, "நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!

11 உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன; புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்!

12 வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!

13 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்; வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.

14 மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!

15 ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்; படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!

16 உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,

17 பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?' என்பர்.

18 மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.

19 நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்; வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.

20 கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்; ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்; உன் மக்களைக் கொன்று போட்டாய்; தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.

21 மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்; நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது; பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது. "

22 "அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர், "பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன், "என்கிறார் ஆண்டவர்.

23 "அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்; சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்; அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

24 படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்; "நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்; நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.

25 என் நாட்;டில் அசீரியனை முறியடிப்பேன்; என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்; அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்; அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.

26 மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே; பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.

27 படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்? "

28 ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.

29 பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்; ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்; அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும்.

30 ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்; வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்; உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்;பேன்.

31 வாயிலே, வீறிட்டு அழு; நகரே, கதறியழு; எல்லாப் பெலிஸ்திய மக்களே; மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை.

32 அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? "சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே. "

அதிகாரம் 15


1 மோவாபைப் பற்றிய திருவாக்கு; ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும்.

2 தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்; நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து மோவாபு அலறி அழுகின்றது; அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.

3 அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்; வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்;டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர்.

4 எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது; படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான்.

5 மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது; அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்; ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்; ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;

6 நிம்ரியின் நீர்நிலைகள் தூர்ந்து போயின; புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின; பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.

7 ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும் சேமித்து வைத்தவற்றையும் தூத்கிக் கொண்டு அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.

8 மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது; அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது; அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.

9 தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன; ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான துன்பத்தைக் கொண்டு வருவேன்; மோவாபியருள் தப்பிப் பிழைத்;தோர்மேலும் நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.

அதிகாரம் 16


1 சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச் சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச் செம்மறியாடு அனுப்புங்கள்.

2 சிறகடித்து அலையும் பறவை போலும் கூடு இழந்த குஞ்சுபோலும் மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர்.

3 வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்; நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்; நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி, விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்; தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

4 மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்; ஒடுக்குபவன் ஒழிந்து போவான்; அழிவு ஓய்ந்து போகும்; மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர்.

5 அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால் ஓர் அரியணையை அமைப்பார்; அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்; அவர் உண்மையுடன் ஆள்பவர்; நீதியை நிலைநாட்டுபவர்; நேர்மையானதைச் செய்ய விரைபவர்.

6 மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்; அவன் ஆணவம் பெரிதே; அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும் செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோம். அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.

7 ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்; மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்; கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து, நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.

8 எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன, மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன. அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன; பாலை நிலம்வரை படர்ந்திருந்தன; அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து கடல்கடந்து படர்ந்து சென்றன.

9 ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்; எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்; ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.

10 வளமான வயல் நிலங்களிலிருந்து அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன. திராட்சைத் தோட்டங்களில் பாடல்கள் பாடுவார் யாருமில்லை; ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை. இரசம் எடுப்பதற்கு ஆலையில் திராட்சைக்கனி பிழிவாருமில்லை; பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது;

11 ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும், கீர்கேரசிற்காக என் இதயமும் வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;

12 மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில் வழிபாடு செய்து களைத்தும், திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும் அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.

13 இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.

14 ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது; கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.

அதிகாரம் 17


1 தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு; "நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்; அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.

2 அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்; அவை அங்கே படுத்துக் கிடக்கும்; அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.

3 எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்; தமஸ்கின் அரசு இல்லாதொழியும்; இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

4 அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்; அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.

5 அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.

6 ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர், "என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.

7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்; இஸ்ரயேலின் தூயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்;

8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்; தாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.

9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.

10 இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை; ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும், வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,

11 நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும், விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும், துயரத்தின் நாளில் தீராத வேதனையும் நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.

12 ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது; கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்; இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது; வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.

13 பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்; அவர்களை ஆண்டவர் அதட்டுவார்; அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்; மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.

14 மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்; விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்; இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு! இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.

அதிகாரம் 18


1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.

2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது; விரைவாய்ச் செல்லும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்; அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்; ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்; ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.

3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே, மண்ணுலகில் வாழ்வோரே, மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்; எக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்;

4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்; "பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன் "

5 ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து, கனிதரும் பருவம் எய்தும்போது, தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்; படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.

6 அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும் தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும். பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும் தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.

7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்;நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள்குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.

அதிகாரம் 19


1 எகிப்தைக் குறித்த திருவாக்கு; விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்; எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்; எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும்.

2 எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர்.

3 ஆதலால், எகிப்தியர்கள் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்; அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்; அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.

4 கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

5 கடல் நீர் வற்றிப்போகும்; பேராறு காய்ந்து வறண்டு போகும்;

6 அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்; எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்; கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும்.

7 ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்; நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.

8 மீனவர்கள் புலம்புவர்; பேராற்றில் தூண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்; நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.

9 மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர்.

10 நாட்டின் தூண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்; வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர்.

11 சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்; "நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்" என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?

12 அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும்.

13 சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்; நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள்.

14 ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்; போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள்.

15 எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது.

16 அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்;டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள்.

17 யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.

18 அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று "கதிரவன் நகரம்" என்று அழைக்கப்படும்.

19 அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும்.

20 எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.

21 அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.

22 ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.

23 அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்;து வழிபாடு செலுத்துவார்கள்.

24 அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.

25 படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி; "என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக! "

அதிகாரம் 20


1 அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,

2 அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது; "நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு; உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு. "அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்;டிருந்தார்.

3 ஆண்டவர் கூறினார்; என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும்.

4 அசீரிய மன்னன் எகிப்தியரைச் சிறைப்பிடித்து, எத்தியோப்பியரை நாடு கடத்துவான். அவன் எகிப்தியருக்கு மானக்கேடு உண்டாகும்படி இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங் காலோடும் இருப்பிடம் மூடப்படாமலும் இழுத்து வருவான்.

5 அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர்.

6 அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், "இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டியாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?" என்பார்கள்.

அதிகாரம் 21


1 கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு; தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது.

2 கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது; நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்; நாசக்காரன் நாசம் செய்கின்றான். "ஏலாம் நாடே! கிளர்ந்தெழு; மேதியாவே! முற்றுகையிடு" அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன்.

3 ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக் கொண்டன; கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்; திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.

4 என் மனம் பேதலிக்கிறது; திகில் என்னை ஆட்கொண்டது; நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது.

5 பந்தி தயார் செய்கிறார்கள்; கம்பளத்தை விரிக்கிறார்கள்; உண்கிறார்கள், குடிக்கிறார்கள்; தலைவர்களே, எழுங்கள்; கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.

6 ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே; "நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.

7 இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்;;போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும். "

8 அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்; "என் தலைவரே, பகல்;முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்; இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன்.

9 இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, 'பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது; அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று' என்று கூறுகிறார். "

10 போராடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.

11 தூமாவைப் பற்றிய திருவாக்கு; சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, "சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?" என்று ஒருவர் கேட்க,

12 "காலை வருகிறது, அவ்வாறே இரவும்; கேட்பதென்றால், கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் கூறினான்.

13 அரேபியாவைக் குறித்த திருவாக்கு; தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்;

14 தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்; அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள்.

15 ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்; உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள்.

16 என் தலைவர் எனக்குக் கூறியது; கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்;த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

17 கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.

அதிகாரம் 22


1 காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு; வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே, உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?

2 ஆரவாரம் நிறைந்த நகரமே; அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே! உங்களிடையே கொலை செய்யப்பட்டோர் வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை, போர்க்களத்திலும் செத்;து மடியவில்லை.

3 உங்கள் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்; அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்; உன்னிடத்தில் இருந்தவர் யாவரும் வெகு தொலைவிற்குத் தப்பியோடியும் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசேரக் கைதானார்கள்.

4 ஆதலால் நான் "என்னை உற்று நோக்காதீர்கள், நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்; என் மக்களாகிய மகளின் அழிவைக்குறித்து என்னை தேற்ற முயலாதீர்கள்" என்றேன்.

5 ஏனெனில் அமளியும் திகிலும் நிறைந்த நாள் அது; மக்கள் மிதிபடும் நேரம் அது. என் தலைவராகிய படைகளின் ஆண்டவரது நாள் அது. காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது; மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன; மலையை நோக்கி அபயக்குரல் எழுகிறது.

6 ஏலாம் நாட்டினர் அம்பறாத்தூணியை எடுத்துச்சென்றனர், தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும் புறப்பட்டனர்; கீரைச் சார்ந்தோர் கேடயத்தின் உறையை அகற்றினர்.

7 மிகச்சிறந்த உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிறைந்தன, குதிரைவீரர்கள் உன் வாயில்களில் அணிவகுத்து நின்றனர்.

8 யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது; அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த "வன மாளிகை "யை நாடினீர்கள்.

9 தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை நீங்கள் கண்டீர்கள்; கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்;

10 எருசலேமின் வீடுகளை எண்ணி முடித்தீர்கள்; அரணுக்கு வலுவூட்ட வீடுகளை இடித்தீர்கள்.

11 இரு மதில்களுக்கும் இடையே பழைய குளத்துத் தண்ணீருக்கென்று ஒரு நீர்த்தேக்கத்தை அமைத்தீர்கள். ஆனால் அதை உருவாக்கியவரை நீங்கள் நாடவில்லை; தொலையிலிருந்து அதை ஏற்படுத்தியவரை நீங்கள் கண்ணோக்கவுமில்லை.

12 அந்நாளில் புலம்பவும், ஓலமிட்டுக் கதறி அழவும் தலையை மொட்டை அடித்துக்கொள்ளவும் சாக்கு உடை உடுத்தவும் படைகளின் ஆண்டவரான எம் தலைவர் ஆணையிட்டார்.

13 நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்; எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள். "உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்" என்கின்றீர்கள்.

14 படைகளின் ஆண்டவர் நான் என் காதால் கேட்குமாறு வெளிப்படுத்தியது; "நீங்கள் சாகும்வரை இத் தீச்செயலின் கறை கழுவப்படவேமாட்டாது, "என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

15 என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாகிய செபுனாவிடம் சென்று நீ சொல்லவேண்டியது;

16 "நீ உனக்கென்று ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாய்; உயர்ந்த இடத்தில் அக்கல்லறையை இருக்குமாறு அமைத்திருக்கிறாய்; பாறையில் உனக்கொரு தங்குமிடத்தைக் குடைந்துள்ளாயே? இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்? இங்கே உனக்கு என்ன வேலை?

17 ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளிவிட்டுத் தூக்கி எறிவார்; உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,

18 சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றி, பரந்து விரிந்த நாட்டிலே பந்தாடுவார். அங்கே நீ செத்துமடிவாய். உன் தலைவனின் குடும்பத்திற்கு இழுக்கானவனே, உன் மேன்மைமிகு தேர்ப் படைக்கும் அதே நிலைதான்.

19 உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.

20 அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,

21 உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.

22 அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான்.

23 உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்;

24 ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல், கலயங்கள், குடங்;கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல் அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர்.

25 படைகளின் ஆண்டவர் உரைத்தது; அந்நாளில் உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும். அதில் தொங்கிய சுமையும் வீழ்ந்து அழியும், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 23


1 தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு; தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்; தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும் வருவார் போவார் இல்லாதபடிக்கும் பாழாய்ப் போய்விட்டது; சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி அவர்களை வந்தடைகின்றது.

2 கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே, வாய் திறவாதீர்; உங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர்.

3 பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்; சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும், நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.

4 சீதோனே, வெட்கப்படு; "நான் பேறுகால வேதனை அடையவில்லை; பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை; இளைஞரைப் பேணவுமில்லை; கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை" என்று கடல் சொல்கின்றது; கடற்கோட்டை கூறுகின்றது.

5 இச்செய்தி எகிப்தை எட்டும்போது, தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.

6 கடற்கரை நாட்டில் வாழ்வோரே, தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.

7 பண்டைக்காலம் முதல் நிலைபெற்று, களிப்புமிகுந்த நகர் இதுதானா? தொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு அடியெடுத்து வைத்த நகரா இது?

8 அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்?

9 செருக்குற்றோர் சீர்குலையவும், நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும் அவமதிப்பு அடையவும் படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார்.

10 தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து; இனி இங்குத் துறைமுகமே இராது.

11 கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்; கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

12 "ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே, இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய், எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ; அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்" என்கிறார் அவர்.

13 இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.

14 தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.

15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்;

16 "மறக்கப்பட்ட விலைமாதே! யாழினைக் கையிலெடுத்து, நகரைச் சுற்றி வலம்;; வா. உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு; பண் பல பாடு. "

17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர்நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.

18 ஆனால்;; அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.

அதிகாரம் 24

1 இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து, அதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து, அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.

2 அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும், பணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும், வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ அவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.

3 நாடு முற்றிலும் பாழடைந்து போகும்; முழுவதும் சூறையாடப்படும். ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.

4 நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது, மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.

5 நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது; ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்; நியமங்களைச் சீர்குலைத்தார்கள்; என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.

6 ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது. அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர். அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்; சிலரே எஞ்சியிருப்பர்.

7 திராட்சை இரசம் அழுகின்றது; திராட்சைக் கொடி தளர்கின்றது; அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.

8 மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது; யாழின் இன்னிசை நின்றுவிட்டது.

9 பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்; மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.

10 குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது; யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.

11 திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது; மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது; விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.

12 பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது; நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.

13 நாட்டில் மக்களுக்கு நேரிடுவது ஒலிவமரத்தை உலுக்குவது போலவும், அறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப் பறிப்பது போலவும் உள்ளது.

14 எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்; ஆண்டவரின் மாட்சி பற்றி மேற்கிலிருந்து ஆரவாரம் செய்கின்றார்கள்.

15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்; கடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.

16 மண்ணுலகின் எல்லையிலிருந்து "நீதியுள்ளவருக்கு மாட்சி" என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்; நானோ, "இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன், எனக்கு ஐயோ, கேடு; எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்; துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்" என்றேன்.

17 உலகில் குடியிருப்;போரே, திகில், படுகுழி, கண்ணி, உங்களுக்கெதிரில் இருக்கின்றன.

18 திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்; படுகுழியிலிருந்து ஏறுகின்றவர் கண்ணியில் சிக்கிக் கொள்வார்; ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன; நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.

19 பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது; நிலவுலகம் பிளந்து விரிகின்றது; மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.

20 குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது; குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது; அதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது; அது வீழ்ச்சியடையும்; இனி ஒருபோதும் எழாது.

21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.

22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்; சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.

23 நிலா நாணமுறுவாள்; கதிரவன் வெட்கமடைவான்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.

அதிகாரம் 25


1 ஆண்டவரே, நீரே என் கடவுள்; நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உன் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.

2 ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்; அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்; அயல் நாட்டினரின் கோட்டை அது; இனி நகராய் இராது; என்றுமே கட்டி எழுப்பப்படாது.

3 ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்; முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.

4 ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்; வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே; புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்; ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,

5 வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்; முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.

6 படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

7 மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.

8 என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

9 அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "

10 ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.

11 நீந்துபவன் நீந்துவதற்;காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்; ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச்; செய்வார்.

12 வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்; அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.

அதிகாரம் 26


1 அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்; நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;

2 வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

3 அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

4 ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!

5 உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.

6 காலடிகள்-எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும்-அதை மிதிக்கும்.

7 நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.

8 ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.

9 என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.

10 கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை; நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்; ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.

11 ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை; உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்! உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்!

12 ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

13 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்; ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம்.

14 அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் நிழல்;கள் உயிர்பெற்றெழ மாட்டா; ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்; அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர்.

15 இந்த இனம் வளரச் செய்தீர்; ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்; நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்; நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர்.

16 ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம்.

17 பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்!

18 நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்;லை.

19 இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்.

20 என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்; கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.

21 மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்; மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்; அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது.

அதிகாரம் 27


1 அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை-லிவியத்தான் என்னும் நௌpந்தோடும் பாம்பை-தண்டிப்பார்; கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.

2 அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.

3 ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்; இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்; எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.

4 சினம் என்னிடம் இல்லை; நெருஞ்சியையும் முட்புதரையும் என்னோடு போரிடச் செய்தவன் எவன்? நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று, அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.

5 அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்; என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.

6 வருங்காலத்தில் யாக்கோபு வேரூயஅp;ன்றி நிற்பான்; இஸ்ரயேல் பூத்து மலருவான்; உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான்.

7 அவனை அடித்து நொறுக்கியோரை ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல், அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ? அவனை வெட்டி வீழ்த்தியோரை அவர் வெட்டி வீழ்த்தியதுபோல், அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ?

8 துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்; கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் தூக்கி எறிந்தார்.

9 ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும். அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே; சுண்ணாம்புக் கற்களை உடைத்துத் தூள் தூளாக்குவது போல அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்; அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும் நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.

10 அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது; குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது; ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது; அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.

11 உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன; பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்; ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது; ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்; அவர்களை உருவாக்கியவர் அவர்களுக்கு ஆதரவு அருளார்.

12 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்; இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.

13 அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

அதிகாரம் 28


1 எப்ராயிமின் குடிவெறியரின்; மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!

2 இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்; அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.

3 எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும்.

4 வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது; நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்; இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.

5 அந்நாளில் படைகளின் ஆண்டவரே, தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும் மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.

6 நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும் நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார்.

7 குருக்களும் இறைவாக்கினரும் திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்; மதுவால் தள்ளாடுகின்றனர்; அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்; திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்; மதுவால் மயங்குகின்றனர்; காட்சி காணுகையில் மருள்கின்றனர்; நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!

8 மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன; அழுக்குப் படியாத இடமே இல்லை!

9 "இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?

10 ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்; இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்" என்கின்றனர்.

11 ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.

12 "இதோ உள்ளது இளைப்பாற்றி; களைத்தவன் இளைப்பாறட்டும்; இதோ உள்ளது இளைப்பாற்றி" என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.

13 ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்; அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்; நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

14 ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே! ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.

15 "நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்; பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்; வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்" என்று சொன்னீர்கள்.

16 ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே; இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்; அது பரிசோதிக்கப்பட்ட கல்; விலையுயர்ந்த மூலைக்கல்; உறுதியான அடித்தளமாய் அமையும் கல்; "நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான். "

17 நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்; மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.

18 சாவுடன் நீங்கள் செய்;த உடன்படிக்கை முறிந்து போகும்; பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது; பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.

19 பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்; அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்; அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.

20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.

21 ஆண்டவர் பெராசிம் மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!

22 உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்; ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன்.

23 செவி கொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்; செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்;

24 விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது கொண்;டிருப்பார்களா? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?

25 அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின் உளுந்தைத் தூவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ? வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும், தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?

26 இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்; அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்;

27 உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை; சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை; ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.

28 உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை; அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அதை அவர்கள் நொறுக்குவதில்லை.

29 படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது; அவர் திட்டமிடுவதில்; வியப்புக்குரியவர்; செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.

அதிகாரம் 29


1 தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! அரியேல்! உனக்கு ஐயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்; விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.

2 அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்; அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்; அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.

3 உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்; உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்; உனக்கெதிராய் முற்றுகைத் தளங்;களை எழுப்புவேன்.

4 தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்; நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்; உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்;, உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.

5 உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்; கொடியவர் கூட்டம் "பறக்கும் பதர் போலிருக்கும்; இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.

6 இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல், சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.

7 அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு அதைத் துன்புறுத்திய அனைவரும் கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.

8 பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.

9 திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்; குருடரைப்போல் இருங்கள்; பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல; தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.

10 ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்; இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்; திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.

11 ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் ";இதைப்படியும்" என்றால், அவர் "என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே" என்பார்.

12 எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து "இதைப்படியும்" என்றால் அவர் "எனக்குப் படிக்கத் தெரியாதே" என்பார்.

13 என் தலைவர் கூறுவது இதுவே; வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!

14 ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்; அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.

15 ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, "நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?" எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!

16 நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி "நீர் என்னை உருவாக்கவில்லை" என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி "உமக்கு அறிவில்லை" என்று சொல்லலாமோ?

17 இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?

18 அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.

19 ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.

20 கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.

21 அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

22 ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது; இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை.

23 அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப்பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.

24 தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.

அதிகாரம் 30


1 கலகக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்; என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்; இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர்.

2 என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும் எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.

3 பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு மானக்கேட்டைக் கொணரும்; எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.

4 யூதாவின் தலைவர் சோவானுக்கு வந்தனர்; அதன் தூதர் ஆனேசுக்குச் சென்றனர்.

5 பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு அனைவரும் மானக்கேடடைவர்; அவர்களால் யாதொரு உதவியோ பயனோ இராது; ஆனால் மானக்கேடும் அவமதிப்புமே மிஞ்சும்.

6 நெகேபிலுள்ள விலங்கினங்களைப் பற்றிய இறைவாக்கு; கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது; பெண்சிங்கமும் ஆண்சிங்கமும், விரியன் பாம்பும் பறக்கும் நாகமும் உள்ள நாடு அது! இத்தகைய நாட்டின் வழியாய், கழுதைகளின் முதுகின்மேல் அவர்கள் தங்கள் செல்வங்களையும் ஒட்டகங்களின் திமில்கள்மேல் தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி, முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

7 எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது; ஆதலால் நான் அவர்களைச் "செயலற்ற இராகாபு" என அழைத்தேன்.

8 இப்பொழுது நீ சென்று அவர்கள் முன் பலகையில் பதித்து வை; ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை; வருங்காலத்திற்கென என்றுமுள சான்றாக அது விளங்கும்.

9 ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் மக்களாயும் பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும், ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச் செவிசாய்ப்பதை விரும்பாத பிள்ளைகளாயும் உள்ளனர்.

10 திருப்பார்வையாளரிடம் அவர்கள் "திருப்பார்வை காண வேண்டாம்" என்றும், திருக்காட்சியாளரிடம், "எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்; இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்; மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்;

11 தடம் மாறிச் செல்லுங்கள்; நெறியை விட்டு விலகுங்கள்; இஸ்ரயேலின் தூயவரை எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்" என்கிறார்கள்.

12 ஆதலால் இஸ்ரயேலின் தூயவர் கூறுவது இதுவே; என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்; அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்; அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.

13 ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில் இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல் இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும்.

14 அது இடிந்து வீழ்வது, குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்; அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.

15 என் தலைவரும் இஸ்ரயேலின் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்; அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்; நீங்களோ ஏற்க மறுத்தீர்கள்.

16 "முடியாது, நாங்கள் குதிரை ஏறி விரைந்தோடத்தான் செய்வோம்" என்கிறீர்கள்; ஆம், தப்பியோடத்தான் போகிறீர்கள்; "விரைந்தோடும் தேரில் ஏறிச்செல்வோம்" என்கிறீர்கள்; ஆம், உங்களைத் துரத்தி வருபவர் விரைந்து வருவார்.

17 ஒருவன் மிரட்ட, நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்; ஐவர் அச்சுறுத்த நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்; மலை உச்சிக் கொடிமரம் போல், குன்றின்மேல் சின்னம்போல் எஞ்சி நிற்பீர்கள்.

18 ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்; உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்; அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

19 சீயோன் வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.

20 என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித்; தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.

21 நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் "இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்" என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

22 அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும் பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும் தீட்டாகக் கருதுவீர்கள்; தீட்;டானவையாக அவற்றைக் கருதி வெளியே வீசித் "தொலைந்து போ" என்பீர்கள்.

23 நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.

24 முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.

25 கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.

26 ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.

27 இதோ, ஆண்டவரின் திருப்பெயர் தொலையிலிருந்து வருகின்றது; அவர் கனல்கக்கும் சினத்தோடும் பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும் வருகின்றார்; அவர் உதடுகள் கடும் சினத்தால் துடிக்கின்றன; அவர் நாக்கு பொசுக்கும் நெருப்பைப் போன்றது.

28 அவர் மூச்சு, கழுத்தளவு பாயும்வெள்ளம்போல வருகின்றது; அழிவு என்னும் சல்லடையில் மக்களினங்களைச் சலித்து வழிதவறச் செய்யும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.

29 புனித விழாக் கொண்டாடும் இரவில் பாடுவதுபோல் நீங்கள் மகிழ்ச்சிப் பாடல் பாடுவீர்கள்; இஸ்ரயேலின் பாறையான ஆண்டவர் மலைக்குச் செல்லும்போது குழலிசைத்துச் செல்வோரைப்போல் உங்கள் உள்ளம் அக்களிக்கும்.

30 ஆண்டவர் தம் மாட்சி மிகு குரலை எங்கும் ஒலிக்கச் செய்வார்; அவர், பொங்கியெழும் சீற்றம் கொண்டு, விழுங்கும் நெருப்பு, பெருமழை, சூறாவளிக்காற்று, கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்.

31 ஆண்டவரின் குரலொலி கேட்டு அசீரியர் நடுநடுங்குவர்; ஆண்டவர் தம் கோலால் அவர்களை அடிப்பார்.

32 உங்களின் யாழிசைக்கும், தம்புருவின் ஓசைக்கும் ஏற்ப, ஆண்டவர் தம் கோலால் அடிமேல் அடி அடித்து அவர்களை நொறுக்குவார்; அவர்களோடு கைகளைச் சுழற்றி வன்மையாகப் போரிடுவார்.

33 ஏனெனில், முன்னரே அவர்களுக்காக நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அது அரசனுக்கென்று தயார் செய்யப்பட்டது. ஆழமும், அகலமுமான நெருப்புக்குழியால் உருவாக்கப்பட்ட அதில் நெருப்பும், விறகுக்கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன. ஆண்டவரின் மூச்சு கந்தக மழைபோல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும்.

அதிகாரம் 31


1 துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்; பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்; இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை; ஆண்டவரைத் தேடுவதுமில்லை;

2 ஆனால் அவரோ ஞானமுடையவர்; தீங்கை வருவிப்பவர்; தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்; தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர்.

3 எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்ல; அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல; ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்; உதவி பெறுபவன் வீழ்வான்; அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.

4 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை; அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.

5 பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்; அதைப் பாதுகாத்து விடுவிப்பார்; தண்டிக்காமல் தப்புவிப்பார்.

6 இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.

7 அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.

8 "அசீரியன் வாளால் வீழ்வான்; ஆனால் மனிதரின் வாளாலன்று; அவனை வாள் விழுங்கிவிடும்; ஆனால் அது மனிதரின் வாளன்று; அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்; அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.

9 அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்; அவன் தலைவர் கலக்கமுற்று ஓடுவர்" என்கிறார், சீயோனில் தீப்பிழம்பையும் எருசலேமில் தீச்சூளையையும் கொண்ட ஆண்டவர்.

அதிகாரம் 32


1 இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்;

2 ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கிடமாகவும் புயலுக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்தில் நீருள்ள கால்வாய் போலும் காய்ந்த மண்ணில் பெரும் குன்றின் நிழல் போலும் இருப்பர்.

3 அப்பொழுது பார்வை உடையவரின் கண்கள் மறைக்கபட்டிரா. கேள்வியுடையவரின் செவிகள் அடைக்கப்பட்டிரா.

4 பதறும் நெஞ்சங்கள் அறிவை உணர்ந்துகொள்ளும்; திக்குவாயரின் வாய் தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.

5 மூடர் இனிச் சான்றோர் என அழைக்கப்படார்; கயவர் இனிப் பெரியோர் எனக்கருதப்படார்;

6 ஏனெனில், மூடர் மடமையாய்ப் பேசுகின்றனர்; அவர்களின் மனம் தீமை செய்யத் திட்டமிடும்; அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித் தீச்செயல் செய்வதையே நாடும்; அவர்கள் ஆண்டவரைப்பற்றித் தவறாகவே பேசுவர்; பசித்தோரின் பசி போக்கமாட்டார்; தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.

7 கயவரின் நயவஞ்சகச் செயல்கள் தீமையானவை; வறியோர் வழக்கில் நீதி இருப்பினும், வஞ்சக வார்த்தைகளால் ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை அவர்கள் திட்டமிடுகின்றனர்.

8 சான்றோர் உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்; அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர்.

9 பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்; கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்.

10 கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்; கனிகொய்யுங் காலம் இனி வராது.

11 பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்; கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்; உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள்.

12 செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.

13 முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள்.

14 அரண்மனை பாழடையுமாறு விடப்படும்; ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்; குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்; அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்; மந்தைகள் மேயும்.

15 மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்; பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்; செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும்.

16 நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்; நேர்மை வளமான வயல்களில் வாழும்.

17 நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.

18 என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.

19 ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்; நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.

20 நீர்வளமிக்க இடங்களில் எல்லாம் பயிர்செய்து தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும் நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.

அதிகாரம் 33


1 அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே! நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா! நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்; நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள்.

2 ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக!

3 ஆரவராப் பேரொலி கேட்க மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன; நீர் கிளர்ந்தெழும்;போது வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.

4 பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல் கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல் அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.

5 ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்; ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்; சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்;

6 உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்; அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார். ஆண்டவரைப்பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம்.

7 இதோ! வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள் வீதியில் நின்று கதறியழுகின்றனர்; சமாதானத்தின் தூதர் மனங்கசந்து அழுகின்றனர்.

8 நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை; வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை; உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது; ஒப்பந்தம் மீறப்படுகின்றது; மனிதருக்கு மரியாதையே கிடையாது.

9 நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது; லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது; சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது; பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.

10 ஆண்டவர் கூறுகின்றார்; இப்பொழுது நான் எழுந்தருள்வேன்; இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்; இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.

11 நீங்கள் பதரைக் கருத்தாங்கி, வைக்;கோலைப் பெற்றெடுத்தீர்கள்; உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.

12 சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்; முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.

13 தொலையில் உள்ளோரே, நான்செய்வதைக் கேளுங்கள்; அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.

14 சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்; இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்? என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?

15 நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர். கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர், கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர், இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர், தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;

16 அவர்களே உன்னதங்களில் வாழ்வர்; கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்; அவர்களுக்கு உணவு வழங்கப்படும்; தண்ணீர் தரப்படுவதும் உறுதி.

17 அரசரை உங்கள் கண்கள் அழகுமிக்கவராகக் காணும்; பரந்து விரிந்த நாட்டை நீங்கள் காண்பீர்கள்;

18 திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்; "குடிக்கணக்குச் செய்தவன் எங்கே? திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே? கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே?

19 உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும் புரியாத வேற்றுமொழியையும் கொண்ட காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.

20 நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்; அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.

21 ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்; அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது; துடுப்புப் படகு அங்குப் போவதில்லை; மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.

22 ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.

23 உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்; அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது; பாய் விரிக்கவும் முடியாது; அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்; முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர்.

24 சீயோனில் வாழ்பவர் எவரும் "நான் நோயாளி" என்று சொல்லமாட்டார். அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும்.

அதிகாரம் 34


1 வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்; மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்; மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்; வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.

2 வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்; அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்; அவர்களை அவர் அடியோடு அழிப்பார்; அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.

3 அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்; அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்; அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்;தோடும்.

4 விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்; திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.

5 ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது; இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.

6 அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின்;; இரத்தக் கறை படிந்துள்ளது; அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது; ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்; ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.

7 அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்; எருதுகளுடன் காளைகளும் மடியும்; அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்; தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.

8 ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது; சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.

9 ஏதோமின் நீரோடைகள் கீலாகும்; அதன் தரைப்புழுதி கந்தகமாகும்; அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.

10 இரவும் பகலும் அது அணையாமல் எரியும்; அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்; எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்;யார்.

11 கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்; ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்; ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்; அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.

12 உயர்குடி மக்கள் அங்கே இல்லை; அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை; அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.

13 அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்; அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்; ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.

14 காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்; காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்; கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.

15 ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்; பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.

16 ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; "எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை" ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.

17 அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்; அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது; அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.

அதிகாரம் 35


1 பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.

2 அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

3 தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.

4 உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். "

5 அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.

6 அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூயஅp;ற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள்; பாய்ந்தோடும்.

7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூயஅp;ற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

8 அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது "தூய வழி" என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

9 அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள்.

10 ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

அதிகாரம் 36


1 எசேக்கியா அரசனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னன் சனகெரிபு அரண்சூழ்ந்த யூதா நகர்கள் அனைத்திற்கும் எதிராகப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.

2 பின்பு அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து இரப்;சாக்கே என்பவனைப் பெரும்படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பி வைத்தான். அவனும் புறப்பட்டு வந்து, "வண்ணார் துறை" நெடுஞ்சாலை அருகிலிருந்த மேற்குக் குளக் கால்வாய்க் கரையில் நின்றுகொண்டிருந்தான்.

3 அப்பொழுது அவனிடம் யூதாவைச் சார்ந்த அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

4 இரப்சாக்கே அவர்களை நோக்கி, "எசேக்கியாவிடம் நீங்கள் சொல்ல வேண்டியது; மாவேந்தர் அசீரிய மன்னர் கூறுவது இதுவே; யாரை நம்பி நீ இப்படிச் செய்கிறாய்?

5 வெறும் வாய்ப்பேச்சு போர்ச் சூழலுக்கும் போர் வலிமைக்கும் ஈடாகும் என்று நீ கருதுகின்றாயா? யாரை நம்பி நீ எனக்தெதிராய்க் கிளர்ச்சி செய்தாய்?

6 இதோ, முறிந்த நாணற்கோல் போன்ற எகிப்தின்மீது நீ நம்பிக்கை வைத்துள்ளாய்; ஒருவன் அதை ஊன்றுகோலாகக் கொண்டால், அது அவன் கைக்குள் ஊடுருவிச் சென்று காயப்படுத்தும்; எகிப்து அரசன் பார்வோனும் தன்னை நம்பிய யாவர்க்கும் இப்படியே இருப்பான்.

7 அல்லது, எங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நம்பிக்கையை வைத்துள்ளோம் என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களானால், அக்கடவுளின் வழிபாட்டு மேடைகளையும் பலி பீடங்களையும் இடித்தெறிந்தவன் எசேக்கியா அல்லவா? இந்த ஒரு பலி பீடத்தில் மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும் என்று யூதா, எருசலேம் மக்களிடம் கூறியவனும் அவனல்லவா?

8 இப்பொழுது என் தலைவராகிய அசீரிய அரசனுடன் பேரம் ஒன்று செய்து கொள். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். ஆனால் அவற்றின்மேல் ஏறிச் செல்லும் திறனுள்ள வீரர்கள் உன்னிடம் உள்ளனரா?

9 என் தலைவரின் அதிகாரிகளுள் மிகச்சிறிய தலைவன் ஒருவனைக்கூட பின்வாங்கச் செய்ய உன்னால் முடியுமா? இப்படியிருக்க, நீ தேர்ப்படைக்காகவும் குதிரை வீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருப்பதேன்?

10 மேலும், ஆண்டவரின் விருப்பமின்றியா, இந்த நாட்டுக்கு எதிராக வந்து அதை அழிக்கப்போகிறேன்? ஆண்டவர் என்னிடம், 'நீ இந்த நாட்டுக்கு எதிராகச் சென்று, அதை அழித்து விடு' என்று கூறியுள்ளார்" என்றான்.

11 எலியாக்கிம், செபுனா, யோவாகு ஆகியோர் இரப்சாக்கேயை நோக்கி, "உம் பணியாளர்களான எங்களோடு தயைகூர்ந்து அரமேய மொழியில் பேசும்; நாங்கள் "புரிந்து கொள்வோம். எங்களிடம் யூதா நாட்டு மொழியில் பேசாதீர். சுவர்மேல் இருக்கும் ஆள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.

12 அதற்கு இரப்சாக்கே, "உங்களிடம் உங்கள் தலைவனிடமும் இந்த வார்த்தைகளைக் கூறுவதற்காகவா என்னை என் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்? உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று தங்கள் சிறு நீரைக் குடிக்கப் போகிறவர்களாகிய சுவர்மேல் அமர்ந்திருக்கின்ற இந்த ஆள்களிடம் அறிவிப்பதற்கன்றோ என்னை அனுப்பியுள்ளார்" என்றான்.

13 பின்பு அவன் எழுந்து நின்று யூதா நாட்டு மொழியில் உரத்த குரலில் கத்தி, "மாவேந்தர் அசீரிய மன்னரின் வார்த்தைகளைக் கேளுங்கள்;

14 அரசர் கூறுவது இதுவே; எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், அவனால் உங்களை விடுவிக்க இயலாது.

15 "ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி; இந்நகர் அசீரிய மன்னன் கையில் ஒப்படைக்கப்படாது" என்று சொல்லி ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் தூண்டுவான்; அதற்கு இடம் கொடாதீர்கள்.

16 எசேக்கியாவிற்குச் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அசீரிய அரசர் கூறுகிறார்; என்னுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்; என்னிடம் சரணடையுங்கள்; அப்போது உங்களில் ஒவ்வொருவனும் தன் திராட்சைத் தோட்டக் கனியையும், அத்தி மரப் பழத்தையும் உண்பான்; தன் கிணற்றிலிருந்து நீரைப் பருகுவான்.

17 நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டிற்கு - தானியமும் திராட்சை இரசமும் மிகுதியாகக் கிடைப்பதும், உணவுப் பொருளும் திராட்சைத் தோட்டங்களும் ஏராளமாய் உள்ளதுமான நாட்டிற்கு - உங்களைக் கூட்டிச் செல்லும்வரை இது நடக்கும்.

18 'ஆண்டவர் நம்மை விடுவிப்பார்' என்று சொல்லி எசேக்கியா உங்களை ஏமாற்றாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மக்களினங்களின் தெய்;வங்களில் எவரேனும் அசீரியா அரசரின் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுணN;டா?

19 ஆமாத்தின் தெய்வங்களும் அர்ப்பாதின் தெய்வங்களும் எங்கே? செபர்வயிம் தெய்வங்கள் எங்கே? என் கையிலிருந்து அவர்களால் சமாரியாவை விடுவிக்க முடிந்ததா?

20 அந்த நாடுகளின் தெய்வங்கள் அனைத்திலும் ஒன்றாவது என் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, எருசலேமை என் கையிலிருந்து ஆண்டவரால் விடுவிக்க இயலுமா? "

21 அவர்கள் அவனுக்கு ஒருவார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாது மௌனமாயிருந்தார்கள். எனெனில் 'அவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதீர்கள்' என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.

22 அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து இரப்சாக்கே சொல்லியவற்றை அவரிடம் அறிவித்தனர்.

அதிகாரம் 37


1 எசேக்கியா அரசர் அதைக் கேட்டவுடன் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடையால் தம்மை மூடிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் சென்றார்.

2 அவர் அரண்மனை மேற்பார்வையாளர் எலியாக்கிமையும், எழுத்தர் செபுனாவையும் குருக்களுள் முதியோரையும் சாக்கு உடை போர்த்தியவர்களாய் ஆமோட்சின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பி வைத்தார்.

3 அவர்கள் அவரிடம், "எசேக்கியா கூறியது இதுவே; இந்த நாள் துன்பமும் கண்டனமும் இழி சொல்லும் நிறைந்த நாள்; பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது; ஆனால் பெற்றெடுப்பதற்கு ஆற்றல் இல்லை.

4 தன் தலைவனாகிய அசீரிய மன்னனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே உயிராற்றல் நிறை கடவுளை இழித்துரைத்த சொற்களை ஒருவேளை உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருக்கக் கூடும். உம் கடவுளாகிய ஆண்டவர் அச்சொற்களை முன்னிட்டு அவர்களைக் கண்டித்தாலும் கண்டிப்பார். ஆதலால், இன்னும் உயிரோடிருக்கும் எஞ்சியோருக்காக உம் மன்றாட்டை எழுப்பியருளும்" என்றார்கள்.

5 இவ்வாறு எசேக்கியா அரசனின் அலுவலர் எசாயாவிடம் வந்து கூறியபோது,

6 அவர் அவர்களிடம் கூறியபோது; "நீங்கள் உங்கள் தலைவரிடம் சொல்ல வேண்டியது இதுவே; அசீரிய அரசனின் ஆள்கள் என்னை இழித்துரைத்த சொற்களைக் கேட்டு நீ அஞ்சாதே.

7 இதோ நான் ஓர் ஆவியை அவனிடம் அனுப்பி அவன் வதந்தி ஒன்றைக் கேட்குமாறு செய்வேன்; அவனும் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்;வான், அவன் நாட்டிலேயே அவனை வாளுக்கு இரையாக்குவேன்" என்கிறார் ஆண்டவர்.

8 இதற்கிடையில் அசீரிய மன்னன் இலாக்கிசு நகரைவிட்டுப் புறப்பட்டு லிப்னாவுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டிருந்ததை இரப்சாக்கே கேள்விப்பட்டான். எனவே அவனும் அங்கே சென்று அசீரிய மன்னனைக் கண்டான்.

9 "எத்தியோப்பியா மன்னன் திர்காக்கா உனக்கெதிராய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டு வருகிறான்" என்ற செய்தியை அசீரிய மன்னன் கேள்விப்பட்டு எசேக்கியாவிடம் தூதரை அனுப்பி,

10 யூதா அரசர், எசேக்கியாவிற்கு அறிவித்தது; நீ நம்பிக்கை வைத்துள்ள உன் கடவுள், "எருசலேம் அசீரிய மன்னன் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது" என்று சொல்லி உன்னை ஏமாற்ற விடாதே.

11 அசீரிய மன்னர்கள் தாங்கள் முற்றிலும் அழிக்க விரும்பும் நாடுகளுக்குச் செய்த அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்; நீ மட்டும் தப்பித்துக் கொள்ள முடியுமா?

12 என் மூதாதையர் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு மக்களையும் தெலாசாரில் உள்ள ஏதேன் மக்களையும் அந்நாட்டுத் தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா?

13 ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்ப்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் மன்னர்கள் எங்கே?

14 எசேக்கியா தூதரிடமிருந்து மடலை வாங்கிப் படித்தார்; அவர் ஆண்டவரின் இல்லம் சென்று ஆண்டவர் திருமுன் அதை விரித்து வைத்தார்.

15 எசேக்கியா ஆண்டவரிடம் மன்றாடினார்;

16 "இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரே, கெருபுகள் மேல் வீற்றிருப்பவரே, உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் நீர் ஒருவரே கடவுள்; விண்ணுலகையும், மண்ணுலகையும் உருவாக்கியவர் நீரே.

17 ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும். ஆண்டவரே, கண் திறந்து பாரும். கடவுளை இழித்துரைக்குமாறு சனகெரிபு சொல்லி அனுப்பிய சொற்கள் அனைத்தையும் கேளும்.

18 ஆண்டவரே, அசீரிய மன்னர்கள் அனைத்து நாடுகளையும் அவற்றின் நிலங்களையும் பாழடையச் செய்தது உண்மையே!

19 அவற்றின் தெய்வங்களை நெருப்புக்குள் எறிந்ததும் உண்மையே. ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல; மனிதரின் கைவினைப் பொருள்களே; மரமும் கல்லுமே! எனவேதான் அவற்றை அவர்கள் அழித்தொழித்தனர்.

20 ஆகவே, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீர் ஒருவரே ஆண்டவர் என்று உலகின் அரசுகள் அனைத்தும் அறிந்து கொள்ளுமாறு எங்களை அசீரியன் கையினின்று விடுவித்தருளும்.

21 அப்போது, ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவுக்கு இவ்வாறு சொல்லயனுப்பினார்; இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "அசீரிய மன்னன் சனகெரிபை முன்னிட்டு நீ என்னை நோக்கி மன்றாடினாய்.

22 அவனைக் குறித்து ஆண்டவர் சொல்லி வாக்கு இதுவே; 'கன்னி மகள் சீயோன் உன்னை அவமதித்து எள்ளி நகையாடுகிறாள்; மகள் எருசலேம் உன் பின்னால் நின்று இகழ்ச்சியுடன் தலையசைக்கிறாள்.

23 யாரை நீ பழித்து இடித்துரைத்தாய்? யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்? யாரைச் செருக்குடன் நீ உற்றுப் பார்த்தாய்? இஸ்ரயேலரின் தூயவருக்கு எதிராக அன்றோ!

24 நீ உன் பணியாளர்களைக் கொண்டு என் தலைவரைப் பழித்துரைத்து, என் பெரும் தேர்ப்படையுடன் நான் மலை உச்சிகளுக்கும் லெபனோனின் மலைச்சரிவுகளுக்கும் ஏறினேன்; வானளாவிய அதன் கேதுரு மரங்களையும் மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன்; கடை எல்லையிலுள்ள அதன் உச்சிக்கும் அடர்த்தியான அதன் காட்டுப் பகுதிக்கும் வந்தேன்.

25 நான் கிணறு வெட்டி அதன் நீரைப் பருகினேன்; என் காலடியால் எகிப்தின் நீரோடைகள் அனைத்தையும் வற்றிப்போகச் செய்தேன்' என்று சொன்னாய்.

26 நானே தொடக்கத்திலிருந்து முடிவெடுத்து செயல்படுகிறேன் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? முற்காலம் தொட்டுத் திட்டமிட்டதை இன்று நான் செயல்படுத்துகிறேன்; அதனால்தான் அரண்சூழ் நகர்களை நீ பாழடைந்த மண்மேடுகளாகச் செய்தாய்.

27 அவற்றில்வாழ் மக்கள் ஆற்றல்குன்றி நடுநடுங்கி நாணிக்குறுகினர்; வளருமுன் அனல்காற்றால் கருகிவிடும் வயல்வெளிச் செடிபோன்றும், அறுகம் புல் போன்றும், கூரைமேல் வளர் புல் போன்றும், அவர்கள் ஆயினர்.

28 நீ இருப்பது, நீ போவது, நீ வருவது, எனக்கெதிராய் நீ கொந்தளிப்பது - அனைத்ததையும் நான் அறிவேன்.

29 எனக்கெதிராய் நீ கொந்தளித்ததும் செருக்குடன் நீ பேசியதும் என் செவிகளுக்கு எட்டியது; எனவே உன் மூக்கில் என் வளையத்தையும் உன் வாயில் என் கடிவாளத்தையும் மாட்டுவேன்; நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விடுவேன்.

30 இதுவே உனக்கு அடையாளம்; தானாய் விழுந்து முளைப்பதை இந்த ஆண்டும், அதிலிருந்து வளர்வதை இரண்டாம் ஆண்டும் உண்பாய். மூன்றாம் ஆண்டோ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடி நட்டு அதன் கனிகளை உண்பாய்.

31 யூதா வீட்டாருள் தப்பிப்பிழைத்த எஞ்சியோர் ஆழ வேர்விட்டு மேலே கனி தருவர்.

32 ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்தும் தப்பித்தோர் சீயோன் மலையினின்றும் புறப்பட்டு வருவர்; படைகளின் ஆண்டவரது பேரார்வமே இதைச் செய்து முடிக்கும்.

33 ஆதலால் அசீரிய மன்னனை முன்னிட்டு ஆண்டவர் கூறுவது இதுவே; அவன் இந்த நகருக்குள் நுழையமாட்டான்; ஓர் அம்பும் எய்ய மாட்டான்; அவன் கேடயம் தாங்கி நகர்முன் வரத் துணியமாட்டான்; அதை முற்றுகையிடவும் மாட்டான்.

34 வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்; இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான், "என்கிறார் ஆண்டவர்.

35 என் பொருட்டும் என் ஊழியன் தாவீது பொருட்டும் இந்நகரைக் "காத்தருள்வேன், விடுவிப்பேன்.

36 ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச்சென்று அசீரியரின் பாசறையிலிருந்து ஓர் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைச் சாகடித்தார். மறுநாள் காலையில் ஏனையோர் விழித்தெழுந்தனர். இதோ, எங்கும் பிணங்களைக் கண்டனர்.

37 உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி நினிவே சென்று தங்கியிருந்தான்.

38 ஒருநாள் அவன் நிஸ்ரோக்கு என்னும் தன் தெய்வத்தின் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அதிரமெலக்கு, சரேட்சர் என்ற அவன் புதல்வர்கள் வாள்முனையில் அவனைக் கொன்றுவிட்டு அரராத்து நாட்டிற்குத் தப்பியோடினர். அவனுக்குப்பின் ஏசர்கத்தோன் என்ற அவன் மகன் ஆட்சி செய்தான்.

அதிகாரம் 38


1 அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே; நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்;; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்" என்றார்.

2 எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,

3 "ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்" என்று கூறிக் கண்ணீர் சிந்தித்;;; தேம்பித் தேம்;பி அழுதார்.

4 அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது;

5 "நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது; உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.

6 உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.

7 தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்;

8 இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன். "அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.

9 யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்;

10 'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்;சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன்.

11 'வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன்.

12 என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,

13 துணை வேண்டிக் காலைவரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.

14 சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல் விம்முகிறேன்; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன; என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்; எனக்குத் துணையாய் இரும்.

15 நான் அவரிடம் என்ன சொல்;வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்; மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.

16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.

17 இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்; மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்; என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.

18 பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது; சாவு உம்மைப் புகழந்து ஏத்தாது; பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!

19 நான் இன்று உம்மைப் புகழ்ந்து போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.

20 ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்; ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.

21 "எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்" என்று எசாயா பதில் கூறியிருந்தார்.

22 ஏனெனில், "ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?" என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.

அதிகாரம் 39


1 அக்காலத்தில், பாபிலோன் மன்னன் பலாதானின் மகன் மெரோதாக்கு பலாதான், எசேக்கியா நோய்வாய்ப்பட்டதையும் அவர் குணமடைந்ததையும் கேள்வியுற்று அவரிடம் மடலையும் அன்பளிப்பையும் அனுப்பி வைத்தான்.

2 இதுபற்றி மகிழ்ந்த எசேக்கியா தூதர்க்குத் தம் கருவூல அறை, நறுமணப் பொருள்கள், பரிமளத்தைலம், பொன், வெள்ளி ஆகியவற்றையும் தம் படைக்கலன் இருந்த அறை முழுவதையும், தம் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்தையும் காண்பித்தார். எசேக்கியா தம் அரண்மனையிலோ தம் ஆட்சி எல்லைக்குள்ளோ அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் இல்லை.

3 அப்போது, எசாயா இறைவாக்கினர் எசேக்கியா அரசரிடம் வந்து, "அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உம்மிடம் வந்தார்கள்?" என்று வினவ, "அவர்கள் தொலை நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்" என்றார்.

4 "உம் அரண்மனையில் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் வினவ, "என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தார்கள், நான் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் என்;; சேமிப்புக் கிடங்கில் இல்லை" என்றார் எசேக்கியா.

5 அப்போது எசாயா எசேக்கியாவிடம், "படைகளின் ஆண்டவரின் வாக்கைக் "கேளும்;

6 இதோ, நாள்கள் வருகின்றன, அப்போது உம் அரண்மனையில் இருப்பவையும் இந்நாள்வரை உம் மூதாதையர் சேமித்து வைத்திருப்பவையும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; எதுவும் விடப்படாது, என்கிறார் ஆண்டவர்.

7 உமக்குப் பிறக்கும் புதல்வர் சிலர் கைதுசெய்யப்படுவர்; பாபிலோன் மன்னர் அரண்மனையில் அவர்கள் அண்ணகராய் இருப்பர்" என்றார்.

8 தம் ஆட்சிக்காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருக்கும் என்றுணர்ந்த எசேக்கியா எசாயாவை நோக்கி, "நீர்கூறிய ஆண்டவரின் வாக்கு நல்லதே" என்றார்.

அதிகாரம் 40


1 "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள்.

2 எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

3 குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.

4 பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

6 "உரக்கக் கூறு" என்றது ஒரு குரல்; "எதை நான் உரக்கக் கூற வேண்டும்?" என்றேன். "மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே!

7 ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!

8 புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

9 சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு!

10 இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.

11 ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். "

12 கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

13 ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்?

14 யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியை உணர்த்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்?

15 இதோ, வேற்றினத்தார், வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும், தராசில் ஒட்டிய தூசாகவும் அவரால் கருதப்படுகின்றனர். இதோ, தீவுகளை ஓர் அணுவென அவர் தூக்குகின்றார்.

16 எரிப்பதற்கு லெபனோன் போதாது; எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.

17 மக்களினங்கள் யாவும் இல்லாமையாக, ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன.

18 இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்?

19 சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்; பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்; வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான்.

20 இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவயன் உளுத்துப்;போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்; அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.

21 உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

22 உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே; மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்; வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.

23 ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே; மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.

24 அவர்கள் நடப்படுகிறார்கள்; விதைக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.

25 "யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?" என்கிறார் தூயவர்.

26 உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்;;றேனும் குறைவதில்லை.

27 "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை" என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?

28 உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.

29 அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

30 இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.

31 ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

அதிகாரம் 41


1 தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்; மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக!

2 சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக் கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்? மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது; அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது.

3 அவன் அவர்களைத் துரத்திச் செல்கின்றான்; எதிர்ப்பு எதுவுமின்றி முன்னேறுகின்றான்; பாதை வழியே காலடி படாது செல்கின்றான்.

4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!

5 தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்; உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்; எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.

6 ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்; தம் அடுத்தவரிடம், 'திடன்கொள்' என்கின்றார்.

7 கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்;டுகின்றார்; சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பதுபற்றி, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்; அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.

8 நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!

9 உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்; "நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்; உன்னை நான் தள்ளிவிடவில்லை" என்று சொன்னேன்.

10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.

11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.

12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.

13 ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

14 "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், "என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

15 இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.

16 அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.

17 ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.

18 பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூயஅp;ற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

19 பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.

20 அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் "தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

21 "உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்" என்கிறார் ஆண்டவர். "உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள் ", என்கிறார் யாக்கோபின் அரசர்.

22 அத்தெய்வங்கள் அருகில் வந்து, நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்; முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்; நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்; இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும்.

23 "நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்; நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம்.

24 இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை! உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே! உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன் ".

25 நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்; அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்; அவன் என் பெயரைப் போற்றுவான்; ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான்.

26 நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே இதை அறிவித்தவர் யார்? 'அது சரி' என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார்? அப்படி எதுவும் அறிவிக்கவில்லை; முன்னுரைக்கவில்லை; நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை.

27 "இதோ வருகிறார்கள்" என்று முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே! நற்செய்தியாளரை எருசலேமுக்கு அனுப்பியதும் நானே!

28 நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்; எதையும் காணவில்லை; அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை.

29 இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே!

அதிகாரம் 42


1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் ப+ரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.

2 அவர் கூக்குரலிடமாட்டார்; தம்குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்;டார்.

3 நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.

4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

5 விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;

6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.

7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

8 நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.

9 முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன; புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்; அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

10 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்; கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.

11 பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்; சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்; மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.

12 அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்; அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.

13 ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்; போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்; உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்; தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.

14 "வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்; அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக்குரல் எழுப்புகின்றேன்; பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.

15 மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்; அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்; ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்; ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.

16 பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்; அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்; அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்; கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்; இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன; நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.

17 சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், "நீங்கள் எங்கள் தெய்வங்கள்" என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.

18 செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.

19 குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?

20 பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.

21 ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத் தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.

22 ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது; அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்; சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்; விடுவிப்பார் எவருமிலர்; கவர்ந்து செல்லப்பட்டனர்; கொள்ளைப் பொருளாயினர்; "திருப்பி அனுப்பு" என்று சொல்வாரில்லை.

23 உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்? எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?

24 யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும் இஸ்ரயேலலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்? ஆண்டவரன்றோ? அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்! மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை; அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.

25 ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்; கடும் போர் மூண்டது; அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது; ஆயினும் அவர்கள் உணரவில்லை; அவர்களை நெருப்பு சுட்டெரித்தது; ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.

அதிகாரம் 43


1 யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்; அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்.

2 நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.

3 ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன்.

4 என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.

5 அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்; கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்; மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன்.

6 வடபுறம் நோக்கி, "அவர்களை விட்டுவிடு" என்பேன். தென்புறத்திடம் "தடுத்து நிறுத்தாதே" என்று சொல்வேன். "தொலைநாட்டிலிருந்து என் புதல்வரையும் உலகின் எல்லையிலிருந்து என் புதல்வியரையும் அழைத்து வா.

7 என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டுவா! ".

8 கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்களைப் புறப்பட்டு வரச்செய்.

9 வேற்றினத்தார் அனைவரும் ஒருங்கே திரண்டு வரட்டும்; மக்களினங்கள் ஒன்று கூடட்டும்; அவர்களுள் யார் அதை முன்னறிவிக்கக்கூடும்? முன்பு நடந்தவற்றை யாரால் விளக்கக் கூடும்? அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத் தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்; மக்கள் அதைக்கேட்டு 'உண்மை' என்று சொல்லட்டும்.

10 "நீங்கள் என் சாட்சிகள்" என்கிறார் ஆண்டவர்; "நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்; "நானே அவர்" என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.

11 நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

12 அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!

13 நானே இறைவன்; எந்நாளும் இருப்பவரும் நானே; என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை; நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?

14 இஸ்ரயேலின் தூயவரும் உங்கள் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் பொருட்டுப் பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும் தகர்த்துவிடுவேன்; கல்தேயரின் மகிழ்ச்சிப்பாடல் புலம்பலாக மாறும்.

15 நானே உங்கள் தூயவரான ஆண்டவர்; இஸ்ரயேலைப் படைத்தவர்; உங்கள் அரசர்.

16 கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும்,

17 தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே.

18 முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்;

19 இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.

20 காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்.

21 எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

22 ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே!

23 ஆடுகளை எரிபலிக்கென நீ என்னிடம் கொண்டு வரவில்லை; உன் பலிகளால் நீ என்னைப் பெருமைப்படுத்தவில்லை; உணவுப்படையல் படைக்குமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை; தூபம் காட்டுமாறு உன்னை வற்புறுத்தவில்லை.

24 பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை; உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை; மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய்.

25 நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.

26 கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். ஒருமிக்க நாம்; வழக்காடுவோம்; நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கானவற்றை எடுத்துரையுங்கள்.

27 உன் முதல் தந்தை பாவம் செய்தான்; உனக்காகப் பேசுவோரும் எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.

28 உன் தலைவர்கள் என் திருத்தூயகத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்; ஆதலால் யாக்கோபை அழிவுக்கும் இஸ்ரயேலைப் பழிப்புரைக்கும் உள்ளாக்கினேன்.

அதிகாரம் 44


1 என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.

2 உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்; என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட "எசுரூயஅp;ன்" அஞ்சாதே!

3 ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்;

4 அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.

5 ஒருவன் "நான் ஆண்டவருக்கு உரியவன்" என்பான்; மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்; வேறொருவன் "ஆண்டவருக்குச் சொந்தம்" என்று தன் கையில் எழுதி, "இஸ்ரயேல்" என்று பெயரிட்டுக் கொள்வான்.

6 இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; தொடக்கமும் நானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை.

7 எனக்கு நிகர் யார்? அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.

8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள்; என்னையன்றி வேறு கடவுள் உண்டோ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?

9 சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே; அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை; அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை; அறிவற்றவை; எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.

10 எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா?

11 இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்;கேடு அடைவர்; அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்; அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.

12 கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்; அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்; தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்; ஆற்றலை இழக்கிறான்; நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.

13 தச்;சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்; அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.

14 அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்; அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.

15 அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது; அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.

16 அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்; அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்; இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்; பின்னர் குளிர் காய்ந்து, "வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!" என்று சொல்லிக் கொள்கிறான்.

17 எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி "நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்" என்று மன்றாடுகிறான்.

18 அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.

19 அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; "அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் நெருப்புத்;தணலில் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?" என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.

20 அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது; ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன; அவனால் தன்னை மீட்க இயலாது, "தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை" என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.

21 யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.

22 உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.

23 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; ஆண்டவர் இதைச் செய்தார்; மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்; இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.

24 கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே; அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே; யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.

25 பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்;றேன்;

26 என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, "நீ குடியமர்த்தப் பெறுவாய்" என்றும் யூதா நகர்களிடம், "நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்" என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்" என்றும் கூறுகின்றேன்.

27 ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, "வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்" என்றும் உரைக்கின்றேன்.

28 சைரசு மன்னனைப்பற்றி, "அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, "அது கட்டியெழுப்பப்படும்" என்றும் திருக்கோவிலைப்பற்றி, "உனக்கு அடித்தளம் இடப்படும்" என்றும் கூறுவதும் நானே.

அதிகாரம் 45


1 சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்;;தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே;

2 நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்; செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.

3 இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.

4 என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.

5 நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.

6 கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

7 நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.

8 வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

9 தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், "நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்" என்றும் அவன் வனைந்தது அவனிடம், "உனக்குக் கைத்திறனே இல்லை" என்றும் கூறுவதுண்டோ?

10 தந்தையிடம், "நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்" என்றும், தாயிடம், "நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்" என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு!

11 இஸ்ரயேலின் தூயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; "நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?

12 நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.

13 வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்; அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்; அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்; நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப்பொருளோ அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

14 ஆண்டவர் கூறுவது இதுவே; "எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, "இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை "என்பார்கள்.

15 மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் "தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன் ".

16 சிலைகளைச் செய்வோர் அனைவரும் ஒருங்கே வெட்கி நாணினர்; அவர்கள் குழம்பித் தவித்தனர்.

17 ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து இஸ்ரயேலை விடுவித்தருளினார்; என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்; அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள். "

18 ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.

19 நான் மறைவிலும் மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை; "வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்" என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்; நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;

20 மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே! ஒன்று திரண்டு வாருங்கள்; ஒருங்கே கூடுங்கள்; மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம் தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.

21 அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.

22 மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.

23 நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.

24 "ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.

25 இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.

அதிகாரம் 46


1 பேல் கூனிக் குறுகுகின்றது; நெபோ குப்புற வீழ்கின்றது; அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன; நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின; களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.

2 அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன; கூனிக் குறுகுகின்றன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை; அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.

3 யாக்கோபு வீட்டாரே, இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே, செவிகொடுங்கள்; உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான்.

4 உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப்பேன்.

5 யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?

6 மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்; தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்; பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்; அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்; பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.

7 அதைத் தூக்கித் தோள்;மேல் சுமந்து போகின்றனர்; அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்; அது அங்கேயே நிற்கிறது; தன் இடத்திலிருந்து அது பெயராது; எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது; அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.

8 கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்; கவனத்தில் வையுங்கள்.

9 தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.

10 பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்; இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்; "என் திட்டம் நிலைத்திருக்கும்; என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்றுரைத்தேன்.

11 இரைமேல் பாயும் பறவையைக் கிழக்கிலிருந்து அழைக்கிறேன்; என் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருவனைத் தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்; சொல்லியவன் நான்; நானே அதை நிறைவேற்றுவேன்; திட்டமிட்டவன் நான்; நானே அதைச் செயல்படுத்துவேன்.

12 கடின மனத்தோரே, வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே, செவி கொடுங்கள்.

13 என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்; அது தொலையில் இல்லை, என் விடுதலை காலம் தாழ்த்தாது; சீயோனுக்கு நான் விடுதலை வழங்குகின்றேன்; இஸ்ரயேலில் என் மாட்சி நிலைக்கச் செய்வேன்.

அதிகாரம் 47


1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; "மெல்லியலாள் ", "இனியவள்" என்று இனி நீ அழைக்கப்படாய்.

2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.

3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.

4 எங்கள் மீட்பரின் பெயர் "படைகளின் ஆண்டவர் "; அவரே "இஸ்ரயேலின் தூயவர் ".

5 மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்; இனி நீ "அரசுகளின் தலைவி" என அழைக்கப்படமாட்டாய்.

6 நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்; என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்; அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை; முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.

7 "என்றும் தலைவி நானே, என்றாய் நீ; இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை; பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.

8 இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை; நான் கைம்பெண் ஆகமாட்டேன்; பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்" என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்;

9 இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்; பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.

10 உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்; "என்னைக் காண்பார் யாருமில்லை" என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன; "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை" என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

11 தீமை உன்மேல் திண்ணமாய் வரும்; அது தோன்றும் திக்கை நீ அறியாய்; அழிவு உன்மேல் விழும்; அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது; நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.

12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்; ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்; ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.

13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்; வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.

14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்; தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்; அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.

15 நீ முயன்று பயின்;;றவையும் இவ்வாறே அழிவுறும்; உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்; ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்; உன்னை விடுவிக்க எவரும் இரார்.

அதிகாரம் 48


1 யாக்கோபின் வீட்டாரே! இதற்குச் செவிகொடுங்கள்; நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்; யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்; ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளைப் புகழ்கின்றிர்கள். ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.

2 "திரு நகரினர்" என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்கின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்; "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம்!

3 பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்; என் தாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்; திடீரெனச் செயல்பட்டேன்; யாவும் நிகழ்ந்தன.

4 நீ பிடிவாத குணமுடையவன்; உன் கழுத்து இரும்புத் தசைநார்; உன் நெற்றி வெண்கலம்; இதை நான் அறிவேன்.

5 எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்; அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்; "என் சிலை அவற்றைச் செய்தது; நான் வார்த்த வடிவமும்; செதுக்கிய உருவமும் அவற்றைக் கட்டளையிட்டன" என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.

6 முன்பு நீ கேட்டாய்; இப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்; அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ? இதுமுதல் புதியனவற்றையும் அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.

7 பண்டைக்காலத்தில் அல்ல, அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன; இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை; அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை; "அவைபற்றி எனக்குத் தெரியும்" என நீ கூறவும் முடியாது.

8 உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை; முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை; ஏனெனில் நீ "ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்;தே கலகக்காரன்" என்று பெயர்பெற்றவன்; இதை நான் உறுதியாய் அறிவேன்.

9 என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்; என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.

10 நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால் வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.

11 என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்; என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்? என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.

12 நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு; நானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே.

13 என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது; என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்;போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.

14 நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்; அவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்? ஆண்டவரின் அன்புக்குரியவன், பாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்; அவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.

15 நான், நானேதான் அதைக் கூறினேன்; நான் அவனை அழைத்தேன்; நானே அவனைக் கொண்டு வந்தேன், அவன் தன்வழியில் வெற்றி காண்பான்.

16 என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்; தொடக்கமுதல் நான் மறைவாகப் பேகியதில்லை; அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.

17 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!

18 என் கட்டளைக்குச் செவிசாய்த்;திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.

19 உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

20 பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்; கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்; ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்; உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்; "தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்" என்று சொல்லுங்கள்.

21 அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது அவர்கள் தாகமடையவில்லை; பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்; பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.

22 "தீயோர்க்கு அமைதி இல்லை" என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 49


1 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

2 என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்;துக் கொண்டார்.

3 அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்றார்.

4 நானோ, "வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது" என்றேன்.

5 யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்டு இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்;

6 அவர் கூறுவது யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் மீட்பை அடைதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

7 மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும்; ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; "உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்; தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்."

8 ஆண்டவர் கூறுவது இதுவே; தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்; இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.

9 சிறைப்பட்டோரிடம், "புறப்படுங்கள்" என்றும் இருளில் இருப்போரிடம் "வெளிப்படுங்கள்" என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.

10 அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூயஅp;ற்றுகள் அருகே வழிநடத்துவார்.

11 என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

12 இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள்.

13 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

14 சீயோனோ, "ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்" என்கிறாள்.

15 பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்;பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.

17 உன் பிள்ளைகள் விரைந்து வருவர்; உன்னை அழித்துப் பாழாக்கியோரும் உன்னை விட்டுப் போய்விடுவர்.

18 உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்; என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்;துகொள்வாய்; மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.

19 பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன உன் நாட்டின் பகுதிகள் இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு மிகவும் கு றுகியதாயிக்கும்; முன்பு உன்னை விழுங்கியவர் உன்னைவிட்டு வெகு தொலைவுக்குச் செல்வர்.

20 உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் "இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது; நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்" என்பர்.

21 அப்போது நீ, "இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?" என்று உன் உள்ளத்தில் சொல்லிக் கொள்வாய்.

22 என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; வேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்; மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்; அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்; உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.

23 அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்; அவர்கள் அரசியர் உங்கள் செவிலித்தாயர் ஆவர்; முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அவர்கள் உன்னை வணங்குவர்; உன் காலடிப் புழுதியை நக்குவர்; நானே ஆண்டவர் என்பதையும், எனக்காகக் காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும் அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.

24 வலியோனின் கையினின்று, கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா? வெற்றி வீரனிடமிருந்து, சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?

25 ஆண்டவர் கூறுவது இதுவே; சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்; கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்; உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்; உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.

26 உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்; அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்; அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர், என்று அறிந்துகொள்வர்.

அதிகாரம் 50


1 ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்? இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.

2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடிந்;துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்; ஆறுகளைப் பாலையாக்குகிறேன்; அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன.

3 வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்; அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.

4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.

6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்;டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்.

9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்; புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.

10 உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்? அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்; ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.

11 ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே; நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்; என்; கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே; நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.

அதிகாரம் 51


1 விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.

2 உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்; தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்; அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.

3 ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்; பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்; அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்; அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்; நன்றிப்பாடலும் புகழ்ச்சிப்; பண்ணும் அங்கே ஒலிக்கும்.

4 என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; என் இனமே, எனக்குச் செவிகொடு; ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்; என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.

5 நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது; என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்; என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும்.

6 வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்; கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்; ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்; மண்ணுலகம் உடையென நைந்துபோம்; அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்; என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்; என் விடுதலைக்கு முடிவே இராது.

7 நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்; மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்; அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.

8 ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்; அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்; நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்; நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.

9 விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்து கொள்; பண்டைய நாள்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு; இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ?

10 பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து, ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து, மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ?

11 ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்; அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்; துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.

12 உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?

13 உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?

14 கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்; அவன் குழியில் செத்து வீழ்வதில்லை; அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.

15 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே! "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம்!

16 நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, "நீ என் மக்கள்" என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.

17 விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில்.

18 அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை; அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!

19 இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி-அழிவு, பஞ்சம்-வாள் இவை உன்னை வாட்டின; யார் உன்னைத் தேற்றுவார்?

20 உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்; வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்; ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்;டிப்புக்கும் உள்ளாயினர்.

21 ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.

22 தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே; "இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்; என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய். "

23 அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்; "நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட" என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே! உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே!

அதிகாரம் 52


1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்; திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்; விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.

2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்; அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

3 ஆண்டவர் கூறுவது இதுவே; விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்.

4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே; முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.

5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்க்ள். அவர்களை ஆளுவோர் தற்பெறுமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது என்கிறார் ஆண்டவர்.

6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்; இதோ, நான் இங்;கே இருக்கின்றேன்.

7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார்" என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.

9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

11 திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்; அங்கிருந்து வெளியேறுங்கள்; தீட்டானதைத் தொடாதீர்கள்; ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்; உங்களையும் தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.

12 நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை; தப்பியோடுவது போல் செல்வதுமில்லை; ஏனெனில், ஆண்டவர் உங்கள்;முன்னே செல்வார்; இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.

13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.

14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

அதிகாரம் 53


1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை;

3 அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.

4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம்;; துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

7 அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.

11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும்;;; வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

அதிகாரம் 54


1 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர்.

2 உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு; உன் முளைகளை உறுதிப்படுத்து.

3 வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

4 அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.

5 ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார்.

6 ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.

7 நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

8 பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

9 எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

10 மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

11 துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.

12 உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.

13 உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.

14 நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

15 எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால் அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்; உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.

16 இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்; அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.

17 உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்; இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும், நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 55


1 தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.

2 உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

3 எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.

4 நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.

5 இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.

7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

10 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை.

11 அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

12 மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்; அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்; காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.

13 முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்; காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்; இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்; அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.

அதிகாரம் 56


1 ஆண்டவர் கூறுவது இதுவே; நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

2 இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.

3 ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர், "தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி" என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், "நான் வெறும் பட்டமரம்" என்று கூறாதிருக்கட்டும்.

4 ஆண்டவர் கூறுவது இதுவே; என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,

5 என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.

6 ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்;ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது;

7 அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும்.

8 சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது; அவர்களுள் ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.

9 வயல்வெளி விலங்குகளே, காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம் இரை விழுங்க வாருங்கள்.

10 அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்; அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்; படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்; தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.

11 தீராப் பசிகொண்ட நாய்கள்; நிறைவு என்பதையே அறியாதவர்; பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்; அவர்கள் அனைவரும் அவரவர் தம் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்; ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர்.

12 ஒவ்வொருவரும், "வாருங்கள்; நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்; போதையேற நாம் மது அருந்துவோம்; நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்" என்கின்றனர்.

அதிகாரம் 57


1 நேர்மையாளர் அழிந்து போகின்றனர்; இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை; இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்; அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை; ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்;துக் கொள்ளப்படுகின்றனர்.

2 அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்; நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.

3 சூனியக்காரியின் மக்களே, விபசாரன், விலைமாதின் வாரிசே, அருகில் வாருங்கள்.

4 யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்? யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்? நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ! பொய்மையின் சந்ததியன்றோ!

5 கருவாலி மரத் தோப்பிலும், பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும் காமத்தீயால் எரிகிறீர்கள்; பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில், உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள்.

6 பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு; அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்; உணவுப் படையலைப் படைத்துள்ளாய்; இவற்றால் நான் அமைதி அடைவேனோ?

7 வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல் உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்; பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்;போனாய்.

8 கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்; என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்; ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்; நீ எவருடைய படுக்கையை விரும்;;பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்; அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.

9 நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்; நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்; தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்; பாதாளம் மட்டும் அனுப்பினாய்.

10 உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்; ஆயினும், "இது வீண்" என்று நீ சொல்லவில்லை; உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்; ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.

11 யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்? நீ என்னிடம் பொய் சொன்னாயே! நீ என்னை நினைவுகூரவில்லை; என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?

12 உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்; அவை உனக்கு உதவா.

13 நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்; வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்; என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர்.

14 அமையுங்கள்; பாதையை அமையுங்கள்; அதைத் தயார் செய்யுங்கள்; "என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்" என்று கூறப்படும்.

15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "தூயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே; உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.

16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.

17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.

18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்; ஆயினும் அவனைக் குணமாக்குவேன்; அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.

19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்; அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

20 கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்; அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது; அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன;

21 கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.

அதிகாரம் 58


1 பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.

2 அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.

3 "நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்;கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.

4 இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

5 ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

6 கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

7 பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

8 அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.

9 அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,

10 பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

11 ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூயஅp;ற்றுபோலும் இருப்பாய்.

12 உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

13 ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வு நாள் "மகிழ்ச்சியின் நாள்" என்றும் "ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்" எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால்,

14 அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம்வரச் செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.

அதிகாரம் 59


1 மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.

2 உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.

3 உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன; உங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன. உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன; உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.

4 நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை; உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை; வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.

5 நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்; சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்; அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்; உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.

6 அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா; அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்; அவர்களின் செயல்கள் தீயின; அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!

7 தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன; குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்; அவர்கள் எண்ணங்கள் தீயவை; பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.

8 அமைதி வழியை அவர்கள் அறியார்; நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை; தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்; அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.

9 ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது; நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது; விடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;

10 பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்; கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்; நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.

11 கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்; புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்; நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.

12 உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன; எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன; எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன; எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.

13 ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்; எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்; ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்; பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.

14 நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது; பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது; உண்மைக்கு அங்கே இடம் இல்லை.

15 உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது; தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்; ஆண்டவர் அதைக் கண்டார்; அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.

16 இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்; அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து; அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.

17 அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்; விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்; அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.

18 தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.

19 மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்; ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.

20 சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.

21 அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 60


1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!

2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.

5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.

6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

7 கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்; நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்; எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்; இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.

8 மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்?

9 தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.

10 அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்; அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்; ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்; நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.

11 உன் வாயில்கள் எப்;போதும் திறந்திருக்கும்; இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்; பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும்.

12 உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்; அவை முற்றிலும் பாழடைந்து போகும்.

13 லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.

14 உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்;வர்; "ஆண்டவரின் நகர்" என்றும், "இஸ்ரயேலின் தூயவரது சியோன்" என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.

15 நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்; உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை; நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.

16 நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்; மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்; ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய்.

17 வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.

18 உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை "விடுதலை" என்றும் உன் வாயில்களைப் "புகழ்ச்சி" என்றும் அழைப்பாய்.

19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!

20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.

21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே.

22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.

அதிகாரம் 61


1 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

2 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும்,

3 சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் "புகழ்" என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். "நேர்மையின் தேவதாருகள்" என்றும் "தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை" என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

4 நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்; முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்; தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச் சீராக்குவார்கள்.

5 அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்; வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும் திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.

6 நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்; பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்பீர்கள்; அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.

7 அவமானத்திற்குப் பதிலாக நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்; அவமதிப்புக்குப் பதிலாக உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்; ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்; முடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.

8 ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்; கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்; அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்; அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்;

9 அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களை காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.

10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

11 நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

அதிகாரம் 62


1 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.

2 பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

3 ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

4 "கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.

5 இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

6 எருசலேமே, உன் மதில்கள்மேல்;;; காவலரை நிறுத்தியுள்ளேன்; இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்; ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.

7 அவர் எருசலேமை நிலைநாட்டி, பூவுலகில் அது புகழ் பெறும்வரை அவரை ஓய்வெடுக்க விடாதீர்.

8 ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது; உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.

9 அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.

10 செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்; மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்; அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்; கற்களை அகற்றுங்கள்; மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.

11 உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது; "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது. "

12 'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.

அதிகாரம் 63


1 ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்? கருஞ்சிவப்பு உடை உடுத்திப் பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்? அழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன் பீடுநடைபோடும் இவர் யார்? நானேதான் அவர்! வெற்றியை பறைசாற்றுபவர்; விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.

2 உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்? உம் உடைகள் திராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?

3 தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை; என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்; என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது; என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்.

4 நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் என் நெஞ்சத்தில் இருந்தது; மீட்பின் ஆண்டு வந்துவிட்டது.

5 சுற்றுமுற்றும் பார்த்தேன்; துணைபுரிவோர் எவருமில்லை; திகைப்புற்று நின்றேன்; தாங்குவார் யாருமில்லை; என் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது; என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.

6 சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்; சீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்; அவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன்.

7 ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

8 ஏனெனில், "மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்" என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.

9 துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

10 அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி, அவரது தூய ஆவியைத் துயருறச் செய்தனர்; ஆதலால் அவரும் அவர்களின் பகைவராய் மாறினார்; அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.

11 அப்பொழுது அவர் மக்கள் மோசேயின் காலமாகிய பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்; தம் மந்தையை மேய்ப்பரோடு கடலினின்று கரையேற்றியவர் எங்கே? அவருக்குத் தம் தூய ஆவியை அருளியவர் எங்கே?

12 தம் மாட்சிமிகு புயத்தால் மோசேயின் வலக்கையை நடத்தி சென்றவர் எங்கே? தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு அவர்கள் முன் தண்ணீரைப் பிரித்தவர் எங்கே?

13 ஆழ்கடலின் நடுவே அவர்களை நடத்திச் சென்றவர் யார்? பாலை நிலத்தில் தளராத குதிரைபோல் அவர்கள் தடுமாறவில்லை.

14 கால்நடை பள்ளத்தாக்கினுள் இறங்கிச் செல்;வதுபோல் அவர்களும் இளைப்பாற ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது. இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.

15 விண்ணகத்தினின்று கண்ணோக்கும்; தூய்மையும் மாட்சியும் உடைய உம் உறைவிடத்தினின்று பார்த்தருளும்; உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே? என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே? என்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே!

16 ஏனெனில் நீரே எங்கள் தந்தை; ஆபிரகாம் எங்களை அறியார்; இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்; ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டை நாளிலிருந்து "எம் மீட்பர்" என்பதே உம் பெயராம்.

17 ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.

18 உம் திருத்தலத்தை உம் புனித மக்கள் சிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்; எங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர்.

19 உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்; உம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம்.

அதிகாரம் 64


1 நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!

2 விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்; வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.

3 நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின!

4 தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.

5 மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்; இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?

6 நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.

7 உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.

8 ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

9 ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்; குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்; உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

10 உம் புனித நகர்கள் பாலை நிலமாயின; சீயோன் பாழ் நிலமாயிற்று; எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.

11 எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய தூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று; எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.

12 ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?

அதிகாரம் 65


1 முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்; என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்; என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, "இதோ நான், இதோ நான்" என்றேன்.

2 தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன்.

3 அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்; தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.

4 கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்;;றனர்; பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்; தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர்.

5 இவ்வாறிருந்தும், "எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன்" என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.

6 அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று; நான் அமைதியாய் இருப்பதில்லை; அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.

7 அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்; குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.

8 ஆண்டவர் கூறுவது இதுவே; திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, "அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது" என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்; அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.

9 யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் ஊழியர் அங்கே வாழ்வர்.

10 என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.

11 ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே!

12 உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்; ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்; நீங்கள் மறுமொழி தரவில்லை; நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை; என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்; எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள்.

13 ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் ஊழியர்கள் உண்பார்கள்; நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்; நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்; என் அடியார்கள்; அக்களிப்பார்கள்; நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.

14 என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்; நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்; ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.

15 நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்; என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்; தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.

16 மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்; பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின; அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின.

17 இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை.

18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.

19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

20 இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.

21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

22 வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை; மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை; மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்; நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.

23 வீணாக அவர்கள் உழைப்பதில்லை; தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை; ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோர்pன் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.

24 அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.

25 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 66


1 ஆண்டவர் கூறுவது இதுவே; விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?

2 இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.

3 அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும் மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்; ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும் நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்; உணவுப் படையலைப் படைப்பதும், பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்; நினைவுப் படையலாகிய தூபம் காட்டுதலைச் செய்வதும் சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்; அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்; தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.

4 நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்; அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்; ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை; நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை; என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்; நான் விருப்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.

5 ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்; என் பெயர் பொருட்டு உங்களை வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார் "நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்" என்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள்.

6 இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது! திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது! ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க பதலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது!

7 வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்!

8 இத்தகைய நிகழ்ச்சிபற்றிக் கேள்வியுற்றவர் யார்? இதைப்; போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்? ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகிட இயலுமா? ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா? ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள்.

9 பேறுகாலத்தை ஏற்படுத்திய நான் மகப்பேற்றைத் தடை செய்வேனா? என்கிறார் ஆண்டவர். மகப்பேற்றுக்குக் காரணமான நான் கருப்பையை அடைத்துவிடுவேனா? என்கிறார் உங்கள் கடவுள்.

10 எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.

11 அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

12 ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

13 தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

14 இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.

15 இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்; அவர் தேர்கள் புயலென விரையும்; கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்; தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது.

16 தம் நெருப்பையும் வாளையும் கொண்டு மானிடர் அனைவர்மீதும் ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவார்; எண்ணிறந்தோரை ஆண்டவர் கொன்றுவிடுவார்.

17 தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.

18 அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.

19 அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

20 அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

21 மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

22 நான் படைக்கின்ற புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் என் முன்னே நிலைத்திருப்பது போல், உங்கள் வழித்தோன்றல்களும் உங்கள் பெயரும் நிலைத்திருக்கும், என்கிறார் ஆண்டவர்.

23 அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர், என்கிறார் ஆண்டவர்.

24 அவர்கள் புறப்பட்டுச் சென்று, என்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோரின் பிணங்களைக் காண்பார்கள்; அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை; அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை; மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள்.

 

 


எசாயா தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு
எசாயா தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு




Labels:
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *